Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்து எல்லா நாடுகளுக்கும் கிடைக்கும் சம வாய்ப்பு உள்ளதா?

  • ஆலிஸ் கட்டி
  • பிபிசி செய்தியாளர்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு ஒரே தீர்வு உலகளாவிய ஒன்றாகத்தான் இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகெங்கிலும் 55 மில்லியன் நபர்கள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோயால் பாதிப்பட்டுள்ளனர். மற்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பேர் இந்த கொரோனாவால் இறந்து இருக்கிறார்கள். பலர் ஒரு தடுப்பூசி தான் தீர்வாக இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் ஏழை நாடுகளுக்கு, கொரோனா மாற்று மருந்து கிடைக்காமல் போகலாம் என்ற வருத்தங்கள் இருக்கின்றன.

நமக்கு முன்பு இருக்கும் முக்கிய பிரச்சனைகளை, சவாலைச் சமாளிக்க, ஒரு நியாயமான முறை கொண்டு வரப்படுமா, அது சரியாக செயல்படுமா என்பதைக் குறித்து நிபுணர்களிடம் பேசினோம்.

முன் கூட்டியே வாங்குவது

இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள், அதிகம் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என, முன்பு வந்த முடிவுகள் சொல்கின்றன. இன்னும் சில மருந்துகள், கடைசி கட்ட சோதனைகளை எட்டி இருக்கின்றன. பல மருந்துகள், பல்வேறு நிலையில் இருக்கின்றன.

இதுவரை எந்த தடுப்பு மருந்தும் அனுமதிக்கப்படவில்லை, ஆனால், அதற்காக, முன் கூட்டியே மருந்து வாங்குவது நிறுத்தப்படவில்லை.

அமெரிக்காவில், வடக்கு கரோலினாவில் இருக்கும் டியூக் பல்கலைக்கழகம், ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறது. அதில், இதுவரை போடப்பட்டு இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஒப்பந்தங்கள் குறித்த விவரங்களை சேகரிக்க விரும்புகிறார்கள். இந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியின் படி, இதுவரை 6.4 பில்லியன் டோஸ் மருந்துகள் (இதுவரை முறையாக தடுப்பு மருந்து என அனுமதிக்கபடாத மருந்துகள்) விற்கப்பட்டுள்ளது. இன்னும் 3.2 பில்லியன் டோஸ் மருந்துகள் விற்பனை தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. அல்லது ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் நீட்சியாக ஒதுக்கீடு செய்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி.

சோதனையில் பயன்படுத்தப்படும் பிஃபிசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி.

மருந்துகளை முன்கூட்டியே வாங்குவதற்கான செயல்முறை, மருத்துவத் துறையில் ஏற்கனவே நன்கு நிறுவப்பட்ட ஒன்று தான், ஏனெனில், முன் கூட்டியே மருந்துகளை வாங்குவது, மருந்து தயாரிப்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க மற்றும் நிதி ரீதியாக உதவியாக இருக்கும் என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸைச் சேர்ந்த, உலக சுகாதார கொள்கை பேராசிரியர் க்ளேர் வென்ஹம்.

யாருக்கு எல்லாம், மருந்து தயாராவதற்கு முன்பே அதிக பணம் கொடுக்க முடிகிறதோ, அவர்கள், மருந்து தயாரான பின், முன் வரிசையில் வந்து நிற்க முடியும் என்கிறார் க்ளேர். இதுவரை வாங்கப்பட்டு இருக்கும் பெரும் பகுதியிலான கொரோனா தடுப்பு மருந்துகள், உயர் வருமானம் கொண்ட நாடுகளால் வாங்கப்பட்டவையே என டியூக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கண்டு பிடித்து இருக்கிறது.

உற்பத்தி திறன் கொண்ட, சில மத்திய வருமான நாடுகளும், தடுப்பு மருந்து உற்பத்தி ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

பிரேசில் மற்றும் மெக்ஸிகோ போன்ற, தடுப்பு மருந்து சோதனை நடத்தத் தேவையான கட்டமைப்புகள் இருக்கும் நாடுகள், அதைப் பயன்படுத்தி, கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெற முயற்சிக்கின்றன.

உதாரணமாக, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியாவில் தயாரிக்கும் தடுப்பு மருந்துகளில் பாதி மருந்துகளை, இந்தியாவிலேயே பயன்படுத்த இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. இந்தோனேசியா, சீனாவின் தடுப்பு மருந்து மேம்பாட்டாளர்களோடு கூட்டமைத்துக் கொண்டு இருக்கிறது. பிரேசில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா பார்மா நிறுவனம் உடன் கூட்டமைத்துக் கொண்டு இருக்கிறது.

எந்த மருந்து சரியாக செயல்படும் என நமக்கு இதுவரை தெரியாது. சில நாடுகள், பல்வேறு தடுப்பு மருந்துகளை வாங்கி இருக்கிறார்கள். சமீபத்தைய தரவுகள் படி, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தான் அதிக அளவில் தடுப்பு மருந்துகளை தங்களுக்கென ஒதுக்கீடு செய்து வைத்திருக்கின்றன.

“தலைவர்கள் முதலில் தங்கள் சொந்த மக்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் தங்கள் குடிமக்களுக்கு பதில் சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்த உலகளாவிய தொற்றுநோய்க்கான பதில் கூட்டாக, ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்” என்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO).

உலகுக்கு கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் முன்கூட்டியே கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படக் கூடிய மருந்துகளின் அளவு போன்றவைகளைப் பார்த்தால், பணக்கார நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைத்துவிடும், ஏழை நாடுகளுக்கு, கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காமல் போகும் சூழலை நோக்கி நாம் செல்வதாகத் தோன்றுகிறது என்கிறார் டியூக் பகுப்பாய்விற்கு தலைமை தாங்கி வரும் ஆண்ட்ரியா டெய்லர்,

சந்தையில், எத்தனை கொரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக செயல்படும், எப்போது கிடைக்கும் என்று நமக்குத் தெரியாது என்கிறார்கள் நிபுணர்கள். தொடர்ந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தடுப்பு மருந்து விநியோகம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு மருந்து, ஏழை நாடுகளில் கிடைப்பது, எத்தனை தடுப்பு மருந்துகள் மேம்படுத்தப்படுகின்றன என்பது, எத்தனை விரிவாக மேம்படுத்தப்படுகின்றன மற்றும் எங்கு தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து இருக்கும் என, Till We Win: India’s Fight Against the Covid-19 Pandemic என்கிற புத்தகத்தை எழுதியவர்களில் ஒருவரான சந்திரகாந்த் லஹரியா சொல்கிறார்.

இந்தியாவில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எங்கள் உற்பத்தி திறனுடன் பார்க்கும் போது, விலை மிக விரைவாக குறையக்கூடும் என்றும், இது குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கிடைப்பது மிக அதிகமாக இருக்கும் என்றும் நான் எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் அவர்.

மிகவும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசிகள், பெரும்பாலும் செல்வந்த நாடுகளிலிருந்து முன் கூட்டியே கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்களால் சூழப்பட்டுள்ளன” என்கிறார் உலகளாவிய மேம்பாட்டு சிந்தனைக் குழுவின் கொள்கை ஆய்வாளர் ரேச்சல் சில்வர்மேன்.

இருப்பினும், நிறைய கொரோனா தடுப்பு மருந்துகள் வெற்றி அடைந்தால், உலக அளவில் போதுமான விநியோகம் இருக்கும். எனவே, பணக்கார நாடுகள், தங்களின் எல்லா ஒப்பந்தங்களையும் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

பிஃபைசர் மற்றும் மாடர்னா பார்மா நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் 90% திறனாக செயல்படுகிறது என்கிற செய்தி நல்ல அறிவியல் செய்தி என்கிறார் சில்வர்மேன்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு, குறைந்த பட்சம் வெகுஜன தடுப்பூசிக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலாவது உருவாக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார் சில்வர்மேன்.

2020-ம் ஆண்டுக்குள் 50 மில்லியன் டோஸ் மருந்தை தயாரிப்போம் என நம்புகிறது பிஃபைசர். 2021-ம் ஆண்டுக்குள் 1.3 பில்லியன் டோஸ் மருந்தைத் தயாரிக்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவை.

எளிதாக கணக்கு போட்டுப் பார்த்தால் கூட, இது போதாது என உங்களுக்கே தெளிவாகத் தெரியும் என்கிறார் சில்வர்மேன்.

மாடர்னா தடுப்பு மருந்து, கிட்டத்தட்ட நல்ல முடிவுகளைக் காட்டி இருக்கிறது என்கிறார் சில்வர்மேன். இன்னும் பல கொரோனா தடுப்பு மருந்துகள் வரும் என நம்பிக்கை இருக்கிறது என்கிறார் சில்வர்மேன்.

மாடர்னா தடுப்பூசிக்கு குளிர்ச்சியாக இருப்பதற்கு குறைவான தேவைகள் உள்ளன. குளிர்ச்சியாக வைப்பது, ஏழை நாடுகளுக்கு, குறிப்பாக வெப்பமான பகுதிகள், மற்றும் தொலைதூர பகுதிகள் மற்றும் குறைந்த மின்சாரம் உள்ளவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.

புதிய விநியோகத் திட்டம்

உலக அளவில், சுகாதாரத்தில், சம நிலையற்ற தன்மை ஒன்றும் புதிதல்ல. ஆண்டுக்கு, சுமாராக 20 மில்லியன் குழந்தைகளுக்கு போதுமான தடுப்பு மருந்து கிடைப்பதில்லை என மதிப்பிட்டு இருக்கிறது உலக சுகாதார அமைப்பு.

2009 ஆம் ஆண்டில், பன்றிக் காய்ச்சல் தொற்று நோயின் போது, தடுப்பு மருந்து விவகாரத்தில், பணக்கார நாடுகள் முன்கூட்டியே கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்களால் ஆதிக்கம் செலுத்தின என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

நாம் 90 / 10 உலக சுகாதார பிரிவினை குறித்துப் பேசுகிறோம். உலகின் 90% பார்மா பொருட்கள், உலகின் 10% மக்கள் தொகைக்கு வழங்கப்படுகிறது. இதுவும் அதில் ஒரு பகுதி தான் என்கிறார் வென்ஹம்.

சந்தையில் விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கான (erectile dysfunction) மருந்துகள் உள்ளன, ஆனால் டெங்கு காய்ச்சலுக்கு எந்த மருந்தும் இல்லை. நாம் அனைவரும் ஒரே தயாரிப்புக்கான தேவையை எதிர்கொள்கிறோம், தயாரிப்பு வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது.

கோவக்ஸ் எனப்படும் உலகளாவிய கொரோனா தடுப்பூசித் திட்டம், எதிர்கால கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது.

காவி (GAVI) தடுப்பூசிகள் கூட்டணி, உலக சுகதார அமைப்பு மற்றும் தொற்று நோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI) ஆகியவற்றுக்கு இடையில் – பங்கேற்கும் நாடுகளுக்கு குறைந்தது 20% மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமான தடுப்பூசிகளை வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்து

இந்த திட்டம் மூலம், பணக்கார நாடுகள் சாத்தியமான தடுப்பூசிகளை வாங்க ஒப்புக்கொள்கின்றன, மேலும் ஏழை நாடுகளுக்கான நிதி விஷயங்களில் உதவுகின்றன. இதுவரை, சுமார் 186 நாடுகள் இதில் ஈடுபட்டுள்ளன.

தகுதி வாய்ந்த 92 நாடுகளுக்குள், தடுப்பூசிகளை வாங்கவும் விநியோகிக்கவும் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை திரட்டி இருப்பதாக காவி அமைப்பு சொல்கிறது.

கோவேக்ஸ் ஏற்கனவே நூற்றுக்கணக்கான மில்லியன் டோஸ் மருந்துக்கான, முன்கூட்டிய கொள்முதல் ஒப்பந்தங்களைக் பெற்று இருக்கிறது. இந்த மருந்துகளை, நாடுகளிடையே சமமாக விநியோகிக்க வேண்டும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒரு தடுப்பூசியை உருவாக்கி வரும் அஸ்ட்ராஜெனெகா, இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

உலகெங்கிலும் உள்ள எல்லா நாட்டிலும், ஒரே நேரத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தடுப்பூசி அணுகுவதற்கு உதவுவது தான் நிறுவனத்தின் நோக்கம்” எனச் சொல்லி இருக்கிறார் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல்.

“தொற்றுநோய்களின் போது” தடுப்பூசியை வைத்து லாபம் பர்க்கமாட்டோம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

பிஃபைசர், இந்த கோவேக்ஸ் திட்டத்தில் கையெழுத்து இடவில்லை. ஆனால் கோவேக்ஸில் இணைவது குறித்து, விவாதித்துக் கொண்டு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது.

தடுப்பூசியை அணுக அனைவருக்கும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், சேமிப்பக சிக்கல்களுக்கான தீர்வுகளை மேம்படுத்தி இருப்பதாகவும் பிஃபைசர் நிறுவனம் கூறியது.

மற்ற ஒப்பந்தங்களைப் பேசும் நாடுகள்

இங்கிலாந்து மற்றும் கனடா உட்பட பல கோவேக்ஸ் திட்டத்தில் கையொப்பமிட்ட நாடுகள், நேரடியாக மருந்து நிறுவனங்களுடன், தங்கள் சொந்த ஒப்பந்தங்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்ற கவலையும் எழுந்துள்ளது.

“அவர்கள் கோவாக்ஸில் தாராளமாக முதலீடு செய்கிறார்கள், ஆனால் அதே நேரத்தில் சந்தையில் இருந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம், தேவை, விநியோகத்தை விட அதிகமாக இருக்கும் என்று அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள்” என்று டியூக் ஆராய்ச்சியாளர் டெய்லர் கூறுகிறார்.

பணக்கார நாடுகள் இந்த முயற்சியின் மனநிலையை குறைத்து மதிப்பிடுகின்றனவா என்று கேட்டபோது, காவி தலைமை நிர்வாக அதிகாரி சேத் பெர்க்லி இது ஒரு “சிக்கலான கேள்வி” என்று பதிலளித்து இருக்கிறார்.

“ஒவ்வொரு அரசியல் தலைவரும் தங்கள் சொந்த மக்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள், எனவே ஒரு அர்த்தத்தில் இது நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் ஒரு தொற்றுநோய் காலத்தில், நாம் அனைவரும் முயற்சி எடுத்தால் மட்டுமே நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே அந்த சூழ்நிலையில் அவர்கள் சிந்திக்க வேண்டும்”என்று அவர் கூறினார்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஆக்ஸ்பாம் உள்ளிட்ட குழுக்கள் எதிர்கால தடுப்பூசிகள் உலக அளவில் கிடைப்பதை உறுதி செய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கோவிட் -19 தொழில்நுட்ப அணுகல் திட்டத்தின் மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பார்மா நிறுவனங்களை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாம் விநியோகத்தில் சிக்கலைச் சமாளிக்காவிட்டால், எந்தவொரு தனி நிறுவனமும் போதுமான அளவு மருந்தை விநியோகம் செய்ய முடியாது. ஏழை நாடுகள், பணக்கார நாடுகளுடன் போட்டி இடும். பணக்கார நாடுகள் எப்போதும் போல வெல்லும் “என்று ஆக்ஸ்பாம் சுகாதார கொள்கை ஆலோசகர் அன்னா மேரியட் கூறுகிறார்.

“தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் அறிவியல் மற்றும் தரவுகளைத் பகிர்ந்து கொள்ள வேண்டும், மேலும் அவர்களின் தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்து கொள்ள உறுதியளிக்க வேண்டும், இதனால் உற்பத்தியை மேம்படுத்த முடியும். அதற்கு யாரும் முன்வரவில்லை”.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், சில நேரங்களில் நீங்கள் சுகாதார தொழில்நுட்பங்களை விரைவாகப் பெற, ஜெனரிக் மருந்து உற்பத்தியாளர்களுக்கு உரிமம் (licensing to generic manufacturers) வழங்கும் முறையைப் பயன்படுத்தலாம் என்கிறார் கொள்கை ஆய்வாளர் சில்வர்மேன்.

இது பெரும்பாலும் அறிவுசார் சொத்து மற்றும் விலை நிர்ணயம் போன்ற பிரச்சனைகளில் சிக்கி மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறார் சில்வர்மேன்.

பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்று, இறப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளின் அளவு மாறுபடுகிறது. அதே வேளையில், வைரஸை சமாளிக்க எந்தவொரு தடுப்பூசியும் அனைத்து நாடுகளிலும் கிடைக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

“இது போன்ற மிகவும் தொற்றுத் தன்மை இருக்கும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), உலகமயமாக்கப்பட்ட உலகில், அனைத்து நாடுகளும் முறையாக பாதுகாக்கப்படும் வரை, எந்த ஒரு நாடும் தொற்றுநோய்களின் பாதிப்பில் இருந்து முழுமையாக பாதுகாப்பாக இருக்காது.” என்கிறார் சில்வர்மேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »