விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பின்னணி பணிகள் தாமதமானது. படம் ரிலீஸ் ஆவதும் தாமதமானது.
இந்நிலையில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுத்ததை தொடர்ந்து பின்னணி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் ஆகியோருடன் இணைந்து ‘மாஸ்டர்’ கதையை எழுதிய பொன் பார்த்திபன், தனது சமீபத்திய பேட்டியில் படம் குறித்த முக்கிய தகவலை கூறியிருக்கிறார். அதாவது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிஜ வாழ்க்கையில் ஒரு நபரின் கதையால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளார்.
Source: Malai Malar