பெய்ரூட் வெடிப்பு நடைபெற்று கிட்டதட்ட ஒரு மாதமாகிறது.
கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன்.
இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இரவு பகலாக மோதல்கள் நடந்தன. அரசு பதவி விலகியது. இருப்பினும் அது போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தவில்லை.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு மத்திய தரைக்கடலில் இருக்கும் சைப்ரஸ் தீவில் இந்த வெடிப்பின் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
நாயின் அழைப்பு
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு வெடி விபத்தில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணியாளர்கள் இதயத் துடிப்பை தேடி வருகின்றனர்.
புதன் காலை பெய்ரூட்டின் மார்க் மிக்கேல் பகுதிக்கு சிலி நாட்டிலிருந்து வந்த மீட்புப் குழுவினர் பணிக்கு வந்தவுடன் அங்கு கூட்டம் கூடியது. ஆனால் யாரேனும் இடிபாடுகளுக்கு மத்தியில் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.
புதன் இரவு, மீட்புப் பணியாளர்கள் ஒரு கட்டடத்தை கடந்து சென்றபோது அவர்களின் நாய் ஒன்று யாரோ அங்கு உயிருடன் இருப்பதுபோல் சமிக்ஞை தந்தது.
மீண்டும் வியாழன் காலை அதே கட்டடத்தின் அருகில் அந்த நாய் அதே சமிக்ஞையை தந்தது. அதன்பிறகு அந்த குழு ஸ்கேன் கருவி மூலம் இதய துடிப்போ அல்லது யாரேனும் மூச்சுவிடுவதோ தெரிகிறதா என தேடினர். இடிபாடுகளை அகற்றும் கருவிகளையும் கொண்டு வந்தனர்.
மீட்புப் பணியாளர்கள் ஏழு குழுக்களாகப் பிரிந்து சிறிய சிறிய துண்டுகளாக இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியாளர்கள் இதயத் துடிப்பு ஏதும் இருந்தால் அதை ஆழமாக கேட்கும் வகையில் அவ்வப்போது கூட்டத்தில் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது என்கிறார் களத்திலிக்கும் பிபிசி செய்தியாளார் ஒர்லா குவாரின்.
லெபனானிற்கு சிலி மிட்புப் பணியாளர்கள் செப்டம்பர் 1ம் தேதி வந்தனர். அவர்களிடம் 15 மீட்டர் நீளத்தில் மூச்சை கண்டறியும் கருவிகள் இருப்பதாக உள்ளூர் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளுக்கு இடையில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை ஆனால் பலர் நம்பிக்கையுடன் ஒவ்வொரு நிமிடமும் அந்த இடிபாடுகளுக்கு நடுவில் யாராவது உயிர் பிழைத்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கோவிட்-19 தடுப்பூசி பரிசோதனையில் பங்களிப்பு: பிரதமர் மோதி
கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனையில் இந்தியா முன்னோடியாக விளங்கி, அதன் பங்களிப்பை வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-இந்தியா கேந்திர கூட்டு ஒத்துழைப்பு அமைப்பின் (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. “புதிய சவால்களை எதிர்கொள்ளுதல்” என்ற தலைப்பில் இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக கருதப்படும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்று நிறைவுரையாற்றினார். அதில் இருந்து முக்கிய 10 குறிப்புகளை வழங்குகிறோம்.
கிண்ணிமங்கலத்து கல்வெட்டுகள் சொல்வது என்ன?
மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிப்படைகளிலேயே இதுதான் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கிறது கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன.
காலத்தால் பழமையான இந்த கல்வெட்டில் தமிழியில் (தமிழ் பிராமி) எழுதப்பட்டிருக்கிறது. ஒரு எண்பட்டைத் தூணில் கிடைத்திருக்கும் இந்தக் கல்வெட்டில், ‘எகன் ஆதன் கோட்டம்’ என்ற வார்த்தைகள் கிடைத்துள்ளன.
118 செயலிகள் தடை: எதிர்க்கும் சீனா, விட்டுக்கொடுக்காத இந்தியா
PUBG உள்பட 118 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த நிலையில், அந்த நடவடிக்கைக்கு சீன வர்த்தகத்துறை கடும் ஆட்பேசம் தெரிவித்தள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் சீன செயலிகள், அரசின் கொள்கைகளை மதித்துச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
தரவுகள் திருட்டு, தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவது, இன்டர்நெட் குற்றங்கள் போன்றவை நடக்க PUBG, Baidu, WeChat Work, Tencent Weiyun, Rise of Kingdoms, APUS Launcher, Tencent Weiyun, VPN for TikTok, Mobile Taobao, Youko, Sina News, CamCard உள்பட 118 செயலிகளை முடக்கி இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.
கோவில்பட்டியில் மீண்டும் சிபிஐ – என்ன நடந்தது?
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை சிபிஐ டெல்லி பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஷுக்லா தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இரண்டு சிபிஐ அதிகாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு வந்தனர்.
அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறை அதிகாரி சங்கர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், நீதித்துறை நடுவர் விசாரணை வேண்டி அளித்த ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com