டிக் டாக்கில் “பிரேக்-அப்” என்ற வார்த்தை 21 பில்லியனுக்கும் அதிகமான முறை டேக் செய்யப்பட்டுள்ளது. இது எத்தனை பேர் ‘பிரேக் – அப்’ பற்றிப் பேச அல்லது ஆலோசனை பெற விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
அப்படியெனில், அரோன்கே ஓமாமே போன்ற ‘பிரேக்-அப்’ பயிற்சியாளர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் அனுபவத்தின் மூலம் பிறருக்கு உதவி செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
யார் இந்த அரோன்கே ஓமாமே? பிரேக்-அப் பயிற்சியாளராக அவர் எப்படி உருவானார்?
1993ஆம் ஆண்டு. 35 வயதான வணிக வழக்கறிஞர் அரோன்கே ஓமாமே தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய மனவேதனையைக் கொடுக்கும் பாடத்தைக் கற்றுக்கொள்ள உள்ளார்.
அவர் நைஜீரிய நகரமான லாகோஸில் உள்ள நீதிமன்றத்தில் இருக்கிறார், ஆனால் அவர் ஒரு வாடிக்கையாளரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் தன் தோழியான மேரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆதரவாக இருக்கிறார். அவருடைய பெற்றோர் விவாகரத்து பெறுகிறார்கள்.
நீதிபதி ஒரு சிறிய இடைவேளை விடுகிறார். மேரியும் அவரது தாயும் மேரியின் தந்தையை நோக்கிச் செல்வதை அரோன்கே உறைந்துபோய்ப் பார்க்கிறார். நீதிமன்ற அறை அமைதியாக இருக்கிறது. எல்லா கண்களும் அந்தக் குடும்பத்தின் மீது உள்ளது.
அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு திகைப்பு நிலவுகிறது.
மேரியும் அவருடைய தாயும் மேரியின் தந்தை முன் மண்டியிட்டனர். அவர்கள் தலை குனிந்து குடும்பத்தை உடைக்க வேண்டாம் என்று அவரிடம் மன்றாடுகிறார்கள்.
ஆனால் மேரியின் தந்தை அவர்களை ஏளனமாக பார்த்து, சத்தமாக எல்லோர் முன்னிலையிலும் அவர்களை திட்டுகிறார்.
இது அரோன்கேவை பாதித்த ஒரு சம்பவம். ஆனால், சிறு வயது முதலே பல அனுபவங்களை அரோன்கே கடந்து வந்துள்ளார்.
1967ஆம் ஆண்டு. ஒன்பது வயதான அரோன்கே தனது நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்தில் இருந்தபோது, தலைமை ஆசிரியை அவரை நோக்கிச் செல்கிறார்.
அவரது தந்தை வாசலில் காத்திருப்பதாக அரோன்கேவிடம் அவர் கூறுகிறார்.
அரோன்கேவின் தந்தை அவரிடம் அவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள், சில வாரங்களுக்கு பாட்டியின் வீட்டில் தங்கப் போகிறார் என்று கூறுகிறார்.
அவருடைய பாட்டியின் வீடு ஊருக்கு வெளியே பல மைல் தொலைவில் இருப்பதால், அவரை யாரும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாது.
அவரது தந்தையும் தாயும் அவரைப் பார்க்க வருவார்கள். ஆனால், அவர்கள் தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை விவாதிப்பார்கள். அரோன்கேவுக்கு குழப்பமாக இருந்தது. ஆனால், கேள்விகள் கேட்க சரியான நேரம் இல்லை எனத் தோன்றியது.
அரோன்கே தனது உறவினர்களுடன் விளையாடுகிறார். அவரது பாட்டியுடன் சமைக்கிறார். இரண்டு வாரங்கள் பள்ளிக்கு விடுமுறை எடுப்பது வேடிக்கையாக இருந்தது. அவர் மகிழ்ச்சியாக இருந்தார் அல்லது குறைந்தபட்சம், அவர் சோகமாக இல்லை.
ஒரு மாதத்திற்குள் அவரது குடும்பம் புதிய மாற்றத்தைக் கண்டது.
அவருடைய தந்தை, வீட்டை விட்டு வெளியேறுகிறார். அரோன்கேவும் அவருடைய உடன்பிறந்தவர்களும் அவர்களின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர். அவருடைய பெற்றோர் சுமூகமாக இருந்தனர். குடும்பம் முற்றிலுமாக உடையவில்லை. ஆனால், ஒருவர் இருந்தால், மற்றொருவர் இருக்க மாட்டார்.
“உறவுகள் கடைசி வரை நீடிக்காது என்பதை நான் கற்றுக்கொண்டேன்,” என்று அரோன்கே கூறுகிறார். ” சம்பந்தப்பட்ட இருவரும் கண்ணியத்துடன் பிரிவது எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும்.”
அவருடைய பெற்றோரின் திருமணம் ஏன் தொடரவில்லை என்பது குறித்து அவருக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி பொருட்படுத்தவில்லை.
அவர் சிறுவயதில் மகிழ்ச்சியாகவே இருந்ததாகக் கூறுகிறார். ஆனால், அடுத்து நிகழ்ந்தது அவருக்குப் பெரும் மனவேதனையை அளித்தது.
அரோன்கேவுக்கு வயது 18, அவர் சட்டப் பள்ளியில் படித்து வருகிறார். அவருக்கு சிறந்த தோழனாக இருந்தவருடன் முதல் முறையாக காதலில் விழுந்தார்.
ஆனால் ஒரு பிரச்னை இருந்தது. அவர் காதலில் விழுந்த நண்பர் பாலியல் உறவு கொள்ள விரும்புகிறார். அரோன்கே அதற்குத் தயாராக இல்லை.
“திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு வைத்துகொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று அவர் கூறுகிறார்.
ஒரு நாள், தனது காதலரை ஆச்சர்யப்படுத்த அவரது வீட்டிற்குச் சென்றார். ஆனால், அங்கு நடந்தது அவருக்கு அதிர்ச்சியை தந்தது. அந்த இளைஞர் வேறோர் இளம் பெண்ணை முத்தமிடுவதைக் கண்டார்.
“நான் மனம் உடைந்துபோனேன். அவர் என்னை தொடர்ந்து வருவார் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு வெளியேறினேன்.”
ஆனால், அவர் வரவில்லை.
சில நாட்களுக்கு பிறகு, அரோன்கேவுக்கு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.
“இனி அவருடைய வாழ்க்கையில் எனக்கு எந்தப் பகுதியும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.”
முதல் நிராகரிப்பு அரோன்கேவை மிகவும் மன உடைய செய்தது.
“நான் வெட்கப்பட்டேன். என் உலகம் நொறுங்கிவிட்டதாக உணர்ந்தேன்.”
அதன் பிறகு, இரண்டு வாரங்கள் அரோன்கே வகுப்பிற்குச் செல்வில்லை. அவர் படுக்கையில் கிடந்து அழுதார். வீட்டுக்குள்ளேயே இருந்தார்.
அவரது நண்பர்கள் அவரைப் பார்த்துச் சென்றனர். வெளியுலகில் அவருக்குப் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று அவர்கள் அவரிடம் கூறினார்கள்.
பின்னர் ஒரு நாள், அவருடைய மனநிலை மாறியது. அவருக்கு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் உயிர்ப்புடன் வாழத் தொடங்கினார்.
இரண்டு வாரம் தனிமையில் இருந்தது, அவருக்கு அறுதலை அளித்தது. காலப்போக்கில் அவரால் மீண்டும் அந்த நபருடன் இயல்பாக நட்பு கொள்ளவும் முடிந்தது.
“நான் நன்றாக அழுதது நல்லது என்றே கருதுகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
17 ஆண்டுகள் கழித்து, லாகோஸில் உள்ள நீதிமன்ற அறையில் 60 வயதான ஒரு பெண் எப்படி தன்னை தகாத வார்த்தைகளால் பேசி மரியாதையின்றி நடத்தும் ஒருவர் முன்பாக மண்டியிட்டுக் கெஞ்ச முடிகிறது என்று திகைத்தார்.
சிறிது காலத்திற்கு முன்பு தான், அரோன்கே விவாகரத்து பெற்றிருந்தார். ஆனால் அவரது விவாகரத்து இவ்வளவு மோசமாக இல்லை.
“இந்த கலாசாரம், ஒரு பெண் கணவரிடம் அடிபணிந்து போவதை ஆதரிக்கிறது. நான் முன்பு இதைக் கவனிக்கவில்லை என்றாலும் அப்போது கவனித்துவிட்டேன்,” என்கிறார் அரோன்கே.
அதனால் அன்று, மேரியின் தாயின் திருமணம் சட்டப்பூர்வமாக கலைக்கப்படும் நீதிமன்ற அறையை விட்டு வெளியேறியபோது, அரோன்கே ஒரு முடிவை எடுக்கிறார். முடிந்தவரை கண்ணியத்துடன் மக்கள் தங்கள் உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர அவர் உதவ வேண்டும் என்று முடிவு செய்தார்.
டிஜிட்டலில் அதிகரிக்கும் ‘பிரேக்-அப்’கள்
- கடந்த ஐந்தாண்டுகளில் “கெட் ஓவர் பிரேக்-அப்” என்ற தேடல்கள் இரட்டிப்பாகிவிட்டதாகவும், 2012ஆம் ஆண்டில் இருந்து மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாகவும் கூகுள் கூறுகிறது.
- செயற்கை நுண்ணறிவு தளமான KeywordTool.io பல தளங்களில் தேடல் சொற்களை அளவிடும் தளம். இது கடந்த 10 ஆண்டுகளில் “உங்கள் பிரேக்-அப்”பில் இருந்து மீள்வது எப்படி’ என்று அயர்லாந்தில் இருந்து அதிகமாகத் தேடப்பட்டதாகக் கூறுகிறது. நைஜீரியா, சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன.
- டிக் டாக் செயலியில் #breakup 21 பில்லியனுக்கும் அதிகமான டேக் சொற்களைக் கொண்டுள்ளது. #gettingoverabreakup 8.7 மில்லியன் டேக் சொற்களைக் கொண்டுள்ளது.
- தனிப்பட்ட மேம்பாட்டு பயிற்சி வணிகத்திற்கான தொழிற்துறை அமைப்பான சர்வதேச பயிற்சிக் கூட்டமைப்பு, பிரேக்-அப் பயிற்சியை உள்ளடக்கிய உறவு குறித்த பயிற்சியின் மதிப்பு இப்போது வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலரை விட அதிகமாக உள்ளதாகக் கூறுகிறது.
அடுத்த சில ஆண்டுகள், குடும்பச் சட்டம் மற்றும் உறவுகள் குறித்த ஆலோசனை தரும் பயிற்சிகளை எடுப்பதில் மூழ்கிவிடுகிறார்.
இப்போது 2022ஆம் ஆண்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலான சட்ட ரீதியான பணிக்கு நடுவிலும், அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளராக 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருக்கு, பெரும்பாலும் பெண்களிடம் இருந்து, ஃபேஸ்புக்கிலும் மின்னஞ்சலிலும், இதுகுறித்த குறுஞ்செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
“ஒரு பிரேக்-அப் பயிற்சியாளர் தவிர்க்க முடியாத, வேதனையான காலகட்டத்தை தன்னபிக்கையுடன் திரும்பிப் பார்க்க வைக்க உதவுகிறார்,” என்று அவர் கூறுகிறார்.
இது ரகசியமாக செயல்படும் துறையாக இருக்கிறது.
“சமூக ஊடகங்களில் என்னை வெளிப்படையாகப் பின்தொடராதவர்களிடமிருந்து நான் குறுஞ்செய்திகளைப் பெறுகிறேன்,” என்று அவர் கூறுகிறார். “இது ஓர் உறவு முறியும்போது, அதில் அவமானம் இருக்கிறது என்பதை எனக்குச் சொல்கிறது.”
ஆனால், நிச்சயமாக மன உளைச்சலில் இருந்து விடுபட உதவும் துறைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
அரோன்கே மூன்று அமர்வுகளுக்கு சுமார் 28,000 ரூபாய் வசூலிக்கிறார். தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வது என்பதற்கான கட்டமைப்பை வழங்குவதன் மூலம் தனது ஆலோசனையைத் தொடங்குவதாக அவர் கூறுகிறார். முதல் இரண்டு வாரங்கள் முக்கியமானவை என்கிறார் அவர். அவர் தனது வாடிக்கையாளர்களை மனம் விட்டு அழுமாறு ஊக்குவிக்கிறார். அனைத்து சமூக ஊடகங்களிலும் அந்த நபரை பின்தொடர்வதை நிறுத்தவும் உதவி செய்கிறார். மேலும் அவரை அழைப்பதற்காகத் தொலைபேசியை அணுகுவதைத் தடுக்க ஒரு நம்பகமான நண்பரையும் பரிந்துரைக்கிறார்.
இந்தப் பணிக்காக, அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.
“நிச்சயமாக இவர் இந்த பெண்ணின் குடும்பத்தை உடைக்க விரும்புகிறார், அவரே விவாகரத்து பெற்றவர்” என்று இணையத்தில் விமர்சனங்கள் வருவதாகக் கூறும் அரோன்கே, அதைப் பற்றித் தான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்கிறார். அவருக்கு தற்போது ஒரு துணை இருக்கிறார். ஆனால், அவர் ஒருவேளை தனியாக இருந்தாலும், அது தன்னைப் பாதிக்காது என்று கூறுகிறார்.”எப்படி இருந்தாலும், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சில நேரங்களில் ஓர் உறவை இழப்பது, ஆரோக்கியமான உறவை எப்படி உருவாக்குவது என்பதை அறிவதற்கான ஒரு விழிப்புணர்வாக அமையும்,” என்கிறார் அரோன்கே.
மனவேதனையில் இருந்து மீள அரோன்கே கூறும் சில டிப்ஸ்
- அழுதுவிடுங்கள். உங்கள் வலிகளைக் கரைக்க அழுகை உதவும்.
- குறைந்தது இரண்டு வாரங்களுக்கு உங்கள் முன்னாள் காதலரை/கணவரை அழைக்கவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ வேண்டாம்.
- நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு நண்பரிடம் அல்லது உறவினரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
- நீங்கள் துக்கத்தில் இருக்கிறீர்கள் என்பது போல, உங்கள் முன்னாள் காதலரும்/கணவரும் துக்கத்தில் இருப்பார்கள் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது மாற்றத்திற்கான காலமாக இருக்கும்.
- உங்கள் முன்னாள் துணைக்கு ஒரு புதிய பெயரைக் கொடுங்கள். உதாரணமாக, அவரது பெயர் ஸ்டீவன் என்றால் அவரைப் பற்றிப் பேசும்போது அவரை ராபர்ட் என்று அழைக்கவும். அது உங்களுக்குக் கோபத்தை குறைக்கலாம்.
- எல்லா சமூக ஊடகங்களில் இருந்தும் அவர்களைப் பின்தொடர்வதை நிறுத்துங்கள். நீங்கள் இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய இது நேரம் அல்ல!
- ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டும் என்ற ஆசை, நோக்கமற்று சுற்றவேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது. உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி பற்றிச் சிந்தியுங்கள்.
- உறவுகள் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் பகிர்ந்திருக்கலாம். அதனால், உங்களுக்குத் தேவைப்பட்டால் அவற்றை மாற்றுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com