தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து பிரபாஸின் 21-வது படம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் அப்படத்தை இயக்க உள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் வில்லனுக்கு பவர்புல் வேடம் என்பதால், அரவிந்த் சாமியை தேர்வு செய்துள்ளார்களாம். இவர் தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக அனைவரையும் கவர்ந்தார். அதன் தெலுங்கு பதிப்பான துருவா படத்திலும் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: Malai Malar