தமது மக்களுக்கும் அரியணைக்கும் தமது வாழ்வை அர்ப்பணிக்கும் உறுதியும் கடமை உணர்ச்சியும்தான், ராணி இரண்டாம் எலிசபெத்தின் நீண்ட நெடிய ஆளுகையின் அடையாளங்கள் ஆகும்.
பிரிட்டிஷ் செல்வாக்கு சரியும் நிலையில், அடையாளம் தெரியாத அளவுக்கு சமூகம் மாறிய சூழலில், முடியாட்சியின் தேவையே கேள்விக்குள்ளாகிப் போன நிலையில், தீவிரமாக மாறிவந்த உலகில் பலவற்றுக்கும் ஒரு மாறாத புள்ளியாக அவர் விளங்கினார்.
இவர் பிறந்த நேரத்தில், மணிமுடியை ஏற்பது இவருக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் என வேறு எவரும் ஊகித்துக் கூட பார்த்திருக்காத வேளையில், மோசமான அந்த காலகட்டத்தில் முடியாட்சியை வெற்றிகரமாக இவர் கையாண்டது மேலும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகனான யார்க் கோமகன் ஆல்பர்ட் மற்றும் அவரது மனைவி மற்றும் சீமாட்டியான எலிசபெத் பாவனை லயன் ஆகியோரின் முதல் குழந்தையாக லண்டனின் பெர்க்கலீ சதுக்கம் அருகில் உள்ள ஒரு வீட்டில் 1926ம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர் பிறந்தார்.
எலிசபெத்தும் 1930-இல் பிறந்த அவரது இளைய சகோதரி மார்கரெட் ரோஸும் வீட்டிலேயே கல்வி பயின்றனர். அன்பான குடும்பச் சூழலில் வளர்ந்தனர். தமது தந்தையுடனும் தாத்தாவான ஐந்தாம் ஜார்ஜுடனும் எலிசபெத் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
நிறைய குதிரைகளும், நாய்களும் வைத்துள்ள கிராமத்துச் சீமாட்டியாக வேண்டும் என்று தாம் விரும்புவதாக தமது குதிரையேற்ற பயிற்சியாளரிடம் தமது 6-ஆவது வயதில் கூறியுள்ளார் எலிசபெத்.
மிகச் சிறிய வயதில் இருந்தே சிறப்பான பொறுப்புணர்ச்சி உடையவராக இவர் விளங்கினார் என்று சொல்லப்படுகிறது. “ஒரு மழலையிடம் கிடந்த ஆச்சரியப்படத்தக்க ஆளுகைத்திறன்” என்று பிற்காலத்தில் பிரிட்டன் பிரதமராக ஆன வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
பள்ளி செல்லாவிட்டாலும்கூட, மொழிகள் மீது ஆளுமைத்திறன் மிக்கவராக விளங்கிய எலிசபெத், ராணி அரசியலமைப்பு சட்ட வரலாறு குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
எலிசபெத் தமது சம வயது பெண்களோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக ‘முதல் பக்கிங்ஹாம் பேலஸ்’ என்ற பெயரில் சிறப்பு சாரணியர் அணி ஒன்று உருவாக்கப்பட்டது.
எலிசபெத்தும் 1930இல் பிறந்த அவரது இளைய சகோதரி மார்கரெட் ரோஸும் வீட்டிலேயே கல்வி பயின்றனர். அன்பான குடும்பச் சூழலில் வளர்ந்தனர். தமது தந்தையுடனும் தாத்தாவான ஐந்தாம் ஜார்ஜுடனும் எலிசபெத் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
நிறைய குதிரைகளும், நாய்களும் வைத்துள்ள கிராமத்துச் சீமாட்டியாக வேண்டும் என்று தாம் விரும்புவதாக தமது குதிரையேற்ற பயிற்சியாளரிடம் தமது 6-ஆவது வயதில் கூறியுள்ளார் எலிசபெத்.
மிகச் சிறிய வயதில் இருந்தே சிறப்பான பொறுப்புணர்ச்சி உடையவராக இவர் விளங்கினார் என்று சொல்லப்படுகிறது. “ஒரு மழலையிடம் கிடந்த ஆச்சரியப்படத்தக்க ஆளுகைத்திறன்” என்று பிற்காலத்தில் பிரிட்டன் பிரதமராக ஆன வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
பள்ளி செல்லாவிட்டாலும் கூட, மொழிகள் மீது ஆளுமைத்திறன் மிக்கவராக விளங்கிய எலிசபெத், ராணி அரசியலமைப்பு சட்ட வரலாறு குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
எலிசபெத் தமது சம வயது பெண்களோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக ‘முதல் பக்கிங்ஹாம் பேலஸ்’ என்ற பெயரில் சிறப்பு சாரணியர் அணி ஒன்று உருவாக்கப்பட்டது.
பதற்றம் அதிகரிப்பு
1936-ஆம் ஆண்டு மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இறந்தபோது, டேவிட் என்று அறியப்பட்ட அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்ட் மன்னர் ஆனார்.
எனினும், இரண்டு முறை மணவிலக்கு பெற்ற அமெரிக்கரான வாலிஸ் சிம்ப்சன் என்பவரை அவர் தமது மனைவியாகத் தேர்ந்தெடுத்தது மத அடிப்படையிலும், அரசியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்த ஆண்டில் இறுதியில் அவர் மணிமுடியைத் துறந்தார்.
இதையடுத்து யார்க் கோமகன் தயக்கத்தோடு ஆறாம் ஜார்ஜ் மன்னரானார். அவரது முடிசூட்டும் விழாவில் எலிசபெத் பெற்ற அனுபவம், காலம் அவருக்கு எதை வழங்கக் காத்திருந்ததோ அதன் சுவையில் கொஞ்சம் அவருக்கு வழங்கியது. அந்த விழா குறித்துப் பிறகு எழுதிய எலிசபெத், அங்கு நடந்த பிரார்த்தனை “மிக மிக அற்புதமாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் தீவிரமாகி வந்த பதற்றங்களின் பின்னணியில், புதிய அரசர், அவரது மனைவியான எலிசபெத் ராணியோடு இணைந்து முடியரசின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க ஆயத்தமானார். இந்த முன்னுதாரணத்தை அவர்களது மூத்த மகள் கவனிக்கத் தவறவில்லை.
1939-ஆம் ஆண்டு அரசர்-ராணியோடு டார்ட்மௌத்தில் உள்ள ராயல் கடற்படைக் கல்லூரிக்குச் சென்றார் 13 வயது இளவரசி. அவருக்கும் அவரது தங்கை மார்கரெட்டுக்கும் அவர்களது உறவினரும் கிரீஸ் இளவரசருமான பிலிப் பாதுகாவலராக வந்தார்.
தடைகள்
அவர்கள் சந்தித்தது அது முதல் முறையல்ல. ஆனால், பிலிப் மீது எலிசபெத்துக்கு அப்போதுதான் முதல்முறையாக ஈர்ப்பு ஏற்பட்டது. தமது கடற்படைப் பணியின் விடுமுறைகளில் இருக்கும்போதெல்லாம் இளவரசர் பிலிப் தமது அரச குடும்ப உறவினர்களை சந்தித்தார். 1944 வாக்கில், தமக்கு 18 வயது ஆனபோது பிலிப் மீது தெளிவாகவே காதல் வயப்பட்டிருந்தார் எலிசபெத். தனது அறையில் பிலிப்பின் படத்தை வைத்திருந்தார். இருவரும் கடிதங்களை பரிமாறிக் கொண்டார்கள்.
போர் முடிவடைந்த நேரம், துணை பிராந்திய படையில் சேர்ந்த இளவரசி, ஒரு பார வண்டியை ஓட்டவும் பழுது பார்க்கவும் கற்றுக்கொண்டார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததை குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்ட ‘ஐரோப்பிய வெற்றி நாள்’ நிகழ்வில், பக்கிங்ஹாம் அரண்மனை எதிரே ‘தி மால்’ எனப்படும் ராஜவீதியில் ஆயிரக் கணக்கானோர் கூடியிருக்க, தமது அரச குடும்பத்தினரோடு சேர்ந்து பங்கேற்றார் எலிசபெத்.
“நாங்களே வெளியில் சென்று பார்க்கலாமா என்று அப்போது பெற்றோரை கேட்டோம்,” என்று கேட்டதை பின்னொருமுறை நினைவு கூர்ந்த அவர், “அடையாளம் காணப்படாலாம் என்று எண்ணி நாங்கள் பயந்தோம். வைட்ஹால் பகுதியில் முன்பின் தெரியாதவர்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடந்ததை நினைவுகூர்கிறேன். மகிழ்ச்சி மற்றும் நிம்மதிப் பேரலையில் நாங்கள் அனைவரும் மிதந்தோம்” என்றார்.
போருக்குப் பிறகு, இளவரசர் பிலிப்பை மணம் முடிக்க விரும்பிய அவரது ஆசைக்கு குறுக்கே பல தடங்கல்கள் நிலவின.
தமது நம்பிக்கைக்குரிய ஒரு மகளை இழக்க அரசர் தயங்கினார். தமது வெளிநாட்டு பூர்விகத்தை ஏற்காத அரச அமைப்பின் சம்பிரதாயத்தை வென்றாக வேண்டிய நிலை பிலிப்புக்கு ஏற்பட்டது.
தந்தையின் மரணம்
ஆனால், கடைசியில் இந்த ஜோடியின் விருப்பமே வென்றது. 20 நவம்பர், 1947 அன்று ‘வெஸ்ட்மின்ஸ்டர் அபே’யில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
போருக்குப் பிறகு களை இழந்திருந்த லண்டன் நகருக்கு இந்த விழா வண்ணம் சூட்டியது. அதன் பிறகு பிலிப் ‘எடின்பரோ கோமகன்’ ஆனார். ஆனால் கடற்படை அதிகாரியாக தொடர்ந்தார். சிறிது காலம் அவருக்கு மால்டாவில் பணி அளிக்கப்பட்டதால், இளம் தம்பதியால், ஒப்பீட்டளவில் சாதாரண வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது.
அவர்களது முதல் மகன் சார்லஸ் 1948ல் பிறந்தார். அதைத் தொடர்ந்து 1950ல் ஆனி என்ற மகள் பிறந்தாள்.
உலகப் போர் கால கட்டத்தில் கடும் உளைச்சலுக்கு ஆளான மன்னருக்கு, வாழ்நாள் முழுவதும் அவர் கடைப்பிடித்த தீவிர புகைப்பழக்கம், தீராத நுரையீரல் புற்றுநோய் பாதிப்பாக வந்தது.
1952ம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போது 25 வயதான எலிசபெத்தும் பிலிப்பும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாவுக்கு புறப்பட்டார்கள். மருத்துவர்களின் அறிவுரையையும் புறக்கணித்துவிட்டு, தம்பதியரை வழியனுப்பி வைக்க விமான நிலையத்துக்குச் சென்றார் அரசர். எலிசபெத் தமது தந்தையை உயிரோடு பார்த்த கடைசி நிகழ்வாக அது ஆகிப்போனது.
கென்யாவில் ஒரு வேட்டை பூங்கா விடுதியில் தங்கியிருந்தபோது அரசரின் இறப்புச் செய்தியை எலிசபெத் கேள்விப்பட்டார். பிறகு உடனடியாக லண்டனுக்கு புதிய ராணியாக திரும்பிய தருணத்தை அவர் பின்பொரு சமயம் நினைவுகூர்ந்தார்.
“ஒரு வகையில், எனக்கு பயிற்சி இல்லை. மிக இளமையிலேயே என் தந்தை இறந்துவிட்டார். எனவே, திடீரென பொறுப்பேற்றுக் கொண்டு ஆனமட்டும் சிறப்பாகப் பணியாற்றும்படி ஆனது” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும்
1953 ஜூனில் நடந்த எலிசபெத்தின் முடிசூட்டு விழா, பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் எதிர்ப்பையும் மீறி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பல லட்சக்கணக்கானவர்கள் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு கூடி இரண்டாம் எலிசபெத் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றதை கண்டனர். அவர்களில் பலர் அப்போதுதான் முதல் முறையாக தொலைக்காட்சியைக் கண்டனர்.
பிரிட்டன் அப்போதும் போருக்குப் பிந்தைய சிக்கன நடவடிக்கையைத் தொடர்ந்து வந்த நிலையில், விமர்சகர்கள் அந்த முடிசூட்டு விழாவை புதிய எலிசபெத் யுகத்தின் உதயமாகப் பார்த்தனர்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வருவதை இரண்டாம் உலகப் போர் விரைவுபடுத்தியது. புதிய ராணி 1953-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளில் நீண்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா உள்ளிட்ட பல பகுதிகள் ஏற்கெனவே விடுதலை அடைந்திருந்தன.
ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் ஆட்சியில் இருக்கும் போது சென்ற முதல் பிரிட்டிஷ் ராணி ஆனார் எலிசபெத். அவரை நேரில் பார்ப்பதற்கு ஆஸ்திரேலிய குடிமக்களில் முக்கால்வாசிபேர் திரண்டு வந்ததாக கணக்கிடப்பட்டது.
1950கள் முழுவதும் மேலும் பல நாடுகள் யூனியன் ஜாக் கொடியை கீழிறக்கின. முன்னாள் குடியேற்ற நாடுகளும், டொமினியன்களும் அப்போது தன்னிச்சையாக ஒன்று சேர்ந்து நாடுகளின் குடும்பம் ஒன்றை உருவாக்கின.
புதிதாக உருவாகி வந்த ஐரோப்பிய பொருளாதார சமூகத்துக்கு, புதிதாக உருவான காமன்வெல்த் எதிரணியாகத் திகழ முடியும் என்று பல அரசியல்வாதிகள் நினைத்தனர். ஓரளவுக்கு பிரிட்டிஷ் கொள்கை என்பது கண்டத்தை விட்டு வெளியே போனது.
தனிப்பட்டத் தாக்குதல்
ஆனால், நெருக்கடி நேரத்தில் கூட்டாக முடிவெடுப்பதில் காமன்வெல்த் ஒருமித்து செயல்படாதது 1956-இல் ஏற்பட்ட சூயஸ் பின்னடைவில் வெளிப்பட்டு, பிரிட்டனின் செல்வாக்கு சரிவதை விரைவுபடுத்தியது.
சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கிக் கொள்ள எகிப்து முயன்றது. அந்த அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு பிரிட்டிஷ் படைகளை அனுப்பும் முடிவு, தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் படைகளைப் பின்வாங்கியதில் முடிந்தது. இதனால், பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டனி ஈடன் பதவி விலகும் நிலையும் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் சிக்கினார் ராணி. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கன்மேலாய்வுட்டிவ் கட்சியிடம் ஏற்பாடு ஏதுமில்லை. எனவே, தொடர் கலந்தாய்வுக்கு பிறகு ஹரால்டு மேக்மிலனுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ராணி.
லார்டு ஆல்ட்ரிங்கம், ராணியின் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்தார். அவரது அரசவை “மேலதிக பிரிட்டிஷ்” தன்மையுடன் இருப்பதாகவும், “மேல் வகுப்பு” தன்மையுடன் இருப்பதாகவும், தயாரிக்கப்பட்ட உரை இல்லாமல் அவரால் ஓர் எளிய உரையை கூட ஆற்ற முடியவில்லை என்றும் ஒரு பத்திரிகை கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்து பத்திரிகைகளில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தியது. ‘லீக் ஆஃப் எம்பயர் லாயலிஸ்ட்’ (பேரரசு விசுவாசக் கூட்டமைப்பு) என்ற அமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஆல்ட்ரிங்கத்தை தெருவில் தாக்கினார்.
எனினும், பிரிட்டிஷ் சமூகமும், முடியாட்சி தொடர்பில் அதன் அணுகுமுறையும் வேகமாக மாறிவருவதையும், பழைய உறுதிப்பாடுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதையும் இந்த சம்பவம் காட்டியது.
முடியரசில் இருந்து அரச குடும்பத்துக்கு…
அரசவை நெரிசல் குறித்து பொறுமை இழந்திருந்த தமது கணவர் தந்த ஊக்கத்தால் ராணி புதிய ஒழுங்கை கடைபிடிக்கத் தொடங்கினார்.
அரசவைக்குப் புதிதாக வருகிறவர்களை வரவேற்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டது; ‘முடியரசு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது படிப்படியாக மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக ‘அரச குடும்பம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
1963-ஆம் ஆண்டு ஹரால்டு மேக்மிலன் பிரதமர் பதவியில் இருந்து விலகியபோது ராணியை மீண்டுமொரு முறை அரசியல் சிக்கல் சூழ்ந்தது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முறை ஒன்றை கன்மேலாய்வுட்டிவ் கட்சி உருவாக்காமல் இருந்ததால், மேக்மிலனின் ஆலோசனையையே பெற்று அவரது பதவிக்கு ஏர்ல் ஆஃப் ஹோமை நியமித்தார் ராணி.
அரசமைப்புச் சட்டரீதியில் சரியாக நடந்துகொள்வது மற்றும் சமகால அரசாங்கத்திடம் இருந்து முடியரசை மேலும் பிரித்துவைப்பது ஆகியவையே எலிசபெத் ஆட்சியின் முத்திரையாக இருந்தது. இந்நிலையில் இந்த அரசியல் சிக்கல் நிகழ்ந்த காலம் ராணிக்கு கடினமான காலமாக இருந்தது.
அரசாங்கம் குறித்த தகவல்களைப் பெறுவதற்கான தமது உரிமையை, அறிவுரை வழங்குவதற்கும் எச்சரிப்பதற்குமான உரிமையை ராணி முக்கியமானதாக எடுத்துக் கொண்டார். ஆனால் அதைத் தாண்டி செல்ல அவர் முனையவில்லை.
அது போன்ற நிலைமை அவருக்கு ஏற்பட்டது அதுவே கடைசி முறை. கட்சித் தலைவர்கள் தாமாக உருவாகும் மரபை ஒழித்து சரியான வழிமுறை ஒன்றினை உருவாக்கிக்கொண்டது கன்மேலாய்வுட்டிவ் கட்சி.
அமைதியான மனநிலை
அரச குடும்பத்தை குறைந்த சம்பிரதாயத் தன்மையுடையதாகவும், அதிகம் அணுகத்தக்கதாகவும் காட்டுவதற்கு நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று 1960களின் பிற்பகுதியில் முடிவு செய்தது பக்கிங்ஹாம் அரண்மனை.
இதன் விளைவாக உருவானதே ‘ராயல் ஃபேமிலி’ என்ற அதிரடியான ஆவணப்படம். வின்ட்சர் இல்லத்தைப் படமெடுக்க பிபிசிக்கு அனுமதி கிடைத்தது. அரச குடும்பத்தினர் பார்பெக் அடுப்பில் சமைக்கிற, கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கிற, குழந்தைகளை சவாரி அழைத்துச் செல்கிற சாதாரண நடவடிக்கைகளை காட்டும், ஆனால் இதுவரை பார்த்திராத, பல புகைப்படங்கள் அந்த வீட்டில் இருந்தன.
ரிச்சர்ட் காஸ்டன் எடுத்த ‘ராயல் ஃபேமிலி’படம், குறிப்பாக பால்மோரல் கோட்டையின் தரையில் பார்பெக் அடுப்பில் எடின்பர்க் கோமகன் சாஸ் சமைக்கும் காட்சிகள் உள்ளிட்டவை, அரச குடும்பத்தைப் பற்றிய பிரமிப்பை போக்கி, அவர்கள் சாதாரண மனிதர்களைப் போலிருப்பதாகக் காட்டியதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், இந்தப் படம் அந்தக் காலத்தின் சாவகாசமான மனநிலையை பிரதிபலிப்பதாக, முடியரசுக்கான மக்களின் ஆதரவை மீட்க மிகவும் உதவுவதாக இருந்தது.
1977-இல் எலிசபெத் அரியணை ஏறியதன் வெள்ளிவிழாவை ஒட்டி பேரரசு முழுதும் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டங்கள், தெருக் கொண்டாட்டங்கள் ஆகியவை உண்மையான உற்சாகத்தோடு நடந்தன. பொதுமக்களின் அன்பில் முடியாட்சி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிந்தது. அந்த அன்பின் பெரும்பகுதி ராணிக்கானதாக இருந்தது.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனின் முதல் பெண் பிரதமராக மார்கரெட் தாட்சர் பதவியேற்றார். அரசின் பெண் தலைமைக்கும், ஆட்சியின் பெண் தலைமைக்கும் இடையிலான உறவு சில நேரங்களில் மோசமாக இருந்ததாக சொல்லப்பட்டது.
இடர்பாடுகள்
தாம் தலைமை வகித்த காமன்வெல்த் அமைப்பின் மீது ராணி காட்டிய அக்கறை ஒரு கடினமான விஷயமானது. ஆப்ரிக்கத் தலைவர்களை எலிசபெத்துக்கு நன்கு தெரியும். அவர்களது லட்சியங்கள் குறித்து எலிசபெத் அனுதாபம் கொண்டிருந்தார்.
ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிரான தடைகளுக்கு பிரதமர் ஆட்சேபனை செய்த நிகழ்வு மட்டுமல்லாமல், தாட்சரின் அணுகுமுறையும், மோதல் பாணியும் குழப்பமூட்டும் வகையில் இருந்ததாக எலிசபெத் கருதினார் என்று கூறப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் ராணியின் பொதுக் கடமைகள் தொடர்ந்தன. 1991-ஆம் ஆண்டின் வளைகுடாப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கு சென்ற அவர் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதன்மூலம் அமெரிக்க காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் பேசிய முதல் பிரிட்டிஷ் அரசர்/ராணியாகவும் அவர் ஆனார். “நினைவுக்கு எட்டிய நாள்களில் இருந்தே அவர் சுதந்திரத்தின் நண்பர்,” என்று அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.புஷ் தெரிவித்தார்.
ஆனால், ஓராண்டுக்குப் பிறகு இடர்ப்பாடுகள் அரச குடும்பத்தைப் பாதிக்கத் தொடங்கின.
ராணியின் இரண்டாவது மகன், யார்க் கோமகனும் அவரது மனைவி சாராவும் பிரிந்தனர். இளவரசி ஆனி – மார்க் பிலிப்ஸ் மண வாழ்க்கை முறிந்தது. வேல்ஸ் இளவரசர் – இளவரசி இடையே ஆழ்ந்த மனக்கசப்பு இருந்தது வெளியாகி இறுதியில் அது பிரிவில் முடிந்தது.
ராணிக்குப் பிடித்த இல்லமான வின்ட்சர் கோட்டையில் நிகழ்ந்த பெரிய தீ விபத்தோடு அந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இடர்ப்பாடுகளில் இருந்த அரச குடும்பத்தைப் பற்றிய சோகமான ஆனால் பொருத்தமான குறியீடாக அது அமைந்தது. ஆனால் வின்ட்சர் கோட்டையில் நிகழ்ந்த சேதத்தை சரி செய்வதற்கான செலவினங்களை யார் ஏற்றுக்கொள்வது? வரி செலுத்தும் மக்களா? அல்லது ராணியா? என்று எழுந்த பொது சர்ச்சை அந்த சோகத்தை தணிப்பதாக இருக்கவில்லை.
பொது விவாதத்துக்கு நடுவில் கண்ணியம்
லண்டன் மாநகரில் ஆற்றிய ஓர் உரையில் 1992-ஆம் ஆண்டினை தமது ‘துன்பகரமான ஆண்டு’ என்று குறிப்பிட்ட ராணி, ஊடக விமர்சனங்கள் குறையவேண்டும் என்றால் இன்னும் கூடுதல் வெளிப்படைத்தன்மை உள்ளதாக முடியாட்சி இருக்கவேண்டும் என ஒப்புக்கொண்டதாகத் தெரிந்தது.
“எந்த ஒரு நிறுவனமோ, மாநகரமோ, முடியரசோ, வேறெதுவுமோ அதனை ஆதரிப்பவர்கள், அதனிடம் விசுவாசம் காட்டுகிறவர்கள் தம்மை கூராய்வு செய்யாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆதரிக்காதவர்கள், விசுவாசம் காட்டாதவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஆனால், ஒரே தேசிய சமூகத்தின் அங்கங்கள் நாம் என்பதால் அந்தக் கூராய்வு பெருந்தன்மையோடும், நல்லெண்ணத்தோடும், புரிதலோடும் செய்யப்பட்டால் நல்ல விளைவைத் தரும்.”
முடியாட்சி என்ற நிறுவனம் பெரிதும் தற்காப்பு நிலையில் இருந்தது. வின்ட்சர் கோட்டையை சீரமைக்க நிதி திரட்டுவதற்காக பங்கிங்காம் அரண்மனையைப் பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ராணியும், வேல்ஸ் இளவரசரும் தங்கள் முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு வரி செலுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில், வெளிநாடுகளில், உச்சத்தில் இருந்த காமன்வெல்த் குறித்த நம்பிக்கைகள் நிறைவேறவில்லை. ஐரோப்பாவில் புதிய ஏற்பாடுகள் நிகழ்ந்த நிலையில், தமது பழைய கூட்டாளிகள் குறித்து பிரிட்டன் அக்கறை காட்டுவதை நிறுத்திக்கொண்டது.
காமன்வெல்த்தை அப்போதும் மதிப்புடையதாகக் கருதினார் ராணி. இன ஒதுக்கல் கோட்பாட்டை தென்னாப்பிரிக்கா கைவிட்டபோது அவர் நிறைவாக உணர்ந்தார். 1995 மார்ச்சில் அந்நாட்டுக்குப் பயணம் செய்து தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.
உள்நாட்டில், முடியரசு என்ற நிறுவனத்துக்கு எதிர்காலம் உண்டா என்ற பொதுவெளி விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த நிலையில் அவர் முடியாட்சியின் கண்ணியத்தை கட்டிக்காத்தார்.
வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணம்
புதிய பாதையைக் கண்டறிய பிரிட்டன் போராடிக்கொண்டிருந்த நிலையில் ஆதரவான ஆளுமையாக இருக்க அவர் முயன்றார். சட்டென்று ஒரு புன்னகையின் மூலம் சம்பிரதாயமான ஒரு தருணத்துக்கு ஒளியூட்ட அவரால் முடியும். எல்லாப் பொறுப்புகளையும் விட அவர் அதிகம் மதித்தது தேசத்தின் குறியீடாக அவர் இருந்ததைத்தான்.
ஆனால், 1997 ஆகஸ்டில் பாரிசில் நடந்த ஒரு தேர் விபத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் இறப்பினால் முடியரசு ஆடிப்போனது. ராணியின் மீதே வழக்கத்துக்கு மாறான விமர்சனங்கள் வந்தன.
லண்டன் மாநகரில் பல இடங்களில் மக்கள் கும்பல் கும்பலாக கூடி டயானாவுக்கு மலரஞ்சலி செலுத்தியபோது, மாபெரும் தேசியத் தருணங்களின்போது அவர் செய்ய முயற்சித்த அதே கவனக் குவிப்பை செய்யத் தயங்கினார்.
இளவரசியின் மரணத்துக்குப் பின் நிகழ்ந்த வகையிலான ஆவேசமிக்க பொதுவெளி இரங்கல் நிகழ்வுகளில் இருந்து விலகி நிற்கிற ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் ராணி என்பதை அவரது விமர்சகர்கள் புரிந்துகொள்ளத் தவறினர்.
மேலும் ஓர் அன்பான பாட்டியாக, குடும்ப வட்டத்தின் அந்தரங்கத்தில் இருந்துகொண்டு டயானாவின் மகன்களுக்கு ஆறுதலாக இருக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் நினைத்தார்.
கடைசியில், நேரலையில் தமது மருமகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இழப்புகளும் கொண்டாட்டங்களும்
எலிசபெத் ஆட்சியின் பொன்விழா ஆண்டான 2002ல் ராணியின் தாயும், இளவரசி மார்கரெட்டும் இறந்ததால், ஆட்சிக்கான நாடு தழுவிய கொண்டாட்டம் மங்கியது.
இதெல்லாம் ஒருபுறமும், முடியரசின் எதிர்காலம் குறித்து திரும்பத் திரும்ப நடந்த விவாதங்கள் மறுபுறமும் இருந்தபோதும், பொன்விழா நாளின் மாலையில் ஒரு மில்லியன் மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை எதிரே உள்ள ‘தி மால்’ என்ற ராஜவீதியில் ஒன்று கூடினர்.
2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது 80-ஆவது பிறந்த நாளின்போது எலிசபெத் சம்பிரதாயமற்ற ஒரு நடை சென்றபோது, வின்ட்சர் தெரு ஓரங்களில் ஆயிரக்கணக்கான நலம் விரும்பிகள் கூடி நின்றனர்.
ராணியும் இளவரசர் பிலிப்பும் 2007-ஆம் ஆண்டு தங்கள் திருமண வாழ்வின் 60-ஆவது ஆண்டினை கொண்டாடினர். இதற்கென, ‘வெஸ்ட்மின்ஸ்டர் அபே’வில் நடந்த ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் பொதுமக்கள் 2,000 பேர் பங்கேற்றனர்.
2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மற்றொரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடந்தது. தமது பேரன் கேம்பிரிட்ஜ் கோமான் வில்லியம்- கேத்தரின் மிடில்டன் திருமண நிகழ்வில் ராணி பங்கேற்றார்.
அந்த ஆண்டு மே மாதம் ஐரிஷ் குடியரசுக்குச் சென்றார் ராணி. பிரிட்டிஷ் அரசர்/ராணி ஒருவர் ஐரிஷ் குடியரசுக்கு அரசுமுறைப் பயணம் செல்வது அதுவே முதல் முறை. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.
அங்கு நிகழ்த்திய தமது உரையை ஐரிஷ் மொழியில் தொடங்கிய எலிசபெத் பொறுமை மற்றும் நல்லிணக்கம் பேணவேண்டும் என்று வலியுறுத்தினார். “நாம் விரும்பும் விஷயங்கள் வேறுவிதமாக செய்யப்படுவது அல்லது செய்யப்படாமலே போவது” குறித்து அவர் பேசினார்.
கருத்து வாக்கெடுப்பு
ஓராண்டுக்குப் பிறகு, வைரவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வட அயர்லாந்து சென்ற அவர் முன்னாள் ஐ.ஆர்.ஏ. கமாண்டர் மார்ட்டின் மெக்கின்னஸ்-உடன் கைகுலுக்கினார்.
அது ராணிக்கு ஓர் இறுக்கமான உணர்வைத் தந்த நிகழ்வு. அவரது அன்புக்குரிய உறவினர் லூயிஸ் மௌன்ட்பேட்டன் பிரபு ஐ.ஆர்.ஏ. அமைப்பின் வெடிகுண்டில் 1979-இல் இறந்துபோனார்.
வைர விழா கொண்டாட்டம் பல லட்சம் மக்களை வீதிக்கு அழைத்து வந்தது. லண்டன் நகரில் நடந்த வார இறுதி நிகழ்வு ஒன்றில் அந்தக் கொண்டாட்டம் நிறைவடைந்தது.
2014 செப்டம்பரில் நடந்த ஸ்காட்லாந்து விடுதலைக்கான கருத்து வாக்கெடுப்பு ராணிக்கு ஒரு சோதனைக் காலம். 1977-இல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அவர் ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதனை சிலர் மறந்திருந்தனர்.
“இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் அரசர்கள், ராணிகளை, எனது முன்னோர்களில் உள்ள வேல்ஸ் இளவரசர்களை நான் எண்ணிப்பார்க்கிறேன். எனவே இந்த விருப்பார்வங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கிரேட் பிரிட்டன் மற்றும் வட அயர்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் முடியரசி நான் என்பதை என்னால் மறக்க முடியாது.”
ஸ்காட்லாந்து கருத்து வாக்கெடுப்பை ஒட்டி பால்மோரல் கோட்டையில் நலம் விரும்பிகளிடையே பேசிய அவர், வெளியே கசிய வேண்டுமென்பதற்காகவே பேசியது அது, தங்கள் எதிர்காலம் குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு சிந்திப்பார்கள் என்று தாம் நம்புவதாக கூறினார்.
வாக்கெடுப்பின் முடிவு வெளியான பிறகு அவர் வெளியிட்ட பொது அறிக்கையில், அரசியல் பரப்பு மாறியிருப்பது குறித்த புரிதல் வெளிப்பட்டிருந்தாலும், ஐக்கியம் நிலைத்திருப்பது குறித்து அவருக்கு உண்டான நிம்மதி அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது.
“இப்போது, முன்னோக்கிச் செல்லும்போது, பலவிதமான கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தாலும், நம்மிடையே ஸ்காட்லாந்துக்கான நீடித்த அன்பு என்பது பொதுவாக இருந்தது; நாம் இணைந்திருக்க உதவிய விஷயங்களில் அதுவும் ஒன்று என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.”
தமது முப்பாட்டி விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தின் நீளத்தை 2015 செப்டம்பர் 9 அன்று எலிசபெத்தின் ஆட்சிக் காலம் விஞ்சியது. பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நீண்டகாலம் அரசாட்சி செய்தவராக அந்த தேதியில் ஆனார் எலிசபெத். வழக்கமான பாணியில், அமளி ஏதுமின்றி, இந்தப் பதவிக்கு வரவேண்டுமென்று தாம் விரும்பியதில்லை என்று அப்போது குறிப்பிட்டார்.
அதன் பிறகு ஓராண்டுக்குள், தமது 90-ஆவது பிறந்த நாளை 2016 ஏப்ரலில் கொண்டாடினார் அவர்.
அவரது அரசாட்சிக் காலம் தொடங்கியபோது இருந்த அளவுக்கு அந்த அரசாட்சி முடிந்த போது முடியரசு வலிமையாக இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், பிரிட்டிஷ் மக்களின் இதயத்தில் அன்புக்கும் மரியாதைக்கும் உரியதாக அது தொடர்ந்து நீடித்திருக்கவேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.
வெள்ளிவிழா நிகழ்வின்போது, 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது அவர் மேற்கொண்ட உறுதிமொழியை நினைவுகூர்ந்தார்.
“நான் 21 வயதாக இருந்தபோது, நம் மக்களுக்கு சேவை செய்ய என் வாழ்வை அர்ப்பணிப்பதாக உறுதி எடுத்துக்கொண்டேன். அந்த உறுதிமொழியை நிறைவேற்ற கடவுளின் உதவியை கேட்டேன். அந்த வாக்குறுதி என் இளம் வயதில், முடிவெடுப்பதில் அனுபவமற்றிருந்தபோது எடுக்கப்பட்டது என்றாலும் அந்த உறுதிமொழியின் ஒரு சொல் குறித்தும் நான் வருத்தப்படவோ, ஒரு சொல்லில் இருந்தும் பின்வாங்கவோ இல்லை”.
Source: BBC.com