ஜார்ஜ் ஃப்ளாய்டு: 8 நிமிடம், 46 நொடிகள் – நடந்தது என்ன?
கொரோனா வைரஸால் உலகிலேயே மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். 18 லட்சம் பேர் நோயால் அவுதியுற்றுள்ளார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். பொருளாதாரம் முடங்கிப்போயிருக்கிறது.
ஆனால் போலீஸ் பிடியில் இருந்த ஒரு கறுப்பின நபர் இறந்த பின் அமெரிக்காவின் பெரும்பகுதி பற்றி எரிய தொடங்கியிருக்கிறது.கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய சீற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பதுங்கு குழிக்குள் செலவழித்துள்ளார். என்ன தான் நடக்கிறது அமெரிக்காவில்? மேலேயுள்ள காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
I Can’t Breathe
என்னால் மூச்சுவிடமுடியவில்லை- ஒரு போலீஸ் அதிகாரி தனது கழுத்தில் காலை வைத்து நெரிக்கும்போது ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு பரிதாபமாக அலறினார். ஆனால் எதையும் காதில் வாங்காத அந்த வெள்ளையின போலீஸ் தொடர்ந்து அழுத்த, ஃபிளாய்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம்தான் தற்போது அமெரிக்காவே வன்முறையால் பற்றி எரிவதற்கு காரணம். கடந்த மே மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தின் மின்னியாபொலிஸ் நகரத்தில் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்டு Cup Foods எனும் கடையில் சிகரெட் வாங்கச் சென்றுள்ளார்.
அவர் கொடுத்த 20 டாலர் நோட்டு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய் மதிப்பு கொண்ட அந்த நோட்டு போலியானது என அந்த கடையின் பதின்மவயது ஊழியர் சந்தேகித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறைக்கு ஃபோன் செய்து புகார் கொடுத்திருக்கிறார். 911 என்ற எண்ணுக்கு அவர் ஃபோன் செய்து என்ன சொன்னார் என்பது தற்போது எழுத்து வடிவமாகவே அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அந்த பதின்ம வயது ஊழியர், ஜார்ஜ் குடித்திருப்பது போல தெரிவதாகவும், அவர் கட்டுப்பாட்டிலேயே இல்லை என தெரிவித்திருக்கிறார்.
அடுத்த ஏழு நிமிடங்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் அங்கே வந்துவிட்டார்கள். ஒரு மூலையில் காரை பார்க் செய்துவிட்டு அதனுள் இருவருடன் உட்கார்ந்திருந்தார் ஃஜார்ஜ்.
காரை சென்றடைந்த அதிகாரிகளில் ஒருவரான தாமஸ் லென் தனது துப்பாக்கியை எடுத்து நீட்டி ஃப்ளாயிடை கையை நீட்டுமாறு சொல்கிறார். அந்த சமயத்தில் அவர் ஏன் தேவையில்லாமல் துப்பாக்கியை எடுத்து நீட்டினார் என்பது இன்னும் விளக்கப்படவில்லை.
கள்ளநோட்டு பரிமாறியதாகச் சொல்லி, காரை விட்டு இறங்க மறுத்த அவரை கை விலங்கிட்டது போலீஸ். பொது இடத்தில் நடந்த சம்பத்தால் உச்சகட்ட பயமும், ஒருவித எரிச்சலும் அடைந்த நிலையில் கீழே விழுந்தார் ஜார்ஜ். தனக்கு claustrophobic பாதிப்பு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றும் முயற்சியில் டெரெக் சாவின் எனும் அதிகாரியும் களமிறங்கினார்.அப்போது கீழே விழுந்த ஃபிளாய்ட் சந்தித்த மோசமான நிமிடங்களை பலர் தங்களது மொபைலில் ரெக்கார்ட் செய்தனர். 44 வயதாகும் டெரெக் சாவின் தனது இடது கால் முட்டியை ஜார்ஜின் தலைக்கும் கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்தினார். “I can’t breathe,” “please, please, please” என ஜார்ஜ் அலறினார். எட்டு நிமிடங்கள் 46 நொடிகள் தனது காலை வைத்து அழுத்தினார் ஜார்ஜ். ஆறு நிமிடங்கள் முடிந்த போதே ஜார்ஜ் மூர்ச்சையாகிவிட்டார். அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்பது வீடியோவில் தெரிந்தது. அங்கே சென்றுகொண்டிருந்தவர்கள் ஜார்ஜின் நாடித்துடிப்பை சோதிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
ஒரு அதிகாரி ஃபிளாய்டின் வலது மணிக்கட்டில் நாடித்துடிப்பை சோதனை செய்ய, அதன் பின்னர் சாவின் தனது முட்டியை எடுத்தார். ஆம்புலன்ஸ் மூலம் ஜார்ஜ் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட, ஒரு மணி நேரத்துக்கு பின் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
யார் இந்த ஜார்ஜ் ஃபிளாய்டு?
டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்த ஜார்ஜ் பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக மின்னியாபோலிஸ் நகருக்கு வந்துவிட்டார். அந்த நகரில் சமீபகாலமாக ஒரு பௌன்சராக வேலை செய்துவந்தார். தற்போது பல லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனாவால் வேலையின்றி தவிப்பது போலவே ஜார்ஜுக்கும் வருமானமில்லை.
அவர் கப் ஃபுட்ஸ் கடைக்கு அடிக்கடி வருபவர். ஒரு நண்பரை போன்ற முகத்துடன் சிரித்து பேசக்கூடிய, எந்தவித தீங்கும் விளைவிக்காத நபர் அவர் என்கிறார் அந்த கடையின் முதலாளி மைக் அபுமேயல்லா.
சம்பவ தினத்தன்று அமுபேயல்லா தனது கடையில் இல்லை என்கிறார். தனது ஊழியர் சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு ஃபோன் செய்ததாக கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து விரிவாக அறிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com