Press "Enter" to skip to content

சீனாவுக்கு போட்டியாக புதிய திட்டம் – ஜி7 மாநாட்டில் முடிவு

பட மூலாதாரம், LEON NEAL/PA MEDIA

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவ, சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதே போன்ற ஒரு திட்டத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. அதற்கு போட்டியாகவே இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

அமெரிக்க உதவியோடு “மீண்டும் கட்டியமைப்போம்” என்ற கொள்கையில், சீன திட்டத்தை விட சிறப்பான தரம் வாய்ந்த மாற்று முறை தேவை என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கருதுகிறார்.

பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு தொடர் வண்டிபாதைகள், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் கட்ட அவற்றுக்கு பொருளாதார ரீதியாக சீனா உதவி செய்து வருகிறது.

ஆனால், இதனால் சில நாடுகள் அதிக கடன் சுமைக்கு ஆளாகும் சூழல் உருவாவதாக விமர்சிக்கப்படுகிறது.

பிரிட்டனின் கார்ன்வாலில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள், புதிய திட்டத்தின் மூலம் “கொள்கைகளால் செயல்படும், அதிக தரம் கொண்ட மற்றும் வெளிப்படையான” கூட்டாண்மையை தரவுள்ளதாக தெரிவித்தனர்.

சீனா குறித்து மேற்கத்திய நாடுகளின் கவலை

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் சீனா மீது ஒருங்கிணைந்த தடையை விதித்தன.

வீகர் முஸ்லிம்கள் விவகாரத்தில் தீவிர மனித உரிமை மீறல் நிகழ்த்திய ஷின்ஜியாங் மாகாண அதிகாரிகள் மீது பயணத்தடை விதிக்கப்பட்டு அவர்கள் சொத்துகளும் முடக்கப்பட்டன.

சீனா குறித்து மேற்கத்திய நாடுகளின் கவலை

பட மூலாதாரம், Reuters

சீனாவில் வட மேற்கு மாகாணத்தில் உள்ள முகாம்களில் லட்சக்கணக்கான வீகர் முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீது சீனா தடை விதித்தது.

கொரோனா குறித்து ஜி7 நாடுகளின் திட்டம் என்ன?

எதிர்காலத்தில் பெருந்தொற்றுகள் பரவுவதை தடுக்க புதிய திட்டம் ஒன்றுக்கு ஜி7 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு இந்த தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, 175 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3.7 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

இது போன்ற பெருந்தொற்றால், மீண்டும் மனித இழப்பொ, பொருளாதார இழப்போ ஏற்படக்கூடாது என்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள்

அதற்கு,

-எதிர்காலத்தில் வரும் நோய்களை 100 நாட்களுக்கும் குறைவான காலத்தில் கண்டறிய வேண்டும். அதற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிளை தயாரிக்க மற்றும் உரிமம் பெற குறைந்த நேரமே எடுத்துக் கொள்ளவேண்டும்.

-உலக கண்காணிப்பு வலைப்பின்னல் மற்றும் மரபணு வரிசைப்படுத்தல் திறனை வலுவூட்டுதல்

-உலக சுகாதார நிறுவனத்தை வலுப்படுத்த ஆதரவளித்தல்

ஆகிய விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன.

கொரோனா

பட மூலாதாரம், Reuters

ஞாயிற்றுக்கிழமை மாநாட்டின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படும் போது, இந்த திட்டம் குறித்தும் விரிவாக தெரிவிக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து பிரிட்டனின் கார்ன்வாலில் உலகத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஜி7 மாநாடு தொடங்கியது.

அந்த சந்திப்பில் “உலகை மீண்டும் சிறப்பாக கட்டி அமைப்போம்” என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உலக நாடுகளின் தலைவர்களிடம் பேசினார்.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர், பிரிட்டனில் நடைபெறும் இந்த மூன்று நாள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல் ஜி7 மாநாடு இது.

ஜி7 என்றால் என்ன?

முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.

இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.

முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.

அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.

ஆண்டுதோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும்.

ஆற்றல் உற்பத்தி கொள்கை, பருவ நிலை மாற்றம், எய்ட்ஸ் மற்றும் உலகப் பாதுகாப்பு ஆகியவை அங்கே விவாதிக்கப்படும் சில விஷயங்களாகும்.

மாநாட்டின் இறுதியில் என்னவெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டதோ, அவையெல்லாம் அறிக்கையாக வெளியிடப்படும்.

பொதுவாக மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »