கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், பல தசாப்சதங்களில் இல்லாத அளவிற்கு முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் சரிந்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு சீனா.
சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம் 2020-ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது.
கிட்டத்தட்ட 3 தசாப்தங்களுக்கு முன்னர், முதல்முறையாக சீனாவின் ஜிடிபி கணக்கெடுப்பு துவங்கியதியில் இருந்து இதுதான் மோசமான பொருளாதார வீழ்ச்சியாக கருதப்படுகிறது.
சீனா பொருளாதாரத்திற்கு விழுந்துள்ள பலத்த அடி, உலகின் மற்ற நாடுகளுக்கும் கவலை அளிக்கக்கூடிய தகவல்தான்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியான சீனா, அதிகளவிலான பொருட்களை உற்பத்தி செய்யும் நாடு. அதோடு, நுகர்வோர் திறனும் அதிகம் கொண்ட நாடு.
“ஜனவரி – மார்ச் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவால், பலரும் நிரந்தர வருமான இழப்புகள் நேரிட காரணமாக இருக்கும். சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதோடு, வேலைவாய்ப்பின்மையும் அதிகரிக்கும்” என்கிறார் பொருளாதார புலனாய்வு பிரிவின் யூசூ.
கடந்த ஆண்டு முதல் காலாண்டில் அமெரிக்காவுடனான வணிகப்போரில் முடங்கியிருந்தபோதுகூட, 6.4% என்ற நல்ல பொருளாதார வளர்ச்சியை காண்பித்தது சீனா.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆண்டுக்கு 9% என சராசரி பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. எனினும் இந்த தரவுகள் உண்மையானதா என பல்வேறு பொருளாதார நிபுணர்களும் கேள்வி எழுப்புவது வழக்கமாக இருந்தது.
ஜனவரி மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காக சீனா முழுவதும் பெருமளவில் முடக்க நிலை அமலில் இருந்ததால் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்து இருந்தது.
பொருளாதார வல்லுநர்கள் கணித்த அளவைவிட சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவல்கள் சற்று மோசமாக இருக்கின்றன.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளில் முக்கியமானவை பின்வருமாறு:
1. உற்பத்தித்துறை நடவடிக்கைகளை சீனா மீண்டும் தொடங்கியிருந்தாலும் மார்ச் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி அளவு 1.1 சதவிகிதம் குறைவாக உள்ளது
2. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததால் மார்ச் மாதத்திற்கான சில்லறை வர்த்தகம் 15.8 சதவிகிதம் சரிந்துள்ளது.
3. இதுவரை இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதம் வேலைவாய்ப்பின்மை 6.2 சதவீதமாக இருந்தது. நிலைமை சற்றே முன்னேறி மார்ச் மாதம் 5.9% ஆகியுள்ளது.
பொருளாதாரம் மீதான எதிர்மறைத் தாக்கங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் சீன அரசும் பல உதவி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
ஆனால் பிற முன்னேறிய நாடுகள் அறிவித்துள்ள அளவுக்கு இந்த உதவிகள் இல்லை.
“பெரிய அளவில் அரசாங்க நிதி உதவி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் பெய்ஜிங்கில் அதற்கு பெரிய ஆதரவு இல்லை 2021ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் எனும் நோக்கில் இந்த ஆண்டு குறைவான வளர்ச்சியை சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்கிறார் ஆக்ஸ்போர்டில் எகனாமிக்ஸ்-இன் வல்லுனர் லூயிஸ் குய்ஜ்.
தகவல் இல்லை
மார்ச் மாதம் முதல் தொழிற்சாலைகள் இயங்கவும் கடைகளை திறக்கவும் சீன அரசு மெல்ல மெல்ல அனுமதித்து வருகிறது. இது முடக்க நிலைக்கு முந்திய நிலைக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கையாக உள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தித் துறையை தமது பொருளாதார வளர்ச்சிக்காக பெருமளவில் சார்ந்திருக்கும் சீனா ”உலகில் தொழிற்சாலை” என்று கூறப்படுகிறது.
சமீபத்திய சீன அரசின் பொருளாதார தரவுகளுக்கு பங்குச் சந்தைகளில் கலவையான எதிர்வினைகளை கிடைக்கின்றன.
ஷாங்காய் மற்றும் ஜப்பான் பங்குச்சந்தைகளில் சிறிய முன்னேற்றம் உள்ளது.
அமெரிக்காவின் முடக்கநிலை மெல்ல மெல்ல தளர்த்தப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளதே அதற்கு முக்கியக் காரணம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com