அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றால் அவர் அமெரிக்கர்களின் கனவை “அழித்துவிடுவார்” என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிடுவதற்கான குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படும் நிகழ்வில் உள்ளூர் நேரப்படி, வியாழக்கிழமை இரவு பேசிய டிரம்ப், பைடனை “அமெரிக்காவின் மகத்துவத்தை அழிப்பவர்” என்று குறிப்ட்டார்.
ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க நகரங்கள் மீது “வன்முறை அராஜகவாதிகளை” கட்டவிழ்த்துவிடுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 68 நாட்கள் உள்ள நிலையில், சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, ஜோ பைடன் டிரம்பை விட ஓர் இலக்கம் முன்னணியில் உள்ளார்.
நேற்று நடந்த நிகழ்வில் பேசிய டிரம்ப், தனக்கு மேலும் நான்காண்டுகள் அதிபர் பதவியில் நீடிப்பதற்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன், அமெரிக்க பொருளாதாரத்தை சீரழித்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயை அகற்றுவதற்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டதால் நாடுமுழுவதும் நடந்து வரும் உள்நாட்டு சண்டைகளைத் தணிப்பதற்கும் சபதம் செய்துள்ளார்.
பைடனை கடுமையாக தாக்கி பேசிய டொனால்டு டிரம்ப்
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக தான் மீண்டும் அறிவிக்கப்பட்டதை வெள்ளை மாளிகையில் இருந்தபடி, டிரம்ப் நேற்று ஏற்றுக்கொண்டார்.
“நாம் அமெரிக்கர்களின் கனவை காப்பாற்றுகிறோமா அல்லது ஒரு வளமான எதிர்காலத்தை தகர்ப்பவர்களை நாம் அனுமதிக்கிறோமா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கும்” என்று அவர் கூறினார்.
உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்
காண்பி
முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்
ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்
ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்
கடைசியாக பதிவு செய்யப்பட்டது
27 ஆகஸ்ட், 2020, பிற்பகல் 1:49 IST
“சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களை நாம் பாதுகாக்கிறோமா, அல்லது வன்முறை அராஜகவாதிகள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் நமது நாட்டின் குடிமக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகளுக்கு நாம் கட்டுப்பாட்டைக் ஒப்படைக்கிறோமா என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும்.”
கடந்த வாரம் நடந்த கட்சி மாநாட்டில், ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவை இன, சமூக மற்றும் பொருளாதார அநீதிகளின் இடமாக குறிப்பிட்டு இகழ்வுரையாற்றியதாக டிரம்ப் மேலும் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே நேற்று நடந்த நிகழ்வில் இதுதொடர்பாக பேசிய டிரம்ப், “நான் உங்களிடம் ஒரு மிக எளிய கேள்வியைக் கேட்கிறேன் – நம் நாட்டை நாசம் செய்ய இவ்வளவு நேரம் செலவிடும் ஜனநாயகக் கட்சியினர், எப்படி நாட்டை வழிநடத்த வாய்ப்பளிக்குமாறு கேட்க முடியும்?” என்று கேள்வியெழுப்பினார்.
“இடதுசாரிகளின் பின்தங்கிய பார்வையில், அவர்கள் அமெரிக்காவை பூமியில் மிகவும் சுதந்திரமான, நியாயமான, விதிவிலக்கான தேசமாக பார்க்கவில்லை. மாறாக, பாவங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டிய ஒரு பொல்லாத தேசமாக அவர்கள் பார்க்கிறார்கள்.”
பல தசாப்தங்களாக அரசியலில் உள்ள தனது போட்டியாளரான ஜோ பைடன் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்த டிரம்ப், “ஜோ பைடன் தனது வாழ்நாள் முழுவதையும் அமெரிக்க பணியாளர்களின் கனவுகளை வெளிநாடுகளுக்கு தாரைவார்ப்பதிலும், நாட்டின் எல்லைகளை திறந்து அமெரிக்கர்களின் பிள்ளைகளை முடிவில்லா வெளிநாட்டு போர்களில் ஈடுபடுத்துவதிலும் செலவிட்டுள்ளார்” என்று கூறினார்.
நேற்றைய நிகழ்வில் பைடனின் பெயரை 40க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் பயன்படுத்தினார். ஆனால், கடந்த வாரம் நடந்த ஜனநாயக கட்சியின் நிகழ்வில் டிரம்பின் பெயர் ஒருமுறை கூட குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன சொல்கிறார் பைடன்?
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அரசில் துணை அதிபராக பதவி வகித்தவரான ஜோ பைடன், டிரம்பின் பேச்சு குறித்து ட்விட்டரில் எதிர்வினையாற்றியுள்ளார். அதில், “ஜோ பைடனின் அமெரிக்காவில் பாதுகாப்பாக இருக்க மாட்டீர்கள் என்று டிரம்ப் கூறியுள்ளார். நீங்கள் உங்களை சுற்றிப் பார்த்து இந்த கேள்வியை கேட்டுக்கொள்ளுங்கள்: டொனால்டு டிரம்பின் அமெரிக்காவில் நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறீர்கள்?” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பைடன் கொரோனா பரவலை காரணம் கூறி பெரும்பாலும் தனது வீட்டிற்குள்ளிருந்தே காணொளி வாயிலாக பிரசாரத்தில் ஈடுபடுவதாக டிரம்பின் பிரசார குழுவினர் அவரை கேலி செய்திருந்த நிலையில், நேற்று காணொளி ஒன்றின் மூலம் பேசிய பைடன் தான் நேரடி பிரசாரத்தில் மீண்டும் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் எப்போது? யார் யார் வேட்பாளர்கள்?
அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெற இருக்கிறது.
பல நாடுகளைப் போல அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.
அதில் ஏதேனும் ஒரு கட்சியிலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஒன்று அமெரிக்காவின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி. தற்போது அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப்தான், இந்த முறையும் இக்கட்சியின் அதிபர் வேட்பாளர்.
தாராளவாத கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான ஜோ பைடன், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராகப் பதவி வகித்தவர்.
இந்த இரு அதிபர் வேட்பாளர்களுமே 70 வயதைக் கடந்தவர்கள். டொனால்டு டிரம்புக்கு 74 வயது. ஜோ பைடன் இந்த முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபரபாக அவர் இருப்பார். அவருக்கு வயது 78.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com