Press "Enter" to skip to content

காவி திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் நூல்: உள்ளடக்கத்தை பாருங்கள் என ஆட்சியர் அறிவுரை

பட மூலாதாரம், Twitter

இன்று (30.07.2022) தமிழ்நாட்டில் வெளியான நாளிதழ்கள், இணையதளங்களின் செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

கோவையில் நடைபெற்ற மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வில், கொடுக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் அட்டைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கோவையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த அட்டை படத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருப்பதுபோல உள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரனிடம் கேட்டபோது ,” புத்தகத்தில் உள்ள உள்ளடக்கத்தை பாருங்கள். அதை தவிர்த்து கவிஞரின் உடையைப் பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்தார் என்கிறது அந்தச் செய்தி.

திடீரென ஆவேசத்தோடு அழுது புரண்ட மாணவிகள்

உத்தராகண்ட் மாநிலம் பாகேஷ்வரில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகள் திடீரென ஆவேசமாக அலறி, அழும் காணொளி மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருவது குறித்து தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பல மாணவிகள் ஆவேசத்துடன் தரையில் விழுந்து உருண்டு கதறி அழுத காட்சி அங்கிருந்த ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பித்து நிலை பாதித்த மாணவர்கள் சிலர், இரண்டு நாட்களுக்கு முன், இதே போல் நடந்து கொண்டனர். அதன் பிறகு பெரும்பாலான பள்ளி மாணவர்களும் இப்படியே நடந்து கொள்ளத் தொடங்கியதையடுத்து, இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அண்டை மாவட்டங்களான அல்மோரா, பித்தோராகர் மற்றும் சாமோலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.

பள்ளி மாணவிகள்

பட மூலாதாரம், Screengrab/Twitter

இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை விமலா தேவி கூறியதாவது:

எங்கள் பள்ளியில் சில மாணவிகள் விசித்திரமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் சத்தமாக அழுது, கூச்சலிடுவது மற்றும் வியர்த்து கொட்டுவது என்று நடந்தது. அவர்கள் தலையை குனிந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு நாங்கள் பயந்தோம். மாணவிகளின் பெற்றோர்களிடமும் தெரிவித்தோம். ஒரு பூசாரியை அழைத்து வந்து மந்திரம் சொன்னார்கள். அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. தற்போது அதிகளவில் குழந்தைகள் அப்படி நடந்து கொள்கின்றனர் என கூறினார்.

இப்பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரிகள் வந்தபோதும், குழந்தைகள் இதே போல் வினோதமாக நடந்து கொண்டனர். பள்ளி வளாகத்திற்குள் பூஜை, சடங்குத்தீ செய்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, குழந்தைகளின் பெற்றோர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. டாக்டரை வரவழைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிஸ்டீரியா என்பது விசித்திரமான மற்றும் அசாதாரணமான நடத்தைகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடாகும். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பித்து நிலையில் வினோதமாக நடந்து கொள்ளும் மனப் பிரச்சனை இது. மனநலம் சரியாக இல்லாதபோது இது நிகழ்கிறது. இப்படி ஒருவர் நடந்து கொள்ளும்போது அது அவர்களைச் சுற்றி இருப்பவர்களைப் பாதிக்கிறது, அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இது உணர்ச்சி அல்லது உளவியல் அழுத்தத்தால் தூண்டப்படும் உடல் பிரச்சினையாகவும் தோன்றலாம். இதற்கு முற்றிலும் ஏற்கப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை என கூறப்படுகிறது என்று அச்செய்தி தெரிவிக்கிறது.

யுக்ரேன் மாணவர்கள் இந்தியாவில் தேர்வெழுத அனுமதி

தமிழகம் திரும்பிய யுக்ரேன் மாணவர்கள்

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்த இந்திய மாணவர்கள், 2022 ஜூன் 30-ம் தேதியும் மற்றும் அதற்கு முன்பும் மருத்துவ படிப்பை முடித்தவர்கள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வை (எப்எம்ஜிஇ) எழுத அனுமதிக்கப்படுவர் என்று இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ரஷ்ய-யுக்ரேன் போர் மற்றும் கரோனா காரணமாக உக்ரைன், சீனாவில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களுக்கான பயிற்சியை நிறைவு செய்யும் திட்டத்தை 2 மாதத்துக்குள் தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்த இந்திய மாணவர்கள், 2022 ஜூன் 30-ம் தேதியும் மற்றும் அதற்கு முன்பும் மருத்துவ படிப்பை முடித்தவர்கள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வை (எப்எம்ஜிஇ) எழுத அனுமதிக்கப்படுவர். வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவமனை களப் பயிற்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள், இங்குள்ள மருத்துவமனைகளில் 2 ஆண்டு காலத்துக்கு கட்டாய பயிற்சியில் ஈடுபட வேண்டும். இந்திய சூழலுக்கு ஏற்ற வகையில் மருத்துவ நடைமுறைகளை அறிந்து கொள்ள இந்த பயிற்சி அவசியம். மற்ற மாணவர்கள் ஓராண்டு காலத்துக்கு இந்த பயிற்சியை தொடரலாம்.

தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளின்படி, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள், 2 ஆண்டு காலத்துக்கு மருத்துவமனை களப் பயிற்சியை நிறைவு செய்த பிறகே தங்களை மருத்துவராக பதிவு செய்து கொள்ள முடியும். வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு இந்த தளர்வு இந்த ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும். எதிர்காலத்தில் இதை முன்மாதிரியாக கருதக் கூடாது. இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.

யுக்ரேனில் இந்திய மாணவர்கள் 20,672 பேர் மருத்துவம் படிக்கின்றனர். போர் காரணமாக நாடு திரும்பிய இவர்கள் கணினிமய வகுப்புகளில் பங்கேற்றனர். தற்போது யுக்ரேனில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும், வகுப்புகளை தொடங்க யுக்ரேன் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »