Press "Enter" to skip to content

துனீசியாவில் பிரதமர் பதவியை பறித்த அதிபர் – கொரோனாவை கையாளாததாகக் கூறி மக்கள் போராட்டம்

பட மூலாதாரம், Reuters

துனீசியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், பிரதமரைப் பதவி நீக்கம் செய்த அதிபர் நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

பொருளாதாரம் மற்றும் சமூக கொந்தளிப்பு காரணமாக நாட்டில் ஏற்கனவே அமைதியின்மை நிலவி வந்த நிலையில், கோவிட் தொற்றை அரசு சரியாகக் கையாளவில்லை என்ற மக்களின் கோபம் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

2019ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் கைஸ் சையத், இனி ஆட்சியை தான் கவனித்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடினாலும், அதிபர் கைஸ் சையத் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரபு பிராந்தியம் முழுக்க நடந்த அரபு வசந்த போராட்டத்திற்கு, 2011-ம் துனீசியாவில் தொடங்கிய புரட்சியே காரணம் என அடிக்கடி கூறப்படுவதுண்டு. ஆனால், இது அந்த நாட்டில் பொருளாதார ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கவில்லை.

குளறுபடியான தடுப்பூசி திட்டங்களால் கடந்த வாரம் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் நீக்கப்பட்டது, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரிப்பும் மக்களின் நீண்ட கால கோவத்தை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சிக்கு எதிராகவும் மற்றும் அவரது `என்ஹாடா` கட்சிக்கும் எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

“புரட்சிக்குப் பின்னர் இதுதான் மிகவும் மகிழ்ச்சியான தருணம்“ என லாமியா மெப்தாஹி எனும் போராட்டக்காரர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

துனிசியா

பட மூலாதாரம், Getty Images

தலைநகர் துனீசில் நாடாளுமன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டூஜூரில் உள்ள என்ஹாடா கட்சி தலைமையகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், கணினிகளைச் சேதப்படுத்தியதுடன் கட்சி அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

“நாங்கள் இந்த முடிவுகளை எடுத்துள்ளோம் … சமூக அமைதி துனீசியாவிற்கு திரும்பும் வரையிலும், இந்த அரசைக் காப்பாற்றும் வரையிலும் இந்த முடிவு தொடரும்“ என அதிபர் கைஸ் சையத் கூறியுள்ளார்.

பின்னர் தலைநகர் துனிசில், மக்களின் கொண்டாட்டத்தில் அதிபரும் பங்கேற்றார்.

ராணுவப் படைகள் மூலம் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். “ஆயுதங்களை எடுக்கலாம் என நினைப்பவர்களுக்கு நான் எச்சரிக்கிறேன். யாராவது துப்பாக்கியால் சுட்டால், அவர்களுக்கு ராணுவம் துப்பாக்கியால் பதில் சொல்லும்“ என அதிபர் கைஸ் சையத் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கவிழ்ப்பு குற்றச்சாட்டு

துனீசியாவில் அதிபரும், நாடாளுமன்றமும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அரசியலமைப்பின்படி, அதிருக்கு ராணுவ மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் மட்டுமே அதிகாரம் உள்ளது. சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிபர் கைஸ் சையத்துக்கும், பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சிக்கும் நீண்டகாலமாகவே பிரச்சனை இருந்துவந்துள்ளது.

இப்போது ஒரு புதிய பிரதமருடன் சேர்ந்து தான் ஆட்சி செய்ய உள்ளதாக அதிபர் சையத் கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தையும் 30 நாட்களுக்கு முடக்கியுள்ளார்.

துனிசியா

பட மூலாதாரம், Getty Images

நாட்டில் ஆபத்து இருந்தால் நாடாளுமன்றத்தை முடக்க அரசியலமைப்பின் 80வது பிரிவின் கீழ் தனக்கு அதிகாரம் உள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

ஆனால் துனீசியாவின் சட்ட மற்றும் அரசியல் கட்டமைப்பு தெளிவாக இல்லை. இது போன்ற சர்ச்சைகளைத் தீர்மானிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று 2014 அரசியலமைப்பு கோருகிறது, ஆனால் அது நிறுவப்படவில்லை.

அதிபர் சையத் புரட்சிக்கும் அரசியலமைப்பிற்கும் எதிராக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக துனிசிய நாடாளுமன்ற சபாநாயகர் ராச் கஹன்னுச்சி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “என்ஹாடா கட்சியின் ஆதரவாளர்களும், துனிசிய மக்களும் புரட்சியைப் பாதுகாப்பார்கள்“ என அவர் கூறியுள்ளார்.

ஹார்ட் ஆஃப் துனிசியா மற்றும் கராமா ஆகிய இரண்டு கட்சிகள், ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »