Press "Enter" to skip to content

தைவான் பதற்றம்: அமெரிக்காவுடன் உறவை முறிக்கும் சீனா – காலநிலை மாற்றம், போதைமருந்து ஒத்துழைப்பில் சிக்கல்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவுடனான முக்கிய ஒத்துழைப்புகளை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்திருக்கிறது.

இது அமெரிக்கா – சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் கசப்பை அதிகரித்திருக்கிறது.

பருவநிலை மாற்றம், ராணுவப் பேச்சுக்கள், சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடும் முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்துகிறது.

முன்னதாக நான்சி பெலோசி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொருளாதாரத் தடைகளை சீனா அறிவித்தது.

தற்போது தன்னாட்சிப் பிரதேசமாக இருக்கும் தைவானை தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாக சீனா கருதுகிறது. பின்னாளில் அதை தன்னுடன் இணைத்துக் கொள்ள முடியும் என்றும் நம்புகிறது.

அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அமெரிக்கா மற்றும் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புதல், பருவநிலை மாற்றம் மற்றும் சர்வதேச குற்றங்களை விசாரிப்பதற்கான ஒத்துழைப்பு ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அது கூறியது.

சமீபத்திய ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியம் குறித்து இரு பெரும் வல்லரசுகளும் இணக்கமான ராஜீய உறவுகளைப் பேணி வருகின்றன. கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காலநிலை உச்சிமாநாட்டில், கார்பன் உமிழ்வைக் குறைக்க அமெரிக்காவுடன் “அவசரநிலையில்” பணியாற்றப் போவதாக சீனா உறுதியளித்தது.

ஃபெண்டானில் போன்ற சட்டவிரோத போதை மருந்துகளின் வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றத் திட்டமிட்டிருந்தன.

தைவான்

பட மூலாதாரம், REUTERS/Aly Song

“சீனாவின் கடுமையான எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல்” தைவானுக்கு நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டதால் இந்த ஒத்துழைப்பை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது என்று சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெலோசியின் தைவான் பயணம் ‘ஆத்திரமூட்டக்கூடியது’ என்றும் சீனா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் காவல்துறையால் கொல்லப்பட்ட கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலையுடன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை ஒப்பிட்டு சீனா விமர்சித்துள்ளது.

“அமெரிக்கா தன்னை ‘உலக காவல் துறைகாரராக’ கருதுவதையும், மற்ற நாடுகளை விரும்பியபடி கழுத்தை நெரிக்கக்கூடிய ஜார்ஜ் ஃபிளாய்டாக நடத்துவதையும் அனுமதிக்க முடியாது” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சீன வெளியுறவு செய்தித் தொடர்பான் ஹுவா சுன்யிங் பதிவிட்டார்.

ஆனால் பெலோசியின் தைவான் பயணத்தை அமெரிக்கா தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது.

நான்சி பெலோசி

பட மூலாதாரம், Getty Images

பெலோசிக்கு தைவானுக்குச் செல்ல “எல்லா உரிமையும் உள்ளது” என்றும், சீனாவின் நடவடிக்கைகள் “அடிப்படையில் பொறுப்பற்றவை” என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் தெரிவித்தார்.

தைவானைச் சூழ்ந்து குண்டுகளை வீசும் சீனா

போர்ப்பயிற்சியின் ஒரு பகுதியாக சீனாவின் விமானங்களும், கப்பல்களும் தைவானின் கடல் எல்லையைக் கடந்து குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்து வருகின்றன. அதே நேரத்தில் முன்னெச்சரிக்கையாக படைகளைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது தைவான்.

ஏவுகணை அமைப்புகளை தைவான் தனது எல்லையில் நிலைநிறுத்தியிருக்கிறது. விமானங்களும் கப்பல்களும் எல்லையை ஒட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.

எனினும் சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் போரிட தங்களுக்கு விருப்பமில்லை எனவும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ராணுவ விமானங்கள், கப்பல்கள், ஏவுகணைகள் போன்றவை சீனாவின் போர்ப் பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையான குண்டுகளைக் கொண்டு இந்தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாக சீனா கூறியிருக்கிறது.

11 ஏவுகணைகளை வீசிய சீனா

தனது போர்ப்பயிற்சியின் ஒரு பகுதியாக 11 ஏவுகணைகளை தைவானைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் சீனா ஏவியது. அதிக உயரத்துக்குச் சென்று இலக்கி நோக்கி விழும் பாலிஸ்டிக் ரகத்தைச் சேர்ந்தவை இந்த ஏவுகணைகள்.

தைவானின் நிலப்பரப்புக்கு மேலே சில ஏவுகணைகள் சென்றதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக சீனா எதுவும் கூறவில்லை.

தைவான்

தைவான் மட்டுமல்லாமல் அருகேயிருக்கும் ஜப்பானுக்கு சீனாவின் போர் ஒத்திகை கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 4 ஏவுகணைகள் தைவானுக்கு மேலே பறந்ததாகவும், 5 ஏவுகணைகள் ஜப்பானின் எல்லைக்கு உள்பட்ட கடல் பகுதிக்குள் விழுந்ததாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான எல்லை எப்படிப்பட்டது?

சீனாவின் பெரு நிலப்பரப்புக்கும் தைவான் தீவுக்கும் இடையேயான தைவான் நீரிணையில் ஒரு மத்திய எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. இதை மீடியன் லைன் என்று கூறுகிறார்கள். சிலர் டேவிஸ் கோடு என்று குறிப்பிடுகிறார்கள்.

1955-ஆம் ஆண்டு இந்த எல்லையை அமெரிக்க கடற்படை வரையறுத்தது. இரு தரப்பும் அந்த எல்லையைத் தாண்டக்கூடாது என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. அந்த எல்லைப்பகுதியை தற்போது சீன விமானங்களும் கப்பல்களையும் தாண்டியிருக்கின்றன.

சீனா – தைவான் என்ன பிரச்னை?

தைவான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான “முதல் தீவு சங்கிலி” (first island chain) என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது.

சீனா தைவானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சீனா, தைவான்

ஆனால், சீனா தனது நோக்கங்கள் முழுவதும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.

தைவான் சீனாவில் இருந்து பிரிந்தது ஏன்?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.

தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சர், சீனா உடனான தங்களது உறவு கடந்த 40 ஆண்டுகளில் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தைவான் – சீனா போர் வந்தால் என்னவாகும்?

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற ராணுவமல்லாத வழிகளில் சீனா மீண்டும் தைவானுடன் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை எடுக்கலாம்.

ஆனால், ராணுவ மோதல் என்று வரும்போது, அது எந்த வகையில் இருந்தாலும், சீனாவின் படைகள் தைவான் படைகளை எளிதில் தோற்கடித்துவிடும்.

அமெரிக்காவுக்கு அடுத்து மற்ற உலக நாடுகளைவிட அதிகளவில் சீனா பாதுகாப்புத் துறைக்காகச் செலவழிக்கிறது. கடற்படையிலிருந்து ஏவுகணை தொழில்நுட்பம், விமானம், சைபர் தாக்குதல்கள் வரை பெரியளவிலான ஆற்றலைப் பெறுவதற்காக, சீனா செலவு செய்கிறது.

சீனா மற்றும் தைவானின் ராணுவ பலம்

சீனாவுடைய ராணுவ சக்தியின் பெரும்பகுதி வேறு இடங்களில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக செயலிலுள்ள பணியாளர்களைப் பொறுத்தவரை, இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.

ஒரு வெளிப்படையான மோதலில், தைவான் சீனத் தாக்குதலின் வேகத்தைக் குறைப்பது, சீன படைகள் தைவானில் கரையிறங்குவதைத் தடுக்க முயல்வது, வெளியிலிருந்து உதவி கிடைக்கும் வரை காத்திருக்கும்போது கொரில்லா தாக்குதல்களை மேற்கொள்வது ஆகியவற்றைச் செய்ய முடியும் என்று சில மேற்கத்திய வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பிற நாடுகளுக்கு தைவான் ஏன் முக்கியமானது?

தைவான் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது.

உலகின் அன்றாட மின்னணு உபகரணங்களான கைபேசிகள், மடிக்கணினிகள், கடிகாரங்கள், கேம் கன்சோல்கள் எனப் பெரும்பாலானவை, தைவானில் தயாரிக்கப்பட்ட கணினி சிப்களால் இயக்கப்படுகின்றன.

தைவான் கணினி சிப் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது

ஓர் அளவீட்டின்படி, தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் அல்லது டிஎஸ்எம்சி என்ற ஒரு தைவானிய நிறுவனம், உலக சந்தையில் பாதியைத் தன்னகத்தே வைத்துள்ளது.

டிஎஸ்எம்சி என்பது, வார்ப்பகம் என்றழைக்கப்படும், நுகர்வோர் மற்றும் ராணுவ வாடிக்கையாளர்களால் வடிவமைக்கப்பட்ட சிப்களை உருவாக்கும் நிறுவனம். இந்தத் துறையின் 2021-ஆம் ஆண்டு மதிப்பு கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்.

தைவானில் சீனாவின் கையகப்படுத்தல், உலகின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்று மீது பெய்ஜிங்கிற்கு கட்டுப்பாட்டைக் கொடுக்கலாம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »