Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி உலகம் முழுக்க எவ்வாறு விநியோகம் செய்யப்படும்?

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தடுப்பூசிகளை உலக மக்களுக்கு விநியோகம் செய்வது என்பது விமானத்துறை இதுவரை கண்டிராத மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

இதற்கு சுமார் 8000 போயிங் 747 விமானங்கள் தேவைப்படும் என்று சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பான IATA தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசிற்கான தடுப்பூசி இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், அது கண்டுபிடிக்கப்பட்டவுடன், எப்படி விநியோகம் செய்வது என்பது குறித்த திட்டம் குறித்து விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், சர்வதேச சுகாதார அமைப்புகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் சேர்ந்து ஏற்கனவே ஆலோசித்து வருகின்றன.

இந்த விநியோகத்திட்டம் படி ஒருவருக்கு ஒரு தடுப்பூசி என்று கணக்கு வைக்கப்பட்டுள்ளது.

“கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பாக விநியோகிப்பது என்பது இந்த நூற்றாண்டில் சர்வதேச விமானத்துறை சந்திக்கப் போகும் மிகப் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. சரியான முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமல் அது சாத்தியமாகாது. அதற்கான நேரம்தான் இது” என IATA-வின் தலைமை அதிகாரி அலக்ஸான்ட்ரே டி ஜுனியாக் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நெருக்கடி காரணமாக பயணிகளின் விமானப் போக்குவரத்து குறைந்துள்ளதால், கார்கோ சேவைகள் பக்கம் விமான நிறுவனங்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசிகள் விநியோகம் செய்வது என்பது மேலும் சிக்கலாக இருக்கும்.

அனைத்து விமானங்களாலும், தடுப்பூசிகளை ஏற்றிச் செல்ல முடியாது. மருந்துகள் விநியோகம் செய்ய வேண்டுமானால் அந்த விமானங்களில் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலை இருக்கவேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுக்க எவ்வாறு விநியோகம் செய்யப்படும்?

பட மூலாதாரம், Getty Images

சில தடுப்பூசிகளுக்கு உறைந்திருக்கக்கூடிய வெப்பநிலை தேவைப்படும். அந்த மாதிரியான சூழலில் விநியோகத்திற்கு மேலும் அதிக விமானங்கள் தேவைப்படும்.

“எங்களுக்கு என்ன நடைமுறை என்பது தெரியும். தற்போது அதன் அளவிற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்பட வேண்டும்” என்கிறார் விமானத்துறை அமைப்பின் கார்கோ சேவைகள் தலைவர் கிளின் ஹ்யூக்ஸ்.

தடுப்பூசி தயாரிக்கும் திறன் இல்லாத தென் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் உலகின் மற்ற சில பகுதிகளுக்கு விமானங்கள் இயக்குவது சற்று கடினமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல்லை தாண்டுதலில் உள்ள சிக்கல், பிராந்தியத்தின் அளவு மற்றும் கார்கோ திறன் குறைந்து காணப்படும் ஆப்பிரிக்காவில் தடுப்பூசிகளை விநியோகம் செய்வது என்பது தற்போதைக்கு “சாத்தியமற்ற” ஒன்று என IATA கூறுகிறது.

சுமார் 140 தடுப்பூசிகள் ஆரம்பகட்ட மேம்பாட்டு நிலையிலும், சுமார் இரண்டு டஜன் தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை நிலையிலும் இருக்கின்றன.

Banner image reading 'more about coronavirus'
Banner

கொரோனா தடுப்பூசிகள் தயாராகி அவற்றுக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகு, அவை சரியாக விநியோகம் செய்யப்படுவதை உறுதிபடுத்த, தற்போதில் இருந்தே கவனமான திட்டமிடல் வேண்டும் என்றும் அரசாங்கங்களை IATA வலியுறுத்தியுள்ளது.

சரியான வெப்பநிலையில் அவை கையாளப்படுகிறதா என்பது ஒருபக்கமிக்க, பாதுகாப்பு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

“தடுப்பூசிகள் மிகவும் விலைமதிப்பு மிக்க பொருளாகும். விநியோகம் செய்யும் போது, சேதம் அல்லது திருட்டு போன்று எதுவும் நடக்காமல் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்வது அவசியம்” என்றும் IATA தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »