வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.
இந்நிலையில் மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மிஷ்கினின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு, இப்படத்தை நிறைவு செய்தபின் மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Malai Malar