Press "Enter" to skip to content

இந்தியா – சீனா எல்லை மோதல்: சீன எல்லையில் இந்தியப் படைகளுக்கு சவால்கள் என்ன?

ஜுகல் புரோகித்
பிபிசி செய்தியாளர்

பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாட்டு எல்லைக் கோடு என்ற பதத்துடன் இந்தியர்களால் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

இந்திய நிர்வாகத்தின் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் நடுவே 740 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (Line of Control – LoC) இருக்கிறது.

இது தொடர்பாக பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்கள் காரணமாக அது செய்திகளில் இடம்பெறுவதும் தவிர்க்க படுவதில்லை.

ஆனால் line of actual control (LAC) எனப்படும் நீயான கட்டுப்பாட்டு கோடு குறித்த செய்திகள் அதிகமாக வெளியாவதில்லை இந்த கோடு இந்தியா மற்றும் சீனாவின் நடுவே உள்ளது.

3,488 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மெய்யான கட்டுப்பாட்டு கோடு, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை விட சுமார் ஐந்து மடங்கு நீளமானது.

யூனியன் பிரதேசமான லடாக் மற்றும் பிற நான்கு இந்திய மாநிலங்களின் எல்லையை ஒட்டி இது அமைந்துள்ளது.

கோடு என்று இது அழைக்கப்பட்டாலும் இது உண்மையாகவே ஒரு கோடு கிடையாது. ஏனென்றால் இது இதுவரை தெளிவாக வரையறுக்கப்படவில்லை. மெய்யான கட்டுப்பாட்டு கோடு என்று இந்திய அரசும் சீன அரசும் வெவ்வேறு எல்லைப் பகுதிகளை வரையறுக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அரசுகள் இடையே ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை.

இந்த பகுதியில்தான் ஆயுதங்கள் இல்லாத கைகலப்பு, நேருக்கு நேர் எதிர் நின்று சண்டையிடும் நிலைக்கு செல்வது, சிறு அளவிலான சண்டைகள் மட்டுமல்லாது ஒரு யுத்தமும் நடந்துள்ளது.

சரியான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை இந்தியா எவ்வாறு காவல் காக்கிறது?

இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் எனப்படும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படைதான் இந்த மெய்யான கட்டுப்பாட்டு கோட்டை காப்பதற்கான தனி அமைப்பு என்று இந்தியாவின் உள்துறை அமைச்சகம் 2004ஆம் ஆண்டு அறிவித்தது.

இதற்கு முன்பு இந்தோ திபெத்திய காவல்படை இன்னொரு துணை ராணுவப்படை யான அசாம் ரைஃபிள்ஸ் படைக்கு உதவியாக இருந்தது.

1962ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் போரில் ஈடுபட்டிருந்தபோது அதே ஆண்டில் அக்டோபர் 24ஆம் தேதி இந்தக் காவல் படை உருவாக்கப்பட்டது.

ஜெய்வீர் சவுத்ரி இந்தோ திபெத்திய காவல்படையில் துணை ஐ.ஜி-யாக இருந்த 2019 ஆண்டு ஓய்வு பெற்றார்.

தனது 37 ஆண்டு கால காவல் பணியில் மெய்யான கட்டுப்பாட்டு கோடு என்று அழைக்கப்படும் இந்திய – சீன எல்லையில் இருக்கும் இந்த பகுதி அமைந்துள்ள அனைத்து மாநிலங்களிலும் கடமையாற்றியுள்ளார்.

இது எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்று பிபிசி அவரிடம் கேட்டது.

இந்தோ திபெத்திய காவல்படையின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்கிறார் அவர்.

அந்தப் படை சரியாக கடமையாற்ற தேவை படுவதற்கும் அந்தப் படைக்கு கிடைப்பதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக அவர் கருதுகிறார்.

2018-19ஆம் ஆண்டில் இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கையின்படி இந்திய சீன எல்லையில் இந்தோ திபெத்திய காவல்படையின் 32 பட்டாலியன்கள் அனுப்பப்பட்டன. ஒரு பாட்டாலியனு க்கு ஆயிரம் படை வீரர்கள் என்று அரசு வரையறுக்கிறது.

ஆனால் இந்த புள்ளி விவரங்களை கேட்டு ஜெய்வீர் சவுத்ரி சிரிக்கிறார்.

உலகிலேயே மிகவும் உயரமான எல்லைப் பகுதிகளில் ஒன்றான இந்திய சீன எல்லையில் ஒரு பட்டாலியன் 110 கிலோ மீட்டர் தூரத்தை காவல் காக்கவேண்டும். அங்கு இருக்கும் மலைப் பகுதிகளின் உயரம் 9000 அடி முதல் 18,750 அடி. இவ்வளவு நீளமான நிலைக்கு இந்த எண்ணிக்கை குறைவானது என்று அவர் கூகிறார்.

அவரிடம் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்திய-சீன எல்லைப்பகுதியை கண்கானிப்பதில் உள்ள சவால்கள்?

இந்திய-சீன எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு 178 எல்லைச் சாவடிகள் உள்ளன 3478 கிலோ மீட்டர் தொலைவுக்கு 178 எல்லை சாவடிகள் என்றால் ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் இடையே இருக்கும் தூரம் சுமார் 20 கிலோமீட்டர்.

“உயரமான மலைப்பகுதிகளில் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருப்பதையே சரியாக பார்க்க முடியாது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள காடுகளின் நிலையும் இதேதான். சில நேரங்களில் இரண்டு அடிக்கு அப்பால் இருக்கும் எதையுமே காண முடியாத நிலை கூட உருவாகும். இந்தியாவிடம் அறிவியல்பூர்வமான மற்றும் முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது,” என்கிறார் அவர்.

இந்த போதாமைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் உள்ளதா என்று பிபிசி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் பல்வேறு நினைவூட்டல்களுக்கு பின்பும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்திய அரசுக்கு இவை குறித்து தகவல்கள் நன்றாகவே தெரியும் என்றும் இந்த போதாமைக்கு காரணமாக நிதிப்பற்றாக்குறையை கூறப்படுகிறது என்றும் கூறுகிறார் சவுத்ரி.

உதாரணமாக முதலில் 10 வாகனங்களுக்கும் அந்த வாகனங்களுக்கான எரிபொருள் வாங்கவும் நிதி ஒதுக்கப்படும். பின்பு 5 வாகனங்கள் வாங்க மட்டுமே நிதி ஒதுக்கப்படும். அவற்றுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக நிதி ஒதுக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் 2009-10 ஆம் ஆண்டில் இந்தோ தீபத்திய எல்லைக் காவல்படைக்கு 1134.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2018-19ஆம் ஆண்டில் 6190.72 கோடியாக உயர்ந்துள்ளது குறித்து அவரிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.

ஆனால் படையினரின் எண்ணிக்கையும் தற்போது நிதி ஒதுக்கீட்டை போலவே அதிகரித்துள்ளது என்று கூறுகிறார் ஜெய்வீர் சவுத்ரி.

எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல அந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

எல்லை பிராந்தியத்தில் இந்தோ திபெத்திய காவல்படைக்கு அடுத்த நிலையிலுள்ள காவலுக்கு இந்திய ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் இந்தோ திபெத்திய காவல்படை இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய ராணுவம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன. எல்லையோர காவலுக்கு மட்டும் என்று ஏன் ஓர் அமைச்சகம் இருக்கக்கூடாது. அதற்காக வேண்டி பிரத்தியேகமான அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

‘இந்தோ – திபெத்திய காவல்படைக்கு கூடுதல் கவனம் தேவை’

இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டலத்தில் கமாண்டராக இருந்து ஓய்வு பெற்றவர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா.

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் இருக்கும் அவரிடம், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு மற்றும் மெய்யான கட்டுப்பாட்டு கோடு ஆகியவை குறித்து பிபிசி பேசியது.

இந்தோ – திபெத்திய காவல்படைக்கு இன்னும் கூடுதலான கவனம் தேவை என்று அவர் கருதுகிறார்.

அந்தப் பகுதியில் தொழில்நுட்பத்தில் இன்னும் அதிகமாக முதலீடு செய்யப்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

நில அமைப்பு மிகவும் கரடுமுரடானதாக இருக்கும். சில நேரங்களில் போதிய அளவு பூட்ஸ்கள் கூட இருக்காது என்று ஹூடா கூறுகிறார்.

இவற்றுக்கான காரணம் நிதிப்பற்றாக்குறையா, புரிதல் இன்மையா அல்லது முடிவுகள் எடுக்கும் நிலையில் இருப்பவர்களிடம் போதிய விழைவு இல்லாமல் இருப்பதா என்றும் மெய்யான கட்டுப்பாட்டு கோடு ஏன் போதியளவு கவனம் பெறாமல் இருக்கிறது என்று பிபிசி அவரிடம் கேட்டது.

அந்தப் பிராந்தியத்தை பற்றிய தெளிவு மற்றும் புரிதல் இருக்கிறது. ஆனால் அதன் நில அமைப்புதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அங்கு நீடித்து இயங்குவது மிகவும் கடினமானது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது கூட சுலபமானதல்ல என்று அதற்கு அவர் பதில் அளித்தார்.

சீனா எவ்வாறு செயல்படுகிறது?

மெய்யான கட்டுப்பாட்டு கோட்டுக்கு அந்தப் பகுதியில் உள்ள சீன தரப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் ஜெய்வீர் சவுத்ரி பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

எப்பொழுதெல்லாம் படையினர் மெய்யான கட்டுப்பாட்டு கோடு அருகே விளைந்தது படுகிறார்களோ அப்பொழுது அவர்களுடன் ஓர் அரசியல் பிரதிநிதியும் இருப்பார். அவரின் வழிகாட்டலுக்கு இணங்கவே அந்தப் படையினர் செயல்பட வேண்டும்.

அந்தவகையில் அந்தப் படையினர் சுதந்திரமாக செயல்பட முடியாமல் போவது, தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமல் போவது ஆகியவை அவர்களின் ஒரு குறைபாடு என்றே கூறலாம் என்று அவர் கருதுகிறார்.

ஆனால் உள்கட்டமைப்பு வசதிகள் அவர்களிடம் நன்றாக இருப்பதாக ஜெய்வீர் சவுத்ரி கருதுகிறார். ஒரு படை தளத்தில் இருந்து இன்னொரு படைத்தலதிற்கு ரயில் மூலம் 12 மணி நேரத்தில் அவர்களால் ஒட்டுமொத்த படையினரையும் மாற்ற முடியும்.

“ஆனால் அதையே நமக்குச் செய்ய ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேவை. அவர்களின் தேவை அடிப்படையில் அவர்களது உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை அவர்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர்.”

“சீன பகுதியில் இருக்கும் எல்லையோரத்தில் அமைந்துள்ள சாலைகளில் ஜெட் விமானங்கள் கூட இறங்க முடியும். எல்லைக்கு அருகே உள்ள சீனப் பகுதிகளில் ரயில்களும் விமானப்படைத் தளங்களும் ஆண்டு முழுவதும் இயக்கத்தில் இருக்கின்றன. அவர்களுடன் இந்திய தரப்பை ஒப்பிட வேண்டியதில்லை. இந்தியாவின் பணிகள் தொடங்கிவிட்டன. எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டுமோ அதையெல்லாம் துரிதகதியில் இங்கே செய்யப்படுகின்றன. ஆனாலும்கூட படையினரையும் படைக் கருவிகளையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் மாற்றுவது என்று வரும் போது சீனா அளவுக்கு இந்திய தரப்பு அவ்வளவு வலிமையானதாக இல்லை,” என்று அவர் கருதுகிறார்.

“நம்மிடம் எந்த வசதிகள் இருக்கின்றனவோ அவற்றை மட்டுமே படைகளில் செலுத்தும் வழக்கம் இந்திய தரப்பிடம் உள்ளது. இது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொரு படையின் தேவைக்கு ஏற்ப ஆய்வுகள் செய்யப்பட்டு அந்தந்த பகுதிக்கு ஏற்ற வகையில் தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அதை நோக்கிய சிந்தனை மாற்றம் நிகழ வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்திய ராணுவம் அங்கு எப்படி உள்ளது?

இந்திய ராணுவமும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையும் அந்த பகுதியில் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவர் கூறினாலும் ராணுவத்தில் உள்ள சிலர் கூறுவது போல இந்தோ திபெத்திய காவல்படையின் செயல்பாடுகள் மீது தங்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் அது சரியானதாக அமையாது என்கிறார் அவர்.

“ஒவ்வொரு படைக்கும் ஒவ்வொரு பங்கு உண்டு. எந்த படையினரும் தாங்கள்தான் பெரியண்ணன் எனும் நோக்கில் செயல்படக்கூடாது. ஆனாலும் ராணுவத் தரப்பில் தாங்கள்தான் பெரியண்ணன் என்பது போன்ற நோக்கத்துடன் செயல்படும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் மீறித்தான் இரு படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இரண்டு படைகளையும் ஒரே தலைமையின் கீழ் கொண்டுவருவது, எப்பொழுதும் நமது நோக்கமாக இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கருத்துகளை அறிய பிபிசி முற்பட்டது. ஆனால் அந்த அமைச்சகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »