Press "Enter" to skip to content

நீட் இட ஒதுக்கீடு: அரசாணை பிறப்பித்தது ஏன்? – முதல்வர் பழனிசாமி விளக்கம்

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!!தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்குவதில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இந்த ஆண்டு முதலே பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அரசாணை வெளியிட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அரசியல் செய்பவர்களின் செயல், பலன் அளிக்காது என்று தெரிவித்தார்.

”ஆளுநரிடம் இருந்து பதில் வருவதற்குத் தாமதம் ஏற்பட்டதால் அரசாணை வெளியிட்டுள்ளோம். ஏழை எளிய மாணவர்கள்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மருத்துவ கனவை நினைவாக்க இந்த அரசாணை கொண்டுவந்துள்ளோம். இந்த நடப்பாண்டில் ஒதுக்கீடு தருவதற்காகத்தான் அரசாணை கொண்டுவந்துள்ளோம். இந்த இட ஒதுக்கீடு மூலமாக சமூக நீதி பாதுகாக்கப்படும்,” என்றார் முதல்வர்.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணையை வரவேற்றுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவு செய்வதில் ஏன் இவ்வளவு நாட்கள் தாமதம் ஆனது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

”7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நீஸ் தேவாலய தாக்குதல்: “இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” – அதிபர் மக்ரோங்

பிரான்ஸ் தாக்குதல்

பிரான்ஸின் நீஸ் நகரில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆணை கத்தியால் குத்தி கொன்றவர் இரு தினங்களுக்கு முன் துனிஷியாவிலிருந்து வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீஸாரால் சுடப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பிரான்ஸின் நீஸ் நகரில் நேற்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இது ஒரு “இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” என பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தால் பள்ளிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கையை மூவாயிரத்திலிருந்து ஏழாயிரமாக அதிகரிப்பதாகத் தெரிவித்தார் மக்ரோங்.

மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »