Press "Enter" to skip to content

கணினிமய ரம்மி தடைச் சட்டம் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: முதலமைச்சர் பேசியது என்ன?

கணினிமய சூதாட்டங்களைத் தடைசெய்யும் கணினிமய சூதாட்ட தடைச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டில் கணினிமய ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துவரும் நிலையில், இந்த விளையாட்டைத் தடைசெய்ய வேண்டுமென பரவலான கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து இந்த விளையாட்டைத் தடைசெய்யும் சட்டம் அ.தி.மு.க. ஆட்சியிலேயே நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இது தொடர்பாக அவசரச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு இது தொடர்பாக சட்டம் இயற்றி அனுப்பப்பட்டது. இந்தச் சட்டம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பல்வேறு விளக்கங்களைக் கோரி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, இதே சட்டத்தை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்ப மாநில அரசு முடிவுசெய்ததது. அதன்படி இன்று இந்தச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல்செய்யப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மிகுந்த வேதனையோடு பேசுவதாகக் குறிப்பிட்டார். “மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் உரையை தொடங்குகிறேன்.

சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், கணினிமய ரம்மி சூதாட்டத்தில் 17 இலட்சம் ரூபாய் வரை இழந்து, அந்தக் கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு, இறந்து போயிருக்கிறார். ”தயவு செய்து கணினிமய ரம்மியை தடை செய்யுங்கள்; என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டுச் செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ”எனது தற்கொலையே கடைசி தற்கொலையாக இருக்கட்டும்” என்று எழுதி வைத்துவிட்டு, சென்னையைச் சேர்ந்த வினோத்குமார் தற்கொலை செய்துள்ளார்.

இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டத்தைக் கையில் வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்துதான், இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்தோம். அரசின் சார்பில் அமைக்கப்பட்ட இக்குழு 27-6-2022 அன்று தனது அறிக்கையினை என்னிடம் வழங்கியது.

இணையதள விளையாட்டைத் தடுப்பது தொடர்பாக அரசால் இயற்றப்பட்ட, உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழி விளையாட்டுத் தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம் 7-8-2022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து 10,735 மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. அதில், 10,708 மின்னஞ்சல்களில், இணையதள சூதாட்டத்தையும், இணையதள ரம்மி விளையாட்டையும் தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 மின்னஞ்சல்களில் மட்டுமே தடை செய்வதற்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக் கல்வித் துறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலும், இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26.9. 2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்டம், 2022, ஆளுநரால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மேற்கண்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 என்று பெயர். இந்தச் சட்டமானது கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி சட்டத் துறையால் அனுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காத ஆளுநர், நவம்பர் 23ஆம் தேதி சில விளக்கங்களைக் கேட்டிருந்தார். இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் இந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவானது சட்டமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.

இந்தச் சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அரசியல் காரணங்களில், கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம், அப்படி எழுவது இயற்கையானதுதான். ஆனால், மனித உயிர்களைப் பலி வாங்கும் கணினிமய சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ‘எனது மரணம் கடைசியாக இருக்கட்டும்’ என்ற சோகக் குரலும், ‘என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது’ என்ற அழுகுரலும் இனியொரு முறை இந்த மாநிலத்திலும் எழக்கூடாது. எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும்

மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் – மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதென்று மிகத் தெளிவாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த கணினிமய அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அப்பாவு

இதற்குப் பிறகு ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒரு உறுப்பினர் பேச அனுமதிக்கப்பட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியிலிருந்து அக்கட்சியின் தலைவர் வேல் முருகன், அதற்குப் பிறகு ஈஸ்வரன், அதற்குப் பின் ஜவாஹிருல்லா, ஆளூர் ஷா நவாஸ், நயினார் நாகேந்திரன், கு. செல்வப்பெருந்தகை, அ.தி.மு.கவின் சார்பில் தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசினர். இதற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேசவும் சட்டமன்றத் தலைவர் அப்பாவு வாய்ப்பளித்தார்.

இந்தப் பேச்சுகளில் ஆளுநரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவேண்டாம் என சபாநாயகர் கேட்டுக்கொண்டார். வேல்முருகன் பேசியதில் சில வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. வேல்முருகன் பேசிய சில கருத்துகளுக்கு பா.ஜ.கவின் நயினார் நாகேந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார். மீண்டும் ஒரு குழு அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி சட்டத்தை இயற்ற வேண்டும் என அவர் கூறினார்.

அ.தி.மு.கவின் சார்பில் ஏற்கனவே தளவாய் சுந்தரம் பேசிய பிறகு, ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், இது மிக முக்கியமான சட்டம் என்பதால், முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததாக அப்பாவு விளக்கமளித்தார்.

இதற்குப் பிறகு ஒரு மனதாக இந்தச் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »