உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் 16 மில்லியன் பேர் தங்கள் கணக்கை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
இருப்பினும் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 7.5 மில்லியன் கணக்குகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதம் வெளியிடவிருந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் சில நிகழ்ச்சிகள் தாமதமாவதால் வருங்காலத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அது குறைக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்திருந்தாலும் ஊரடங்கு காலத்திற்கு பிறகு அதன் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியாமா என்பதும் பெரிய கேள்விகுறியே என்கிறார் பிபிசியின் தொழில்நுட்ப பிரிவு செய்தியாளர் ஜோ தாமஸ்.
மேலும், டிஸ்னி ப்ளஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்டிரிமிங் சேவைகளும் புதிய சந்தாதாரர்களை ஈர்க்க நிகழ்ச்சிகளை வழங்கி வருவதால் அதிகப்படியான போட்டியும் நிலவுகிறது என்கிறார் ஜோ தாமஸ்.
உலகமுழுவதும் தற்போது நெட்ஃபிலிக்ஸிற்கு 182 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் அதிகப்படியாக 7 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
வட கொரியா தலைவர் உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல – தென் கொரிய அதிகாரிகள்
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.
ஆனால், 36 வயதான கிம் ஜாங்-உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த அறிகுறிகளும் வட கொரியாவில் நிலவவில்லை என தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல.
கொரோனாவுக்கு எதிராக போராட கேரள அரசுக்கு உதவிய ‘குடும்பஸ்ரீ’ பெண்கள் அமைப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்றை சமாளிக்க போராடிக் கொண்டிருக்கும் போது கேரளாவை சேர்ந்த பெண்கள் இதற்கு வழி காட்டியுள்ளனர். மற்ற இந்திய மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்திருந்தது.
இருக்கும் வளங்களை வைத்து இந்த பேரழிவை சமாளிப்பதே அரசின் வேலை. ஆனால் அது இப்போது இருக்கும் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து விடாது. இப்போது உள்ள சூழலில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஒரு பெரிய நிறுவனம் போன்ற அமைப்பு தேவைப்படுகிறது. அந்த தேவையை குடும்பஸ்ரீ நிறைவேற்றுகிறது.
ஒரு மாநிலத்தில் இருக்கும் அனைவருக்கான தேவையை நிறைவேற்றி அனைத்து குடும்பத்தின் உடல்நலம் குறித்த தகவலை சேகரிப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது. இந்த இரண்டு வேலையும் மிகப்பெரிய வேலை. இவற்றை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் குடும்பஸ்ரீ என்னும் அமைப்பு இதை மிக சிறப்பாக செய்து வருகிறது. தேவைப்படும் மக்களுக்கு உணவு அளிப்பதிலிருந்து அவர்களின் ஆரோக்கியத்தை காக்கும் பணிவரை சிறப்பாக செய்கின்றனர்.
மேலும் படிக்க:கொரோனாவுக்கு எதிராக போராட கேரள அரசுக்கு உதவிய ‘குடும்பஸ்ரீ’ அமைப்பு
கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்க காற்று மாசும் காரணமா?
காற்று மாசு அளவு அதிகமாக இருந்தால் கோவிட்-19 உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.
சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளில், காற்று மாசு அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
காற்று மாசு அதிகம் உள்ள நாடுகள், கோவிட்-19க்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் திட்டத்தில், மாசு அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் பொது சுகாதார நிபுணர் டாக்டர் மரியா நெய்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க:கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்க காற்று மாசும் காரணமா?
ஊரடங்கு சமயத்தில் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரசவ வலியில் நடந்து வந்து கொண்டிருந்த கர்ப்பிணிக்கு, இளம் காவலர் சையது அபுதாஹீர் வாகன ஏற்பாடு செய்து உதவியதோடு ரத்ததானமும் செய்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ளார்.
“அந்த தருணத்தை நினைத்தாலே அழுகை வருகிறது. தக்க சமயத்தில் உதவிய காவலருக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை,” என கண்கலங்குகிறார் சுலோச்சனா.
“எனது கணவர் கட்டட வேலை செய்பவர். ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், 108 அவசர வாகனத்தை அழைத்து, ரெட்டியாபட்டியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நானும், எனது கணவர் மற்றும் அக்கா என மூவரும் பிரசவத்திற்காக வந்தோம். பரிசோதனை செய்த மருத்துவர், ‘எனது உடலில் ரத்த அளவு குறைவாக உள்ளது. எனவே, ரத்தம் ஏற்பாடு செய்துவிட்டு நான்கு நாட்களுக்கு பிறகு வாருங்கள்’ என கூறினார்.”
மேலும் படிக்க: கொரோனா வைரஸ்: ஊரடங்கு சமயத்தில் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com