பருவநிலை மாற்றம் மற்றும் கடுமையான விவசாயத்தால் உலகின் பல பகுதிகளில் பூச்சிகள் பாதியளவு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
புவி வெப்பமயமாதல் மற்றும் கடுமையான விவசாயம் ஆகிய இரண்டும் சேர்ந்து ஏற்படுத்தும் அதீத அழுத்தம் உலகம் முழுவதும் பூச்சி எண்ணிக்கையை பெரிதாக குறைத்துள்ளது என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில பூச்சி இனங்களை நாம் இழக்கும் முன்பு நாம் இந்த ஆபத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு முதலில் நாம் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்த வேண்டும். பூச்சிகளின் வாழ்விடத்தை அழித்து அதை நாம் காப்பாற்ற முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த ஆய்வின் தலைவர் சார்லி, “பூச்சிகளை இழப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல மனிதர்களின் உடல்நலம் உணவு, பாதுகாப்பு என அனைத்துக்குமே ஆபத்துதான். அதுவும் பூச்சிகள் இல்லாமல் மகரந்த சேர்க்கைகள் இல்லை.” என்கிறார்.
“எங்கள் ஆய்வு நாம் உடனடியாக இயற்கை வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும் என்பதையும், கடுமையான விவசாயத்தை குறைக்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.” என்கிறார் அவர்.
அதுமட்டுமல்லாமல் பருவநிலை மாற்றத்தை குறைக்கும் அனைத்தும் முயற்சிகளிலும் நாம் ஈடுபடவேண்டும்.
இருப்பினும் இந்த ஆய்வில் ஒரு கலவையான தகவல்கள் கிடைத்தன. சில பூச்சிகள் மிக பெரிய அளவில் அழிவை சந்தித்து வருகின்றன. ஆனால் சிலவற்றின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.
சமீபத்திய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் எறும்பு, பட்டாம்பூச்சி, தேனீக்கள் என சுமார் 20 ஆயிரம் பூச்சி இனங்களின் தரவுகளை சேகரித்தனர்.
இதில் மனிதர்கள் கால்படாத இடங்களோடு ஒப்பிட்டால் அதிகப்படியான விவசாயம் மற்றும் வெப்பநிலை இருக்கும் பகுதிகளில் பூச்சி இனங்கள் 49 சதவீத அளவில் குறைந்துள்ளது.
அதேபோல விவசாய இடங்களுக்கு அருகாமையில் இருக்கும் பூச்சியினங்களின் வாழ்விடங்களை நாம் அழிக்காமல் இருத்தல் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்.
பூச்சியினங்கள் சுற்றுச்சூழலுக்கு, மனித நலனுக்கு எத்தனை நன்மை அளிக்கிறது என்பதை புரிந்து கொண்டு நாம் விரைவாக செயலாற்ற வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com