Press "Enter" to skip to content

பாமாயில் தொடர்பாக இந்தோனீசியா எடுத்துள்ள முக்கிய முடிவு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images

பாமாயில் தொடர்பாக இந்தோனீசியா எடுத்துள்ள முக்கிய முடிவு இந்தியாவை பாதிக்குமா

இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ வரும் 28 ஆம் தேதி முதல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் மற்றும் அதன் மூலப்பொருளான பாமோலின் ஏற்றுமதியை தடை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் நாட்டில் பாமாயில் உற்பத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ‘மலிவாகவும் ஏராளமாகவும்’ பாமாயில் கிடைப்பதை உறுதி செய்த பின்னரே ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதே தனது நோக்கம் என்று அதிபர் ஜோகோ விடோடோ கடந்த வெள்ளிக்கிழமை ஒரு காணொளியில் தெரிவித்திருந்தார். பாமாயில் ஏற்றுமதிக்கான தடை அடுத்த முடிவு வரும்வரை அமலில் இருக்கும்.

நாட்டில் பற்றாக்குறை

இந்தோனீசியாவில் பனை மரங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. பாமாயில் அதன் பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதில் இருந்து சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

இது தவிர, டிடெர்ஜெண்ட், ஷாம்பு, பற்பசை முதல் சாக்லேட், டோனட் மற்றும் உதட்டுச்சாயம் வரை பல பொருட்களின் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.

உலகின் சில பகுதிகளில் இது உயிரி எரிபொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பாமாயில் உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தோனீசியா உள்ளது. ஆனால் தற்போது உள்ளுர் மட்டத்தில் அதன் பற்றாக்குறையை நாடு சந்தித்து வருகிறது.

ஏற்றுமதியை குறைத்த இந்தோனீசியா

இந்த ஆண்டு ஜனவரி இறுதியில், இந்தோனீசியா பாமாயில் ஏற்றுமதியை குறைத்தது. மார்ச் மாதம் இதற்கான தடை நீக்கப்பட்டது, ஆனால் அதற்குள் சர்வதேச சந்தையில் பாமாயில் விலை கிடுகிடுவென உயர்ந்தது என்று நாஸ்டாக் பங்குச் சந்தையின் இணையதளம் தெரிவிக்கிறது.

ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு உணவுப் பற்றாக்குறையின் சூழ்நிலையைத் தவிர்க்க பல நாடுகள் தங்கள் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று ப்ளூம்பெர்க்கில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவின் இந்த முடிவு இந்த திசையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தோனீசியாவின் முடிவால் பரவலாக கவலைகளும் அதிகரித்துள்ளன என்று இந்த வாரம் சேனல் நியூஸ் ஏசியாவில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

பாமாயில் பழம்

பட மூலாதாரம், Getty Images

அதே நேரம் சர்வதேச சந்தையில் சோயாபீன் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.

உலகில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் யுக்ரேன் முதலிடத்தில் இருப்பதாகவும், ரஷ்யா-யுக்ரேன் போர் காரணமாக இங்கிருந்து ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ரஷ்யா – யுக்ரேன் போரால் ஏற்பட்ட பாதிப்பு

உலகின் தேவையின் 76 சதவிகித சூரியகாந்தி எண்ணெய் கருங்கடல் வழியாக வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆனால் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் இந்த வர்த்தகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் சோயாபீன் மற்றும் பாமாயில் மீது மக்களின் நம்பிக்கை இருந்தது.

சோயாபீன் எண்ணெய் சமையலறை உபயோகத்தில் பாமாயிலுக்கு ஒரு நல்ல மாற்றாக பார்க்கப்படுகிறது.

ஆனால் சில வாரங்களுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் ஏற்றுமதியாளரான அர்ஜென்டீனா, சோயாபீன் எண்ணெய் ஏற்றுமதிக்கான பதிவை மூடுவதாக அறிவித்தது.

இந்த நடவடிக்கையின் மூலம், 2021-22 ஆம் ஆண்டில் பயிரிடப்பட்ட பயிரின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.

அர்ஜென்டீனா சோயாபீன் எண்ணெய் ஏற்றுமதிக்கு 31 சதவிகித வரி விதிக்கிறது. இந்த ஆண்டு, அதாவது 2021-22ல் வறட்சி நிலவினாலும், நாட்டில் சோயாபீன் உற்பத்தி 4 கோடியில் இருந்து 42 கோடி டன்களாக அதிகரித்துள்ளது என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஒரு செய்தியை வெளியிட்டது.

அரசின் முடிவிற்குப் பிறகு, அர்ஜென்டீனாவில் உள்ள விநியோகம்யர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், இது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல என்று கூறுகிறார்கள். இதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், அந்நிய செலாவணி தேவை பூர்த்தியாகாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இதற்கான மாற்று வழியை தேடி அமெரிக்கா அல்லது பிரேசிலை நோக்கித் திரும்பலாம்.

அதிகரிக்கும் விலைவாசி

உலகம் முழுவதும் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை எல்லா நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. போரின் தாக்கம் நாட்டின் வர்த்தகத்தின் மீது ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் வர்த்தகம் தொடர வேண்டும் என்றும் ஐநா கூறியுள்ளது.

கோவிட் தொற்றுநோயால் ஏற்கனவே விநியோகச் சங்கிலி சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நாடுகள், ரஷ்ய-யுக்ரேன் போருடன் கூடவே அர்ஜெண்டீனா மற்றும் இந்தோனீசியாவின் முடிவுகளால் பெரிய தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில், இந்தோனீசியா நாட்டுக்குள் பாமாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. நாட்டிற்குள் கச்சா பாமாயிலின் ஒரு குறிப்பிட்ட அளவை, கிலோவுக்கு அதிகபட்சமாக 9,300 இந்தோனீசிய ரூபாய்க்கு விற்பனை செய்வதை அரசு கட்டாயமாக்கியது.

நாட்டிற்குள் சமையல் எண்ணெயின் விலை உயரத் தொடங்கியுள்ளது என்று நிக்கி ஏஷியா கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட சுமார் 40 சதவிகிதம் அதிகம்.

இதற்குப் பிறகு, நாட்டின் வர்த்தக அமைச்சர் முகமது லுஃப்டி, எல்லா சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களும் தங்கள் ஏற்றுமதியின் 20 சதவிகிதத்தை உள்நாட்டு சந்தையில் விற்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கினார்.

பாமாயில்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் என்ன பாதிப்பு ஏற்படும்

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 1 கோடியே 30 லட்சம் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதில் 63 சதவிகிதம் அதாவது 8.5 லட்சம் டன் பாமாயில் ஆகும். அதன் பெரும்பகுதி இந்தோனீசியாவிலிருந்து வாங்கப்படுகிறது.

அதே நேரத்தில் மலேஷியா மற்றும் தாய்லாந்தும் குறைந்த அளவு பாமாயிலை இந்தியாவிற்கு விற்கின்றன என்று வணிகம் ஸ்டாண்டர்டில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது.

BL Agro நிறுவனம், இந்தோனீசியா மற்றும் மலேஷியாவிலிருந்து இந்தியாவிற்கு பாமாயிலை இறக்குமதி செய்கிறது. “இந்தியாவின் மொத்த எண்ணெய் தேவையின் 65 சதவிகிதத்தை இந்திய அரசு இறக்குமதி செய்கிறது. 35 சதவிகிம் உள்நாட்டிலேயே உற்பத்தி ஆகிறது. இந்த 65 சதவிகித எண்ணெயில் 60 சதவிகிதம் பாமாயில் ஆகும். பிற எண்ணெய்களுடன் இது கலக்கப்படுகிறது,” என்று பிபிசியிடம் பிஎல் ஆக்ரோ நிறுவனத்தின் தலைவர் கன்ஷ்யாம் கண்டேல்வால் தெரிவித்தார்.

பாமாயில் இறக்குமதிக்காக மத்திய அரசு ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் செலவிடுகிறது.

இந்தோனீசியாவின் இந்த நடவடிக்கை மற்ற நாடுகளை பாதிக்கலாம், ஆனால் இது இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும் என்று இந்திய சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டெர்ஸ் சங்கத்தின் தலைமை இயக்குனர் பிவி மேத்தா வணிகம் ஸ்டாண்டர்ட் நாளேட்டிடம் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா தனது ராஜீய வழிகளை செயல்படுத்த வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

இந்திய நுகர்வோர், வரவிருக்கும் கடினமான காலத்திற்கு தயாராக வேண்டும் என்று தி இந்து வணிகம்லைனில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இந்திய சந்தை, ரமலான் மற்றும் திருமண சீசனால் ஏற்கெனவே விலையேற்றத்தை சந்தித்து வருவதாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், இந்தோனீசியாவின் நடவடிக்கைக்குப் பிறகு, அங்கு சமையல் எண்ணெய் விலை குறையும். ஆனால் இந்தியாவில் அதன் விலை விண்ணைத் தொடலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »