அமெரிக்காவின் மிகப்பெரிய பாலியல் அமைப்பின் தலைவரான கீத் ரெனேரிக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
நெக்சியம் எனும் பாலியல் வழிபாட்டு அமைப்பின் நிறுவனர் இவர்.
கடந்தாண்டுதான் பெண்களை கடத்துவது, குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றார் கீத் ரெனேரி.
பாலியல் அடிமைகளாக பெண்களை வேலைக்கு எடுத்து அவர்களுடன் கட்டாய உடலுறவில் ஈடுபட்டுள்ளார் கீத்.
அறுபது வயதாகும் இவர் மிக மோசமான அளவிட முடியாத சேதங்களை உண்டாக்கியதாக தெரிவிக்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.
இந்த வழக்கின் விசாரணை ப்ரூக்ளினில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபது நிகோலஸ், கீத் ரெனேரிக்கு 1.75 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தார்.
கீத்தின் வழக்கறிஞர், கீத் ரெனேரி நிரபராதி என்றும் அவருக்கு எதிராக ஊடகங்கள் செயல்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழலில் நெக்சியம் தொடர்பான ஒரு கட்டுரை வந்தது. அதனை அடுத்தே அந்த அமைப்பு எதிராக விசாரணை தொடங்கியது.
நியூயார்க் அல்பனியில் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மனிதநேய கோட்பாடுகளால் தாம் வழிநடத்தப்படுவதாக கூறுகிறது.
ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க பணியாற்றுகிறோம் என்பதுதான் அந்த அமைப்பின் கூற்று.
16 ஆயிரம் மக்கள் மத்தியில் பணியாற்றுகிறோம் என்றும், அமெரிக்க, கனடா, மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் தாங்கள் செயல்படுகிறோம் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.
ஆனால், இந்த அமைப்பு அடிமை முறையில் பெண் உறுப்பினர்களை நடத்தி உள்ளது.
பல பெண்களுக்கு இடுப்பிற்கு கீழ் சூடு வைத்து கீத்தின் பெயரை அடையாளமாக இட்டுள்ளனர்.
கீத் ரெனேரி பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமல்லாமல் அந்த பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியும் உள்ளார்.
நெக்சியம் அமைப்பு தங்களது பாலியல் பாடத்திட்டத்தில், ஆண்கள் பல பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதே நேரம் பெண்கள் அப்படி இருக்க கூடாது என்றும் போதித்துள்ளது.
பல பெண்கள் இந்த அமைப்புக்கு எதிராகவும் கீத் ரெனேரிக்கு எதிராகவும் சாட்சி அளித்துள்ளனர்.
அதில் தாங்கள் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டோம் என விவரித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com