Press "Enter" to skip to content

இந்தியன்-2 விபத்து தொடர்பான விசாரணைக்கு கமல்ஹாசன் ஆஜர்

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 19-ந்தேதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் விழுந்து உதவி இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக் குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இயக்குநர் ‌ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். கடந்த பிப்.27-ந்தேதி இயக்குநர் ‌ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து குறித்து 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பினர். இதை ஏற்று இன்று காலை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமல்ஹாசன் விசாரணைக்காக அஜரானார். கமல்ஹாசனிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசனிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. கமல்ஹாசன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »