Press "Enter" to skip to content

இந்தியப் பெருங்கடல், 16 நாடுகள் – 12,000 கிமீட்டர் தூரம்: வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்

வியக்கத்தக்க 7500 மைல் பயணத்தை நிறைவு செய்கிறது குயில் இனப் பறவை ஒன்று.

குயில் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று தென் ஆப்ரிக்காவில் இருந்து மங்கோலியாவிற்கு சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணித்ததை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

குளிர்காலங்களில் சாம்பியாவில் வாழும் இந்த பறவை 16 நாடுகளை தாண்டிப் பறந்துள்ளது. வழியில் பெருங்கடல்கள், அதிக காற்று என அனைத்தையும் எதிர்கொண்டுள்ளது.

இது ஒரு வியக்கத்தக்கப் பயணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மங்கோலிய விஞ்ஞானிகள் மற்றும் பிரிட்டனின் பறவையியல் அறக்கட்டளை இணைந்து பறவைகளின் நெடுந்தூர இடம்பெயர்வுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக ஐந்து குயில் இனப் பறவைகளை செயற்க்கைக்கோள் மூலம் கண்காணித்தனர் அதில் ஓனன் என்று அழைக்கப்படும் பறவை மட்டுமே தனது நெடுந்தூர பயணத்தை நிறைவு செய்துள்ளது.

இந்த ஓனன் பறவை ஓய்வேதும் எடுக்காமல் இந்தியப் பெருங்கடலை மணிக்கு 60 கிமீட்டர் வேகத்தில் கடந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கென்யா, செளதி அரேபியா மற்றும் வங்கதேசம் என உலகின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் நாடுகளையும் தனது பயணத்தில் கடந்துள்ளது.

ராகுல் காந்தியின் கொரோனா வைரஸ் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

கொரோனா தொற்று வெகு வேகமாகப் பரவிவரும்போது ஊரடங்கை தளர்த்திய ஒரே நாடு இந்தியாதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

அத்துடன், தொற்று பரவுவது மே மாத இறுதியில் குறைந்துவிடும் என்று பிரதமர் சொன்னார். ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக தற்போது தொற்று வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இணைய தளம் மூலமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்திய ராகுல் காந்தி, தேசிய அளவிலான ஊரடங்கு, (அல்லது முடக்க நிலை) தோல்வியடைந்துவிட்டதாக கூறிய ராகுல்காந்தி, நான்கு கட்ட முடக்க நிலையால் பிரதமர் குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படவில்லை என்பதையும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார்.

“முடக்கநிலை அமலாக்கப்பட்டபோது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக மூன்று நாட்கள் மட்டுமே ஆனது. ஆனால் தற்போது 13 நாட்கள் ஆகின்றன. இதுவே இந்த முடக்கநிலையின் வெற்றி,” என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ‘இரட்டை நாக்கு’: ராகுல் காந்தியின் ஊரடங்கு விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 55.

கொழும்பிலுள்ள தனது வீட்டில் சுகயீனற்ற நிலையில், தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே காலமானதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.

இந்தியாவுக்கான இலங்கை தூதர் கோபால் பாக்லேவை ஆறுமுகன் தொண்டமான் நேற்று சந்தித்ததாக, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

ஒரு மாற்றுத்திறனாளியின் நடைபயணம்

சித்தாள் வேலை தேடி சென்னையில் இருந்து சிதம்பரம் சென்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், ஊரடங்கு காரணமாக வேலையும் கிடைக்காமல், செலவுக்கும் கையில் பணம் இல்லாமல் சென்னைக்கு மீண்டும் நடந்தே திரும்ப முயன்றுள்ளார்.

ஊர் திரும்பும் வழியில் புதுச்சேரி அருகே இதனை அறிந்து காவல்துறையினர் அந்த பெண்ணிற்கு உதவி செய்து, பாதுகாப்பாக லாரி மூலம் வழியனுப்பி வைத்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில் பகுதியில் வசித்து வருபவர் 35 வயதாகும் சிவராணி. இவருக்கு செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி இவர்.

மே 18ஆம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊரான சிதம்பரத்திற்கு வந்த இவர், தனது குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கலாம் என்று சித்தாள் வேலை தேடி அலைந்துள்ளார்.

ஆனால், கடலூர் மாவட்டத்தில் முழுவதுமாக ஊரடங்கு தளர்வு செய்யப்படாத காரணத்தினால், அவருக்கான வேலை சிதம்பரத்தில் கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் முயற்சித்தும் அவருக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: வறுமை, ஊரடங்கு, வேலையின்மை: ஒரு மாற்றுத்திறனாளியின் நடைபயணம்

பாகிஸ்தான் விமான விபத்தில் இறந்ததாக கருதப்படும் பெண் மீது இணைய வசவுகள் ஏன்?

பாகிஸ்தானில் மே 22ஆம் தேதி நடந்த விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்படும்சாரா அபீத் என்ற ஒரு முன்னணி மாடல், ஒரு ‘ஒழுக்கக்கேடான வாழ்க்கையை’ வாழ்ந்ததாக இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

சாராவின் உடை மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து கடுமையான விமர்சனங்கள் வந்ததால், அவரது சமூக ஊடக கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

28 வயதான சாரா, கராச்சியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்று பயணிகள் பட்டியல் மற்றும் சாராவின் நண்பர்கள் மூலம் தெரியவருகிறது.

உயிரிழந்தவர்களின் பெயர்கள் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. ஆனால், அதில் பயணித்தவர்களில் இரண்டு ஆண்கள் மட்டுமே உயிர்பிழைத்ததாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ஆனால், தனது சகோதரி உயிர்பிழைத்துள்ளார் என்றும், போலிச் செய்திகளை பரப்புவதை நிறுத்துமாறும் அவரது சகோதரர் கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க:பாகிஸ்தான் விமான விபத்தில் இறந்ததாக கருதப்படும் பெண் மீது இணைய வசவுகள் ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »