Press "Enter" to skip to content

பருவநிலை மாற்றம்: 10 ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத ஆபத்தை சந்திக்கவிருக்கும் அண்டார்டிக் பனி பறைகள்

  • ஜோனதன் அமோஸ்
  • அறிவியல் செய்தியாளர்

பட மூலாதாரம், A.LUCKMAN/SWANSEA UNI

அடுத்து இதுவாக இருக்குமா? ஆம் என்றால், எப்போது?

லார்சன் சி என்கிற மிகப் பெரிய பனி அடுக்குப் பாறை குறித்து இப்படிப்பட்ட கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. இந்த லார்சன் சி பனி அடுக்குப் பாறை வேல்ஸ் நகரத்தை விட இரண்டு மடங்கு பெரியது. இது அன்டார்டிக் தீபகற்பத்தின் கிழக்கு ஓரத்தில் இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு டஜன் பனித் திட்டுக்கள், கடந்த சில தசாப்தங்களில் அப்பகுதி வெப்பமடைந்ததன் காரணமாக சிறு சிறு பகுதிகளாக பிரிந்து சென்றிருக்கின்றன அல்லது உருகி இருக்கின்றன.

லார்சன் சி பனி அடுக்குப் பாறை நாம் எதிர்பார்த்ததை விட அதிக வலிமை கொண்டதாக இருக்கலாம் என புதிய ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

பனி அடுக்குப்பாறையின் முந்தைய நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கும் படிமங்களை எடுக்க, விஞ்ஞானிகள் அப்பனி அடுக்குப் பாறையின் முன் பகுதியில் துளையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த 10,000 ஆண்டுகளாக லார்சன் சி பனி அடுக்குப்பாறைகள் தொடர்ந்து ஒன்றாக ஒருங்கிணைந்து இருந்து வருகின்றன. இத்தனை பெரிய பனி அடுக்குப்பாறையும் உலக வெப்பயமாதல் போன்ற வெப்பம் அதிகரிப்பு பிரச்னைகளால் தோராயமாக 9,000 ஆண்டுகளுக்கு முன்பும், 4,000 ஆண்டுகளுக்கு முன்பும் உருகி இருக்கின்றன. ஆனால் இப்பனிப்பாறை எப்போதும் முழுமையாக உருகியது இல்லை.

“இது ஒரு வலுவான பனி அடுக்குப் பாறை, இது நீண்ட காலமாக அங்கு இருக்கிறது” என அவ்வாராய்ச்சியின் தலைவர் மற்றும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் இருக்கும் பிரிட்டிஷ் அன்டார்டிக் மேலாய்வு முனைவர் ஜேம்ஸ் ஸ்மித் கூறுகிறார்.

“கார்பன் வெளியீட்டையும், வளிமண்டலம் வெப்பமடைவதையும் தடுத்தால், இப்பனி அடுக்குப்பாறையின் வலிமையைப் பயன்படுத்தி, அது உருகி சிதைவதைத் தடுக்கலாம். கடந்த 10,000 ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு லார்சன் சி அனி அடுக்குப் பாறைகள் மோசமான மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது. காரணம் இந்த பனி அடுக்குப் பாறை இதுவரை காணப்படாத அளவுக்கு மெலிதாக இருக்கிறது” என பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

பனிப்பாறை வரைபடம்

தீபகற்பத்தில் இருந்து, வெட்டல் கடலுக்கு வரும் பல்வேறு பனி ஆறுகளின் நீர் மற்றும் பனிப்பாறைகளின் சங்கமம் தான் இந்த லார்சன் சி பனி அடுக்குப் பாறை. ஒருகட்டத்தில் இந்த பனி அடுக்குப் பாறைகள் சுமார் 300 மீட்டர் அடர்த்தி கொண்ட பனிப்பாறைகளை உருவாக்குகின்றன.

சில பனிப்பாறைகள், கடந்த 2017ஆம் ஆண்டில் வெளியான A68a-ஐப் போல ட்ரில்லியன் டன் எடை கொண்டதாக இருக்கும்.

லார்சன் சி உட்பட அனைத்து பனி அடுக்குப் பாறைகளும், அதன் பின் இருக்கும் பனிப்பாறைகள் மற்றும் பனி ஆறுகளை பாதுகாக்கும் அரணாக இருக்கிறது. அது மிகவும் அவசியம். ஒருவேளை பனி ஆறுகள் மற்றும் பனிப் பாறைகள் இந்த பனி அடுக்குப் பாறைகளில் விழாமல், நேரடியாக கடலில் கலந்தால், அதன் எடையால், கடல் மட்டம் அதிகரிக்கும்.

கடந்த 2002-ஆம் ஆண்டு ‘லார்சன் பி’ என்கிற பனி அடுக்குப் பாறை உருகிய போதே ஆவணப்படுத்தப்பட்டது. அப்பனி அடுக்குப் பாறையில் விழும் பனி ஆறுகளின் வேகம் அதிகரித்தது.

லார்சன் சி பனி அடுக்குப் பாறை தோராயமாக 300 – 400 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைந்திருக்கிறது. எனவே அது ஒரே பனி அடுக்குப் பாறையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

பனி அடுக்குப் பாறைகளில் துளையிட்டு எடுத்த அடுக்கடுக்கான படிமங்கள் மூலம், முன்பு என்ன நடந்தது என்பதை முனைவர் ஸ்மித் மற்றும் அவரது சகாக்கள் ஆணித்தரமாகக் கூற முடியும்.

“இந்த பனி அடுக்குப் பாறையில் எந்த வித பெரிய சீர் குலைவுகளோ, வெப்பத்தால் உருகவோ இல்லை என்பது தான் எங்களுக்கு முதலில் தெளிவாகத் தெரிய வந்தது” என விளக்குகிறார் முனைவர் ஸ்மித்.

“பனி அடுக்குப் பாறைகள் முன்பு வெப்பத்தால் உருகி இருக்கிறது என்றால், கடலில் காணப்படும் படிமங்களை தெளிவாகக் காண முடியும், அது திறந்த வெளி கடல்சார் உற்பத்தியைப் பிரதிபலிக்கும். அதில் ஃபைடோபிளாங்டன் போன்ற மற்ற நுண் தொல்லுயிர்களையும் காண முடியும். அது கடலின் மிகப் பெரிய சமிக்ஞையாக இருந்திருக்கும். அதை லார்சன் சி பனி அடுக்குப் பாறையில் காண முடியவில்லை. எனவே லார்சன் சி பனி அடுக்குப் பாறையில் எந்த விதமான உருகுதலோ சீர்குலைவோ இல்லை என எங்களால் உறுதியாகக் கூற முடியும்”

லார்சன் சி பனி அடுக்குப் பாறை, பருவ நிலை மாற்றத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு தாக்குபிடிக்கும்? என்கிற கேள்விக்கு மீண்டும் செல்வோம்.

இந்த பனி அடுக்குப் பாறை, தீபகற்ப மலைகளிலிருந்து வரும் வெப்பக் காற்றை எதிர்கொள்வது, அதிகரித்து இருக்கிறது என்பதற்கான ஆதாரம் இருக்கின்றன. இந்த வெப்பக் காற்றால், பனி அடுக்குப் பாறைகள் உருகுகின்றன.

பேராசிரியர் அட்ரியன் லக்மென், லார்சன் சி பனி அடுக்குப் பாறைகளின் suture zones எனப்படும் பல அடுக்கு இணைப்புப் பகுதிகளை ஆராய இருக்கிறார். இந்த பகுதிகளில் தான், பனி அடுக்குப் பாறைகளில் கலக்கும் பனி ஆறுகள் ஒன்றாக இணைந்து இருக்கின்றன. இந்த பகுதிகளில் இருக்கும் பனிகட்டிகள், பனி அடுக்குப் பாறைகளில் ஏற்படும் விரிசல்களை வலுவிழக்கச் செய்கின்றன. எனவே பனி அடுக்குப் பாறைகள் ஒன்றாக இருக்க உதவுகின்றன.

“லார்சன் சி பனி அடுக்குப் பாறையின் எதிர்கால பரிணாம வளர்ச்சியை கணிப்பது அத்தனை எளிதாக இல்லை” என சுவான்சி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

“இந்த பனி அடுக்குப்பாறை குளிர்ச்சியான வெட்டல் கடலில் இருக்கிறது. எனவே அன்டார்டிகாவின் மற்ற பகுதிகளில் காணப்படும் அதிவேக கடல் வெப்பமடைதல் பிரச்சனை இதை பாதிக்காது. அதே நேரத்தில் இந்த பனி அடுக்குகள் மெலிதாவதற்கு பதிலாக தடிமனானதற்கான சில ஆதாரங்களும் இருக்கின்றன.

லார்சன் சி பனி அடுக்குப் பாறை

பட மூலாதாரம், NASA/MODIS

“இருப்பினும் மற்றொரு பக்கம், லார்சன் சி பனி அடுக்குப் பாறை கடந்த 1980களிலிருந்து 2017-ல் ஒரு பெரும் பகுதியை இழந்துள்ளது. இது மேலும் தொடரலாம்”

லார்சன் சி பனி அடுக்குப் பாறையின் வரலாறு தொடர்பான புலனாய்வு விவரங்கள் ஜியாலஜி என்கிற அறிவியல் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டு வருகிறது.

பனிப்பாறை

பட மூலாதாரம், A.LUKMAN/SWANSEA UNI

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »