ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு ஆர்கே.செல்வமணி பதிலளித்துள்ளார்.
ஊரடங்கினால் சினிமா தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திரைத்துறையில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர், தவிக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக சமூகவலைதளங்களில் அறிவித்தனர்.
இந்நிலையில், சென்னை வடபழனியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தொழில்துறைக்கு கிடைக்கக் கூடிய எந்தவித உதவிகளும் தயாரிப்பாளர்களுக்கோ தொழிலாளர்களுக்கோ கிடைப்பதில்லை என்றார். சினிமாவை தொழில்துறை என்று அரசு கூறுவதால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கக் கூடிய வீடு உள்ளிட்ட சலுகைகளும் கிடைப்பதில்லை என தெரிவித்தார். இதற்கு மத்திய மாநில அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரஜினி, விஜய், அஜித் சம்பளம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் வணிகத்திற்கு ஏற்ப சம்பளம் குறைக்க வேண்டிய நிலை என்பது கட்டாயம் வரும் என கூறினார்.
Source: Malai Malar