Press "Enter" to skip to content

கமலா ஹாரிஸுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அரசில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், இந்திய, தமிழ் பூர்வீகம் உள்ளவர்.

இவரது தாத்தா கோபாலன் இந்தியாவில் மத்திய அரசுப் பணியில் இருந்தவர். கோபாலனின் மகள் ஷியாமளா, தமது 19ம் வயதில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறினார். அந்த நாட்டின் தலைசிறந்த மார்பகப் புற்றுநோய் மருத்துவச் சிகிச்சை நிபுணராக அவர் விளங்கினார்.

அங்கு ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய டொனால்ட் ஹாரிஸை ஷியாமளா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் ஆகிய இரு மகள்கள்.

ஏழு ஆண்டுகள் டொனால்ட் ஹாரிஸுடன் வாழ்ந்த ஷியாமளா, பிறகு அவரை மணவிலக்கம் செய்தார். அதற்குப் பிறகு தமது இரு மகள்களையும் தனியாக வளர்த்து ஆளாக்கினார். கமலா ஹாரிஸ் அட்டர்னி, செனட்டர் என பொது வாழ்வில் பதவிகளை அடைந்து, தற்போது நாட்டின் துணை அதிபராகவுள்ளார். இவரது சகோதரி மாயா ஹாரிஸ், அமெரிக்காவில் வழக்கறிஞராக இருக்கிறார்.

தனது தாய் மற்றும் தங்கையுடன் கமலா ஹாரிஸ்

இவர்களின் தாத்தா கோபாலன் மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சென்னை பெசன்ட் நகரில் குடியேறினார். அப்போது அவரை பார்க்க ஷியாமளா தனது பெண் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் மூலம் தமது தாய்நாட்டுக்கும் குழந்தைகளுக்கும் இடையே அவர் பிணைப்பை உருவாக்கினார்.

விடுமுறையில் சென்னையில் இருந்த தாத்தா வீட்டுக்கு வந்துபோன கமலா ஹாரிஸும், மாயா ஹாரிஸும் நட்சத்திர விடுதியில் தங்காமல் தாத்தா, பாட்டி அரவணைப்பில் அதே வீட்டில் தங்கி, உணவருந்தி மகிழ்ந்திருந்தார் என கமலாவின் தாய்வழி மாமா பாலச்சந்திரன் பிபிசியிடம் நினைவுகூர்ந்தார்.

கமலா ஹாரிஸும் தனது தாத்தாவுடனான காலங்களை தனது புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

“மெட்ராஸில் என் தாத்தாவுடன் மிக நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அப்போது அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் பற்றி எனக்கு நிறைய கதைகள் சொல்வார். தினமும் கதை முடிந்த இடத்திலிருந்து அடுத்த நாள் நடையை ஆரம்பிக்கும்போது சொல்ல ஆரம்பிப்பார். இன்று நான் இருக்கும் நிலைக்கு அவரும் முக்கிய காரணம்” என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் கடற்கரை நடைபாதையில் காலார நடந்து சென்று குடும்பத்துடன் பொழுதைக் கழித்த நிகழ்வுகளையும் கமலா ஹாரிஸ் இன்றும் மறக்காமல் இருந்திருக்கிறார்.

வாழ்வது அமெரிக்காதான் என்றாலும், தமிழக உணவு வகைகளான இட்லி, சாம்பார், ரசம் ஆகியவை கமலாவின் விருப்ப உணவுகளே. இன்றளவும் அவருக்கு அந்த உணவு வகைகள்தான் மிகவும் விருப்பமானவை என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸின் இந்திய வேர்கள்

இந்தியாவைப் பொருத்தவரை, தற்போது கமலா ஹாரிஸின் இரு நெருங்கிய குடும்ப உறவுகள் மட்டுமே உள்ளனர். ஒன்று டெல்லியில் வாழும் அவரது தாய்வழி மாமா கோ. பாலச்சந்திரன். மற்றொருவர் சென்னையில் வாழும் தாய்வழி சித்தி சரளா கோபாலன்.

தங்களின் வளர்ப்பு பற்றி கமலா ஹாரிஸ் தனது புத்தகத்தில், “என் தாய் என்னையும் எனது சகோதரி மாயாவையும் அழைத்துக் கொண்டு அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நகருக்கு செல்வார். அதற்கு காரணம், நாங்கள் யார், எங்களுடைய பின்புலம் என்ன என்பதை எங்களுக்கு அவர் புரிய வைக்க முற்பட்டதுதான். சென்னையில் ஓய்வு பெற்ற எனது தாத்தாவுடன் கைகோர்த்து நீண்ட தூரம் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயிற்சி செய்ததுண்டு. அப்போது தாத்தா நிறைய கதைகள் கூறுவார். ஒரு நாள் பாதியிலேயே விட்டு விட்ட கதையை மறுநாள் நடைப்பயிற்சியின்போது தாத்தா தொடருவார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ஆரம்ப கால கதைகளை அவர் எங்களுக்கு அழகாக விவரிப்பார். அந்த படிப்பினைதான் இன்று இங்குவரை நான் வர உந்து சக்தியாகியிருக்கின்றன” என்று தனது ஆழமான இந்திய பாரம்பரிய உணர்வை அவர் பகிர்ந்து கொண்டார்.

துளசேந்திரபுரத்தில் பூர்வீக கோயில்

துளசேந்திரபுரத்தில் பூர்விக கோயில்

கமலா ஹாரிஸின் தாய்வழி குலதெய்வமான தர்மசாஸ்தா கோயில் துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ளது.

கமலா துணை அதிபராக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் நாளான நவம்பர் 3ம் தேதி அந்தக் கோயிலில் அந்த கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். கமலா வெற்றி பெற வாழ்த்தி பதாகைகளும் வைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »