ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டில் நடந்த அமைச்சரவை கூட்டமொன்றில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலந்துகொண்ட அந்நாட்டின் பிரதமரான அமாடோ கோன் கோலிபாலி அதற்கு பின்பு உயிரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் அக்டோபர் மாதத்தில் அந்நாட்டில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளராக 61 வயதான அமாடோ கான் கோலிபாலி தேர்தெடுக்கப்பட்டு இருந்தார்.
தற்போதைய அதிபரான அலசானி ஒட்டாரா மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்று கூறியிருந்தார்.
இரண்டு மாதங்களாக பிரான்சில் தங்கியிருந்து இதய சிகிச்சை எடுத்துக் கொண்ட கோலிபாலி அண்மையில் தான் ஐவரி கோஸ்ட் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் மரணத்தால் நாடு துக்கத்தில் உள்ளதாக அதிபர் ஒட்டாரா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கோலிபாலி உடல்நலன் குன்றியிருந்ததால், அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாகவும் அதிபர் தெரிவித்தார்.
பிரதமர் கோலிபாலியின் மரணம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், அங்கு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் குறித்தும் பல கேள்விகளை அது எழுப்பியுள்ளது.
‘தமிழகத்தில் சித்த மருத்துவம் மூலம் 100 % குணமடைகிறார்கள்’- மாஃபா பாண்டியராஜன்
சென்னையில் கடந்த சில நாட்களாக கோவிட் – 19 தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துவந்தாலும் மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்தப் போக்கை அரசு எப்படி கையாளப் போகிறது, நோயாளிகளுக்கு படுக்கை வசதியில்லை என்ற குற்றச்சாட்டுகள், தேவைப்படுபவர்களுக்கு சோதனைகள் செய்யப்படுவதில்லை என்ற புகார்கள் ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன்.
விரிவாக படிக்க: தமிழகத்தில் கொரோனா அறிகுறி இருந்தும் சோதனை செய்வதில் என்ன பிரச்சனை?
ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்த தமிழக அரசு
காவல்துறையினர்ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்திக்கொள்ள இருந்த அனுமதியை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக காவல் துறைத் தலைவரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, ஃப்ராண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்டிருந்த அனுமதி ரத்துசெய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க: ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்த தமிழக அரசு – பின்னணி என்ன?
இந்தியாவில் கள்ளச் சந்தையில் விற்கப்படும் கொரோனா மருந்துகள்
கொரோனாவுக்கு மருந்தாகக் கருதப்படும் ரெம்டிசிவர், டோசிலிசம்ப் ஆகிய இரண்டு மருந்துகள் டெல்லியின் கறுப்பு சந்தைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன என்கிறார் பிபிசியின் செய்தியாளர் விகாஸ் பாண்டே.
இது குறித்த விரிவான புலனாய்வை பிபிசி மேற்கொண்டது. இந்த புலனாய்வில் நாங்கள் சேகரித்த தகவல்களை அப்படியே தொகுத்து வழங்குகிறோம்.
விரிவாக படிக்க:கோவிட் 19 – இந்தியாவில் கள்ளச் சந்தையில் விற்கப்படும் கொரோனா மருந்துகள் – பிபிசி புலனாய்வு
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 5 போலீசார் கைது
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் ஐந்து போலீசார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.
விரிவாக படிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 5 போலீசார் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com