Press "Enter" to skip to content

தைவானில் மோதும் அமெரிக்கா, சீனா: நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் பிராந்தியத்தில் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது.

“நெருப்புடன் விளையாடுகிறார்” என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது. நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை.

கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் மிக மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி.

“நான்சி பெலோசியின் பயணம் சர்ச்சையையோ, மோதலையோ ஏற்படுத்துவதற்கான எந்தக் காரணமும் இல்லை” என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

தைவானில் வந்திறங்கிய நான்சி பெலோசி, தனது பயணம் நீண்ட கால அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவானது என்றும் எந்த நாட்டின் இறையாண்மையையும் மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.

பெலோசியின் விமானம் தைவானில் வந்திறங்கியபோது, சீனாவின் பெருநிலப்பரப்புக்கும் தைவானுக்கும் இடையே உள்ள தைவான் ஜலசந்தியை சீனாவின் ராணு விமானங்கள் கடந்து சென்றதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் தைவான் அப்போது அதை மறுத்தது. பின்னர் 20 ராணுவ விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் வந்ததை ஒப்புக் கொண்டது.

தைவானை பிரிந்து சென்ற மாகாணமாக கருதும் சீனா, ஒரு நாள் அதனுடன் ஒன்றிணையும் என்று நம்புகிறது. தைவான் விவகாரத்தில் தலையிட்டால் ஆயுதப்படைகள் “சும்மா நிற்காது” என்று முன்னர் எச்சரித்தது.

விமானம் வந்த ஒரு மணி நேரத்திற்குள், தனது ராணுவம் இந்த வார இறுதியில் தைவானைச் சுற்றி வான் மற்றும் கடலில் தொடர்ச்சியான ராணுவப் போர் ஒத்திகைகளை நடத்தும் என்று அறிவித்தது. இந்தப் பயிற்சியில் உண்மையான குண்டுகள் பயன்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கும் சீனா, இந்தப் பகுதிகளுக்குள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழைய வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறது.

ஏற்கெனவே சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கோட்டை ஒட்டி தனது விமானங்களை சீனா நிறுத்தியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

“தைவானின் துடிப்பான ஜனநாயகத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை” மதிப்பதாகவே தனது பயணம் அமைந்திருப்பதாகவும், அமெரிக்க கொள்கைக்கு முரணாக இல்லை என்றும் நான்சி பெலோசி கூயிருக்கிறார்.

தைவான்

பட மூலாதாரம், Reuters

தைவான் நாடாளுமன்றத்தில் அவர் இன்று உரையாற்ற இருக்கிறார். அதிபர் சாய் இங்-வென்னை சந்தித்துப் பேச இருக்கிறார்.

இதனிடையே, நான்சி பெலோசியின் தைவான் பயணம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமெரிக்கத் தூதருக்கு சீனா அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியுள்ளது.

தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே ஆழமான பொருளாதாரப் பிணைப்பு இருக்கும் நிலையில், பெலோசியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தைவானின் பல்வேறு பொருள்களுக்கு சீனா தடை விதித்திருக்கிறது.

சீனா – தைவான் என்ன பிரச்னை?

தைவான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான “முதல் தீவு சங்கிலி” (first island chain) என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது.

சீனா தைவானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சீனா, தைவான்

ஆனால், சீனா தனது நோக்கங்கள் முழுவதும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.

தைவான் சீனாவில் இருந்து பிரிந்தது ஏன்?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.

தைவானுக்கு தப்பியோடிய பிறகு, சியாங் காய்-ஷேக் கோமின்டாங் கட்சியை வழிநடத்தினார்

பட மூலாதாரம், Getty Images

தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.

தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சர், சீனா உடனான தங்களது உறவு கடந்த 40 ஆண்டுகளில் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியுமா?

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற ராணுவமல்லாத வழிகளில் சீனா மீண்டும் தைவானுடன் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை எடுக்கலாம்.

ஆனால், ராணுவ மோதல் என்று வரும்போது, அது எந்த வகையில் இருந்தாலும், சீனாவின் படைகள் தைவான் படைகளை எளிதில் தோற்கடித்துவிடும்.

அமெரிக்காவுக்கு அடுத்து மற்ற உலக நாடுகளைவிட அதிகளவில் சீனா பாதுகாப்புத் துறைக்காகச் செலவழிக்கிறது. கடற்படையிலிருந்து ஏவுகணை தொழில்நுட்பம், விமானம், சைபர் தாக்குதல்கள் வரை பெரியளவிலான ஆற்றலைப் பெறுவதற்காக, சீனா செலவு செய்கிறது.

சீனா மற்றும் தைவானின் ராணுவ பலம்

சீனாவுடைய ராணுவ சக்தியின் பெரும்பகுதி வேறு இடங்களில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக செயலிலுள்ள பணியாளர்களைப் பொறுத்தவரை, இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.

ஒரு வெளிப்படையான மோதலில், தைவான் சீனத் தாக்குதலின் வேகத்தைக் குறைப்பது, சீன படைகள் தைவானில் கரையிறங்குவதைத் தடுக்க முயல்வது, வெளியிலிருந்து உதவி கிடைக்கும் வரை காத்திருக்கும்போது கொரில்லா தாக்குதல்களை மேற்கொள்வது ஆகியவற்றைச் செய்ய முடியும் என்று சில மேற்கத்திய வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவிடம் இருந்து அந்த உதவி வரலாம்.

நிலைமை மோசமடைந்து வருகிறதா?

2021-ஆம் ஆண்டில், தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு ராணுவ விமானங்களை அனுப்பியதன் மூலம் சீனா அதன் அழுத்தத்தை அதிகரிக்க முயன்றது.

தைவான் 2020-ஆம் ஆண்டில் விமான ஊடுருவல் பற்றிய தரவுகளைப் பொதுவில் வெளியிடத் தொடங்கியது.

அதன்படி, அக்டோபர் 2021-இல், ஒரே நாளில் 56 ஊடுருவல்கள் என்ற அளவில் சீனாவின் ஊடுருவல் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.

உலகின் பிற பகுதிகளுக்கு தைவான் ஏன் முக்கியமானது?

தைவான் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது.

உலகின் அன்றாட மின்னணு உபகரணங்களான கைபேசிகள், மடிக்கணினிகள், கடிகாரங்கள், கேம் கன்சோல்கள் எனப் பெரும்பாலானவை, தைவானில் தயாரிக்கப்பட்ட கணினி சிப்களால் இயக்கப்படுகின்றன.

தைவான் கணினி சிப் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது

ஓர் அளவீட்டின்படி, தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் அல்லது டிஎஸ்எம்சி என்ற ஒரு தைவானிய நிறுவனம், உலக சந்தையில் பாதியைத் தன்னகத்தே வைத்துள்ளது.

டிஎஸ்எம்சி என்பது, வார்ப்பகம் என்றழைக்கப்படும், நுகர்வோர் மற்றும் ராணுவ வாடிக்கையாளர்களால் வடிவமைக்கப்பட்ட சிப்களை உருவாக்கும் நிறுவனம். இந்தத் துறையின் 2021-ஆம் ஆண்டு மதிப்பு கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்.

தைவானில் சீனாவின் கையகப்படுத்தல், உலகின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்று மீது பெய்ஜிங்கிற்கு கட்டுப்பாட்டைக் கொடுக்கலாம்.

ராணுவ தாக்குதல் இருக்காது என்றே தைவானியர்கள் கருதுகின்றனர்

தைவான் மக்கள் இதுகுறித்துக் கவலைப்படுகிறார்களா?

சீனாவுக்கும் தைவானுக்கு இடையே சமீபகால பதற்றங்கள் இருந்தபோதிலும், பல தைவானிய மக்கள் ஒப்பீட்டளவில் கவலையற்று உள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது.

அக்டோபரில் தைவான் பொதுக் கருத்து அறக்கட்டளை, இறுதியில் சீனாவுடன் போர் நடக்கும் என்று நினைக்கிறீர்களா என மக்களிடையே கேட்டது.

தைவானியர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

அதில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் (64.3%) இல்லையென்று பதிலளித்துள்ளனர்.

தைவானில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களை தைவானியர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதாக மற்றுமொரு ஆராய்ச்சி கூறுகிறது.

1990-களின் முற்பகுதியிலிருந்து தேசிய செங்ச்சி பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகள், சீனர்கள் அல்லது சீனர்கள் மற்றும் தைவானியர்கள் என அடையாளம் காணும் மக்களின் விகிதம் குறைந்துள்ளது என்றும் பெரும்பாலான மக்கள் தங்களை தைவானியர்கள் என்றே கருதுவதாகவும் கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »