Press "Enter" to skip to content

வழிவிடுமா காலம்…. விஜய் சேதுபதிக்காக கதையுடன் காத்திருக்கும் சேரன்

விஜய் சேதுபதிக்காக கதையை தயார் செய்து வைத்துள்ள சேரன், அது செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு புதிய படத்தை இயக்குவதற்கான கதையை தயார் செய்துள்ளார். இந்த கதையை முன்னணி நடிகர்களிடம் சொல்ல நேரம் கேட்டும் அவர்கள் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் இதன் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. தற்போது தவமாய் தவமிருந்து படத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு பாராட்டியவருக்கு சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ள சேரன், “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. 

ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும், தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழிவிடுமா காலம்” என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இது தவமாய் தவமிருந்து படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »