Press "Enter" to skip to content

இந்தியா – சீனா எல்லைப் பதற்றம்: சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை இந்தியாவின் புதிய கூட்டணியால் எதிர்க்க முடியுமா?

  • ரூப்ஷா முகர்ஜி
  • பிபிசி

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அதிக இராணுவ மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மூலம் தங்கள் கூட்டணியை வலுப்படுத்த விரும்புகின்றன.

இந்த நான்கு ஜனநாயக நாடுகளும் முறைசாரா ‘நாற்கோண பாதுகாப்பு உரையாடல்’ அல்லது ‘குவாட்’ ன் பரஸ்பர கூட்டாளிகள்.

இருப்பினும், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் சாத்தியமான மாற்றங்களுக்குப் பிறகு, கூட்டணியின் எதிர்காலத்திற்கும் ஆபத்து உள்ளது.

அதே நேரத்தில், கிழக்கு-லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றமும் ‘குவாட்’ செயல்திறனைத் தீர்மானிப்பதில் ஒரு பங்கை வகிக்கலாம்.

குவாட் கூட்டணியை முறைப்படுத்துவது குறித்து விவாதிக்க, அக்டோபர் மாத இறுதிக்குள் புதுடெல்லியில் ஒரு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்று அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சரும், வட கொரியாவிற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதியுமான ஸ்டீபன் பேகன், செப்டம்பர் தொடக்கத்தில் கூறியிருந்தார்.

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம்

இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தூதர்கள் ‘ஒரு கூட்டு முயற்சியைத் தொடங்க’ ஒப்புக்கொண்டதை அடுத்து ஸ்டீபன் பேகனின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த நான்கு நாடுகளும் சீன தயாரிப்புகள் மற்றும் பொருட்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு கூட்டணியின் கீழ், வர்த்தக விநியோக சங்கிலியை பலப்படுத்த விரும்புகின்றன.

சீனாவுடனான புதிய பதற்றம் காரணமாக அதிகரித்த ஆர்வம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை பதற்றம் ஜூன் மாதம் முதல் இருந்து வருகிறது. அமைச்சர்கள் நிலையிலும், இராணுவ நிலையிலும் இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடக்கிறது, ஆனால் இவை இருந்தபோதிலும், எல்.ஏ.சி யில் பதற்றம் குறைவதாகத்தெரியவில்லை. அல்லது இந்த திசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சொல்லலாம்.

சொல்லப்போனால். ‘குவாட்’ ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே யால் அங்கீகரிக்கப்பட்டதாகும். 2007 ஆம் ஆண்டில் அவர் சாதாரண முறையில் இதைத் தொடங்கினார். அதன் பிறகு நான்கு நாடுகளும் இந்தியப் பெருங்கடலில் ஒரு கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றன.

ஆனால் இந்த கூட்டணி அதன் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது. 2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா இதிலிருந்து விலகியே இருந்ததால், இந்தியா அதை மீண்டும் பயிற்சிக்கு அழைக்கவில்லை.

இந்தியப் பெருங்கடலில் நடைபெறவிருக்கும் கடற்படைப் பயிற்சிக்கு இப்போது ஆஸ்திரேலியாவை அழைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த பயிற்சி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கு எதிரான சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக, இந்தியா இப்போது ‘குவாட்’ மீது புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தை காட்டுகிறது. அதே நேரத்தில், எல்லை பாதுகாப்பை உறுதிசெய்ய, சீனாவுக்கு எதிராக ஒரு ‘திகிலூட்டும் சக்தியை’ உருவாக்கும் திசையில் அந்த நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது.

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம்

இருப்பினும், ‘இந்தியா உண்மையில் ஒரு வலுவான சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்குமா?’ என்பதில் நிறைய நிச்சயமற்றதன்மை உள்ளது. ஏனெனில் இந்தியா இதைச் செய்தால் அது சீனாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும்.

வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் குறிப்பிடப்பட்ட கண்காணிப்பு தொடர்பாக சீனாவுடனான மோதலானது ஆஸ்திரேலியாவை, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு நெருக்கமாக ஆக்கியுள்ளது.

“இதுபோன்ற ஒரு கூட்டணி உருவாகக்கூடும் என்று சீனா ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது. ஆனால் சீனா அதை நம்மீது திணித்துள்ளது. அதுவே இப்போது அந்த நாட்டை தொந்தரவு செய்கிறது” என்று ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி, ஆஸ்திரேலிய தேசிய ஒளிபரப்பாளரான ஏபிசி, ஜூலை 10 ஆம் செய்தி வெளியிட்டது.

அமெரிக்காவின் குறிக்கோள்: ஆசியாவில் ‘நேட்டோ’ போன்ற கூட்டணி உருவாக்கம்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்த ‘செயல் தந்திர கூட்டணி’ க்கு அமெரிக்காவின் தலைமையானது , சீனாவின் சர்வதேச உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் மூலமாக வளர்ந்து வரும் அதன் செல்வாக்கிற்கும், தென் சீனக் கடலில் இராணுவமயமாக்கலுக்கும் ஒரு விடையாக இருக்கலாம்.

‘குவாட்’ முறைப்படுத்தப்பட்டால், அது டொனால்ட் டிரம்பின் சகாப்தத்தில் அமெரிக்க நிர்வாகத்திற்கு ஒரு பெரிய சாதனையாக இருக்கும் என்றும், அதன் மூலம் அமெரிக்கா ஒரு பெரிய உலகளாவிய தலைமையைப் பெற முடியும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம்

நவம்பர் மாதத்திற்குப் பிறகு அமெரிக்கத் தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும், சீனா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

“டிரம்பிற்கு பதிலாக ஜோ பிடன் அமெரிக்காவின் அதிபரானால், சீனாவைப் பற்றிய அமெரிக்காவின் உண்மையான கொள்கைகளில் மாற்றம் இருக்காது. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தை ஒப்பிடும்போது பைடென் நிர்வாகத்தின் செயல்படும் பாணியும், அறிக்கை வெளியிடும் பாணியும் கட்டாயம் வேறுபட்டதாக இருக்கலாம்,” ” என்று செப்டம்பர் 4 ஆம் தேதி ‘தி டிப்ளமாட்’ என்ற வலை இதழில் வெளியான தலையங்கம் கூறியது.

இதற்கிடையில், ‘குவாட்’ உருவாகும் வாய்ப்பை சீன ஊடகங்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றன.

“சீனா- இந்தியா மற்றும் சீனா-ஜப்பான் உறவுகள், சீனா -அமெரிக்கா உறவைப்போல அத்தனை மோசமாகிவிடவில்லை,” என்று சீன அரசு சார் ஊடகமான க்ளோபல் டைம்ஸ் செய்தித்தாள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி எழுதியது.

“இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன, மேலும் கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா தேவைப்படும்” என்றும் அந்த செய்தித்தாள் கூறியது.

ஷின்சோ அபே சகாப்தத்திற்குப் பிறகு ஜப்பானின் பங்கு

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம்

ஷின்சோ அபே பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் ஜப்பான் ‘குவாட்’ மீதான அதே உறுதிப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சீனா குறித்த ஜப்பானின் விரிவான செயல்தந்திர கொள்கை, ஷின்சோ அபேயின் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போலவே இருக்குமா?

” ‘குவாட்’ அமைப்பில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை அப்படியே இருந்தாலும், அல்லது அதிகரித்தாலும், சீனாவுக்கு எதிரான இந்த பலதரப்பு ஐக்கிய கூட்டணி திறன்பெற்றதாக செயல்பட்டால், அது அபேவின் இராஜதந்திர மரபுகளை இன்னும் வலுப்படுத்தும்,” என்று செப்டம்பர் 13 ஆம் தேதி ,ஜப்பான் வணிகம் பிரஸ்ஸில் வெளியான ஒரு தலையங்கம் கூறுகிறது.

இத்தகைய பார்வையுடன் சீனாவைப் பற்றிய தனது வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்திய’ முதல் தலைவர் ஷின்சோ அபே என்று ஜப்பானில் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.

இருப்பினும், அனைவரின் பார்வையும் இப்போது ஷின்சோ அபேயின் இடத்தில் பதவியேற்றுள்ள யோஷிஹிடே சுகா மீது உள்ளன. செப்டம்பர் 16 அன்று சுகா பிரதமராக பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ், ஜப்பான் குவாட்டில் இருந்து வெளியேறுவது கடினம் என்று தோன்றுகிறது. ஆனால் ஷின்சோ அபே போன்று இந்த கூட்டணியில் சுகாவும் ஒரு முக்கிய பங்கை வகிப்பாரா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

இந்த கூட்டணியால் சீனாவுடன் போட்டியிட முடியுமா?

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம்

சமீப காலங்களில் நடந்துள்ள சீன ஆக்கிரமிப்பானது, அந்த நாட்டின் கம்யூனிச ஆட்சிக்கு நெருக்கடி அளிக்கும்விதமான பலதரப்பு அமைப்பு ஒன்றை தேடும் கட்டாயத்தை ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பை வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு, இதில் உள்ள நாடுகள் சில முக்கியமான விஷயங்களில் உடன்படுவார்களா இல்லையா என்பதை பொருத்தே, சீனாவுடன் போட்டியிடும் ‘குவாட்’ அமைப்பின் திறன் நிர்ணயிக்கப்படும்.

இருப்பினும், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை சமீப காலங்களில் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஆயினும் 2008 ஆம் ஆண்டு போன்ற நிலைமை உருவாகாமல் இருக்க இந்தக்கூட்டணி , தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வரம்புகளை வரையறுக்கவேண்டும்.

“இந்த கூட்டணி, சீனாவுக்கு எதிராக இராணுவ ரீதியாக ஒன்றிணைவதற்கான முயற்சியா அல்லது வர்த்தக கூட்டாண்மை போன்ற பிற அம்சங்களும் அதன் ஒரு பகுதியாக இருக்குமா? வணிக அம்சங்களில் எல்லா நாடுகளும் சீனாவுடன் விரிவான இருதரப்பு வர்த்தக உறவைக் கொண்டிருப்பதால் அதைக் கருத்தில் கொள்வது சற்று சிக்கலானதாக இருக்கும்,” என்று ஆங்கில செய்தித்தாள் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ தனது செப்டம்பர் 14 தலையங்கத்தில் எழுதியுள்ளது.

இந்தக் கூட்டணியை விரிவுபடுத்த சில ஆசியான் நாடுகளை (சீனாவுடன் கடல் தகராறு நிலவும் நாடுகள்) அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவுடனான இருதரப்பு மோதல்களில் மற்ற உறுப்பு நாடுகள் எவ்வளவு தலையிடும் என்பது தெரியவரும்போது, அதுதான்தான் கூட்டணியின் உண்மையான முடிவைக்காட்டும் சோதனையாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கூட்டணியில் உள்ள நாடுகளை மேலும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு, உறுப்பு நாடுகள் தங்களுக்குள் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். நிபுணர்களின் கூற்றுப்படி, இருதரப்பு ஒப்பந்தங்கள் இந்த திசையில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

“பிரச்சனை என்னவென்றால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்பு நலன்கள் ஒரேபோன்றவை அல்ல. இந்தியாவும் ஜப்பானும், சீனாவிடமிருந்து உடனடி மற்றும் பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. மற்ற நாடுகள் அப்படி இல்லை ,” என்று தி ஆசியான் போஸ்ட், தனது ஆகஸ்ட் 24 ஆம் தேதி தலையங்கத்தில் எழுதியுள்ளது

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

20 செப்டம்பர், 2020, பிற்பகல் 3:33 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »