Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?

தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர்.

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கியூபா மருத்துவ பணிகளில் சிறப்பாக செயல்படும் நாடாக அறியப்படுகிறது. ஆனால் மருத்துவ துறையில் பல சர்ச்சைகளையும் எதிர்கொண்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் கியூபா நாட்டில் இருந்து உலகின் எந்த நாடுகளும் மருத்துவ உதவிகளை பெற வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார். கியூபாவின் மருத்துவ சிகிச்சை மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்தி இருந்தார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் கியூபா மறுத்து வருகிறது.

கியூபாவில் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1337 ஆக உள்ளது. இதுவரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஆனால் உலகிலேயே மக்கள்தொகைக்கு அதிக விகிதமுள்ள மருத்துவர்களை கொண்ட நாடாக கியூபா அறியப்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரசை எதிர்கொள்ளக் கியூபா தயாராகிவிட்டது.

தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், சுகாதார பாதுகாப்புக்கும், சமூகம் சார்ந்த சுகாதார பராமரிப்புக்கும் கியூபா புகழ்பெற்றது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

நாடுகளுடனான நட்பை காக்கும் கியூபா

தென் ஆஃப்ரிக்காவில் வெள்ளையர்கள் சிறுபான்மையினரை ஆட்சி செய்தபோது வெள்ளையர்களை எதிர்த்து போராடுவதில் கியூபா முக்கிய பங்கு வகித்தது. 1994ல் நெல்சன் மண்டேலா அதிபராக பொறுப்பேற்கும் வரை வெள்ளையர்களை எதிர்த்து இரு நாடுகளும் இணைத்து நடத்திய போராட்டம் தொடர்ந்தது.

தற்போது கோவிட் 19 வைரஸை எதிர்த்து போராட கியூபா மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தென் ஆஃப்ரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது.

தென் ஆஃப்ரிக்காவில் கியூபா மருத்துவர்கள்

ஞாயிற்றுக்கிழமை இரவு கியூபா மருத்துவர்கள் தென் ஆஃப்ரிக்காவின் ஜோஹன்னேஸ்பேர்க் விமானநிலையம் வந்து சேர்ந்துள்ளனர். அங்கிருந்து தென் ஆஃப்ரிக்காவின் பல மாகாணங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தென் ஆஃப்ரிக்க சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

இதுவரை தென் ஆஃப்ரிக்காவில் மட்டும் 4,361 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 86 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் அடுத்த மாதம் ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்த தென் ஆஃப்ரிக்கா தயாராகிவருகிறது.

முதல் கட்டமாக 1.5 மில்லியன் மக்கள் தங்கள் அலுவலக பணிகளுக்கு திரும்ப தயாராகவுள்ளனர். சில பள்ளிகளும் திறக்கப்படும், வீட்டிற்கு சமைத்த உணவுகளை கொண்டு சேர்க்கும் பணிகள் துவங்கும், சிகரெட் விற்பனை துவங்கும் என பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆனால் மக்கள் கூடுவதற்கும், மது விற்பனைக்கும் தடை நீடிக்கும்.

ஒரு கட்டத்தில் பிரிட்டனை போல வைரஸ் தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது எதிர்பாராத அளவு வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என பிபிசி செய்தியாளர் ஆன்ட்ரூ ஹார்டிங் கூறுகிறார்.

ஊரடங்கு தளர்த்தப்படுவதால் மக்கள் யாரும் அதிக நம்பிக்கை அடைய வேண்டாம். ஆகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை சென்றடையும் நிலைக்கு தள்ளப்படுவோம் என தென் ஆஃப்ரிக்கா அதிபர் சிரில் ராமபோசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸால் ஏற்படவிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தென் ஆஃப்ரிக்கா 26 பில்லியன் டாலர்கள் தேவை என சர்வதேச அளவில் நிதியுதவி கோரியுள்ளது. மேலும் தென் ஆஃப்ரிக்காவில் வருமானம் இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு நிதி உதவிகளையும் நலத்திட்ட உதவிகளையும் அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »