‘நறுவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பா.ரஞ்சித், அந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் என்று பேசியிருக்கிறார்.
ஒன் டே புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘நறுவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இதில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, ‘பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்தும் சூழ்நிலையில் இன்று நறுவி படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இயக்குனர் போல தான் நானும் அட்டக்கத்தி விழாவில் பதற்றமாக இருந்தேன்.
நறுவி படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன். இங்கு படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றியடையணும்.
இசை அமைப்பாளர் கிறிஸ்டிக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பாக இருக்கும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.
Source: Malai Malar