விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு – திரிஷா கூட்டணியில் வெளியாகி காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் பாடல்கள், இசை, கதையமைப்பு, வசனம் ஆகியவை அனைத்து தரப்பிலும் கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், அதன் அடுத்த பாகத்தை எழுதி முடித்துள்ளார் கவுதம் மேனன். அடுத்தடுத்த படங்களில் அவர் பிஸியானதால் அதனை கிடப்பில் போட்டிருந்தார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு விழிப்புணர்வுக்காக அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறும்படமாக எடுத்துள்ளார். வீட்டிலிருந்தபடியே இந்த குறும்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன். சிம்பு மற்றும் திரிஷா செல்போனில் உரையாடுவது போன்று இந்த குறும்படம் அமைந்துள்ளது.
இந்த குறும்படத்திற்கான வசனத்தை கவுதம் மேனன் அனுப்பியபோது, அதனை படித்தவுடன் சிம்பு அழுதுவிட்டாராம். பின்னர் கவுதம் மேனனிடம், இதனை குறும்படத்துடன் நிறுத்திவிடக்கூடாது, கண்டிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் பண்ணனும் என சொன்னாராம். மேலும் அதன் ஷுட்டிங்கிற்காக எப்போது வேண்டுமானாலும் தேதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாக சிம்பு உறுதியளித்தாராம். இதன்முலம் விண்ணைத்தாண்டி வருவாயா-2 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Malai Malar