Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டொனால்ட் டிரம்ப் V ஜோ பைடன் – கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மரணங்கள் குறித்து இந்தியா மீது டிரம்ப் விமர்சனம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் – ஜோ பைடன் இடையே முதல் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இந்தியா குறித்த உரையாடல்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இந்த விவாதத்தில் பேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், ”அமெரிக்காவில் 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க டிரம்ப் அரசு தவறிவிட்டது. அமெரிக்கா இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்ட் டிரம்ப் தான்,” என்றார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப் இந்தியாவைக் குற்றஞ்சாட்டினார்.

இந்தியாவும், அமெரிக்க தேர்தலும்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மரணங்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கையை இந்தியா பகிரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவாத்தத்திற்கு நடுவராக இருந்த க்ரிஸ் வேலஸிடம் டொனால்ட் டிரம்ப், “கோவிட் 19 மரணம் குறித்த நேரடியான எண்ணிக்கையை இந்தியா வழங்கவில்லை,” என்றார்.

இதுமட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு குறித்தும் இந்த விவாதத்தில் பேசப்பட்டது.

காலநிலை மாற்றம்

இந்த விவாதத்தில் பேசிய பைடன், “நான் அமெரிக்கா அதிபரானால், காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவேன்,” என்றார்.

அமெரிக்கா பணம் வீணாக செலவாகிறது என குற்றஞ்சாட்டி பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் வெளியேறினார்.

ஆனால், காலநிலை மாற்றத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்து பேசிய பைடன், “புவி வெப்பமயமாதலில் 15 சதவீத பங்கை அமெரிக்கா வகிக்கிறது,” என குறிப்பிட்டார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் 2020: டொனால்ட் டிரம்ப் V ஜோ பைடன் - இந்தியா மீது குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர்

இதற்கு பதில் அளித்து பேசிய டிரம்ப் இந்தியாவை குற்றஞ்சாட்டினார். புவிவெப்பமயமாதலுக்கு இந்தியாவும் மற்ற பிற நாடுகளும் முக்கிய காரணம் என்றார்.

“காற்று மாசுக்கு சீனா காரணம். மாசை காற்றுடன் அந்நாடு கலக்க செய்கிறது. ரஷ்யா செய்கிறது, இந்தியா செய்கிறது,” என்று தெரிவித்தார்.

பைடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை டிரம்ப் மீது சுமத்தினார்.

குறிப்பாக கறுப்பின சமூகத்தினரை மிக மோசமாக நீங்கள் நடத்தினீர்கள் என்று டிரம்பை குற்றஞ்சாட்டினார்.

இந்த தலைமையின் கீழ் நாம் பலவீனமானவர்களாக, ஏழைகளாக ஆகிவிட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் 2020 நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியும் மோதுகின்றன. ஜனநாயக கட்சியின் சார்பின் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்பும் இந்த தேர்தலை சந்திக்கிறார்கள்.

ஜனநாயகக் கட்சி நவீன தாராளவாத சிந்தனைகளுக்கு ஆதரவானது. அரசின் தலையீடுகள், எல்லோருக்கும் சுகாதார வசதி கிடைக்கச் செய்தல், குறைந்த செலவில் கல்வி கிடைக்கச் செய்தல், சமூக நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் தொழில் சங்கங்கள் போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட கட்சி.

மிகவும் பழமையான கட்சி அல்லது ஜிஓபி என கூறப்படும் குடியரசுக் கட்சி, அமெரிக்க அடிப்படைவாத சிந்தனைகளை வலியுறுத்தக் கூடியதாக – அரசின் குறுக்கீடுகளுக்கு வரம்பு நிர்ணயித்துக் கொள்ளும், கீழ்நிலை வரிகளை மற்றும் தாராளமய சந்தை முதலாளித்துவத்தை ஊக்குவிக்கக் கூடிய, துப்பாக்கி உரிமங்கள் தருவதை ஆதரிக்கக் கூடிய, தொழில் சங்கங்களின் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை விரும்பும், குடியேற்றம் மற்றும் கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்சியாக உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »