Press "Enter" to skip to content

விசு மறைவுக்கு ரஜினி இரங்கல்: தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் அனுதாபம்

நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியியுள்ளார்.

சென்னை:

டைரக்டர் விசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகரான விசு உடல் நலக்குறைவினால் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத்திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

பிரதமர் நரேந்திர மோடி செயல்களால் ஈர்க்கப்பட்டு 2016- ம் ஆண்டு தன்னை பாரதீய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டு மக்கள் பணியாற்ற பா.ஜ.க.வில் இணைந்ததாகவும், தமிழகத்தில் மக்கள் விரும்பும் மாற்றத்தை பா,ஜனதாவால் மட்டுமே தர முடியும் என்றும் தெரிவித்தார்.

அவருடைய இழப்பு பாரதீய ஜனதா கட்சியினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும். கலைத்துறையினருக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என கலையுலகில் பன்முகத்தன்மையுடன் சிறந்து விளங்கியவரான விசு மறைவு மிகுந்த வருத்த மளிக்கிறது.

சமுதாய கருத்துகளை நகைச் சுவையாக, நாகரிகமாக எடுத்து சொல்வதில் ஆற்றல்மிக்கவர் விசு. தனது திரைப்படங்களின் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பாசசிக்கல்களை நகைச்சுவை உணர்வோடும், எதார்த்தமாகவும், அழுத்தமாகவும் எடுத்து கூறியவர்.

சம்சாரம் அதுமின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், நாணயம் இல்லாத நாணயம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி என திரைப்படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு அளிப்பதில் வல்லவர்.

அவரது இழப்பு நாடகம், திரைத்துறை, சின்னத்திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »