Press "Enter" to skip to content

ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படப்போவது எப்படி?

  • டேவிட் பிரௌன்
  • பிபிசி நியூஸ் விஷுவல் ஜர்னலிசம் குழு

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு அக்டோபர் 16ஆம் தேதி பெய்ஜிங்கில் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கட்சியில் இரண்டு முறை மட்டுமே பொதுச்செயலாளராக இருக்க முடியும் என்ற விதி கடந்த 2018ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவர் பொதுச் செயலாளராவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இது சீனா மீதான அவரது பிடியை மேலும் இறுக்கும்.

அதோடு, 69 வயதான ஷி ஜின்பிங் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது.

அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கவுள்ள அந்த மாநாடு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களில் ஒன்றாகும்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

ஷி ஜின்பிங் தற்போது வகிக்கும் பதவிகள்

  • பொதுச் செயலாளர் என்ற முறையில் அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக உள்ளார்.
  • அதிபர் என்ற முறையில் அவர் சீனாவின் தலைவர்.
  • சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக அவர் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு தலைமை தாங்குகிறார்.

அவர் சீனாவின் உயர்ந்த தலைவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

சீனாவின் தலைமைத்துவம்

சீனாவின் தலைமைத்துவம்

இந்த மாநாட்டில் ஷி ஜின்பிங், தன்னுடைய பொதுச்செயலாளர் மற்றும் மத்திய ராணுவ ஆணையத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த மாநாடானது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அடுத்த ஆண்டின் வசந்த காலத்தில் நடைபெறும் வருடாந்திர தேசிய மக்கள் கூட்டத்தில் அதிபர் பதவியை அவர் தக்கவைத்துக் கொள்ளலாம்.

இந்த மாநாட்டில் என்ன நடக்கும்?

சுமார் 2,300 பிரதிநிதிகள் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மண்டபத்தில் ஒரு வாரத்திற்கு கூடுவார்கள்.

அவர்களில் சுமார் 200 பேர் கட்சியின் மத்தியக் குழுவில் இணைவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் 170 பேர் வரை மாற்று உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்சியின் முதன்மை கொள்கைக் குழுவான பொலிட் பீரோவிற்கு 25 பேரை மத்திய குழு தேர்வு செய்யும். பொலிட் பீரோ நிலைக்குழு உறுப்பினர்களை நியமிக்கும்.

மிகப்பெரும் தலைவர்களே நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் உட்பட 7 பேர் தற்போது அந்தப் பொறுப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள்.

சீனா முக்கிய தலைமைகள்

அனைத்து நடவடிக்கைகளும் இந்த மாநாட்டில் எடுக்கப்படுவதில்லை. பிரதான மாநாடு முடிந்த மறுநாள் மத்தியக் குழு கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது?

மூன்றாவது முறையாக அதிகாரம் வழங்கப்பட்டதும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் மற்றும் மிகப்பெரிய ராணுவப் படைகளுக்கு ஷி ஜின்பிங் தன்னுடைய தலைமையைத் தொடர்வார்.

தன்னுடைய மூன்றாவது ஐந்தாண்டு காலத்தில் அவர் சீனாவை இன்னும் எதேச்சதிகார அரசியல் நிலைப்பாட்டை நோக்கி தள்ளக்கூடும் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஷி ஜின்பிங் தலைமையில் சீனா சர்வாதிகார திசையில் நகர்வதாகக் கூறுகிறார் லண்டன் பல்கலைக் கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்க ஆய்வுப் பள்ளியின் பேராசிரியர் ஸ்டீவ் சாங்.

“மாவோ தலைமையிலான சீனா ஒரு சர்வாதிகார அமைப்பாக இருந்தது. நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. ஆனால், அந்தத் திசையை நோக்கிச் செல்கிறோம்” என்றும் அவர் கூறுகிறார்.

“ஷி ஜின்பிங்கின் சிந்தனை, கட்சியின் வழிகாட்டும் தத்துவமாக மேலும் பொறிக்கப்படுவதன் மூலம் கட்சியின் அமைப்பு சார்ந்த மாற்றங்களைக் காண முடியும்” என்கிறார் பேராசிரியர் ஸ்டீவ் சாங்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

ஷி ஜின்பிங் சிந்தனை என்பது சீன சோசலிசத்தின் தனி அடையாளம். இது தனியார் வணிகத்தில் நம்பிக்கையற்ற உறுதியான தேசியவாத தத்துவம். அவரது தலைமையின் கீழ் சீன அதிகாரிகள் பொருளாதாரத்தின் பல துறைகளில் உள்ள சக்திவாய்ந்த நிறுவனங்களை ஒடுக்கியுள்ளனர்.

“ஷி ஜின்பிங்கிற்கு மீண்டும் அதிகாரம் கையளிக்கப்பட்டால், அவர்கள் திறம்பட அவரை சர்வாதிகாரியாக மாற்றுவார்கள்” என்கிறார் பேராசிரியர் சாங்.

மாநாட்டில் அமைக்கப்படும் சீனாவின் உயர்மட்ட தலைமைக் குழு, பெரிய அளவிலான கொள்கைகளை உருவாக்கும்.

பொருளாதாரம், அரசியல், ராஜதந்திர நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் சீனாவின் எதிர்கால நகர்வுகள் தொடர்பான எந்தக் குறிப்பும் உலகம் முழுவதும் கவனிக்கப்படும்.

பொருளாதார சவால்கள்

சமீபத்திய தசாப்தங்களில் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டிருந்தாலும், கொரொனா பொதுமுடக்கம், விலைவாசி அதிகரிப்பு மற்றும் சொத்து நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக தற்போது கடும் நெருக்கடிகளை சீனா எதிர்கொள்கிறது.

யுக்ரேன் போரினால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை பற்றிய வளர்ந்து வரும் அச்சங்களும் சீனாவின் நம்பிக்கையை சேதப்படுத்தியுள்ளன.

சீன தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் மற்றும் நல்ல வேலைகளை வழங்குவதில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் சட்டப்பூர்வமான தன்மையில் தேக்கம் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் மோசமான பொருளாதார செயல்திறன் ஷி ஜின்பிங்குக்கு கடும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தலாம்.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி

கொரோனா ஒழிப்பு

சீனாவின் பூஜ்ஜிய கொரோனா அணுகுமுறை ஷி ஜின்பிங்கின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.

உலகின் பெரும்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், சீன அதிகாரிகள் கடுமையான முடக்கம், சோதனைகள் மற்றும் நீண்ட தனிமைப்படுத்தல்களுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய வாரங்களில் ஷென்சென் மற்றும் செங்டு உட்பட 70க்கும் மேற்பட்ட நகரங்கள் முழு அல்லது பகுதியளவு முடக்க நடவடிக்கைகளின் கீழ் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பெரும் எண்ணிக்கையிலான வணிகங்கள் சீர்குலைந்துள்ளன.

தனது கொரோனா கொள்கையைச் சிதைக்கும், சந்தேகிக்கும் அல்லது மறுக்கும் எந்தவொரு வார்த்தை மற்றும் செயல்களுக்கு எதிராக உறுதியுடன் போராடுவேன் என ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

இந்த மாநாட்டின்போது, ஷி ஜின்பிங்குடைய திறமையின் பிம்பத்தை சேதப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் அபாயம் உள்ளது.

தொற்றுநோய்க்கு எதிரான வெற்றியை அறிவிக்கவும் பூஜ்ஜிய கொரோனா கொள்கையை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்த மாநாட்டை கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தக்கூடும் என்று சில பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மாறாக, மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் பொருளாதாரத்தைவிட மக்களின் உயிருக்கு சீனா மதிப்பளிக்கிறது. இந்தக் கொள்கை தொடரும் என்றும் கட்சி கூறலாம்.

தைவான் மற்றும் மேற்கு நாடுகள்

மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளில், குறிப்பாக தைவான் விவகாரத்தில் கடுமையான அணுகுமுறையை ஷி ஜின்பிங் கடைபிடிக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் தைவானுக்கு சுற்றுப்பயணம் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீவைச் சுற்றி ஏவுகணை ஏவுதலை உள்ளடக்கிய ராணுவப் பயிற்சிகளை சீனா மேற்கொண்டது.

தைவானை பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பிரிந்து சென்ற மாகாணமாக சீனா பார்க்கிறது. ஆனால், தைவான் தன்னை தனிநாடாகக் கருதுகிறது.

அண்டை நாடுகளோடு சீனாவும் தைவானும்

சீன மக்கள் குடியரசின் நூற்றாண்டு விழா 2049ஆம் ஆண்டில் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அதற்குள் தைவானுடனான மறு ஒருங்கிணைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.

சீனா தைவானை கைப்பற்றினால் மேற்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் அமெரிக்காவின் பலம் குறையும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

‘முதல் தீவு சங்கிலி’ என அறியப்படும் தொகுப்பில் ஒரு பகுதியாக இருக்கும் தைவான், மேற்குலக நாடுகளின் வியூக வகுப்பில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. பல தசாபதங்களாக அமெரிக்காவுடன் இணைந்துள்ள பல பகுதிகளும் இதன் ஒருபகுதியாக உள்ளன.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »