Press "Enter" to skip to content

ஜெயிலைப்பற்றி காத்தோடு ஒரு நல்ல செய்தி வரும் – வசந்தபாலன்

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தைப்பற்றி விரைவில் ஒரு நல்ல செய்தி காத்தோடு வரும் என அப்படத்தின் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் ஜெயில். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும், ஒருசில காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிப்போனது. கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா அதற்கு தடையாக அமைந்தது.

இந்நிலையில், விரைவில் ஜெயிலைப்பற்றி காத்தோடு ஒரு நல்ல செய்தி  என வசந்தபாலன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: ஜெயில் என்று பெயர் சூட்டியதால் என்னவோ ஜெயில் வெளிவர இயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது. எட்டுதிசையெங்கும் தட்டினோம். குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை. 

ஆழ்துளைகிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம். இதற்கிடையில் கொரோனோ வேறு உலகை தன் பிடிக்குள் வைத்து கொண்டு ஆட்டிப்படைக்கிறது. கொரோனோ வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக வருகிற செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக்கீற்று தெரிகிறது. ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது. விரைவில் ஜெயிலைப்பற்றிய நல்ல செய்தி காத்தோடு காத்தாக பரவும் என்ற நம்பிக்கையோடு இந்த நாளை திறக்கிறேன்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »