Press "Enter" to skip to content

ரசிகர்களின் இல்லம் தேடி வரும் இளையராஜா

தனது பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்டுள்ள இளையராஜா, ரசிகர்களின் இல்லம் தேடி வருவதாக கூறி இருக்கிறார்.

இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இளையராஜா. 

அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்தக் கொரோனா காலகட்டம் தடுக்கிறது. இருந்தாலும் உங்கள் அன்பு உள்ளங்களை நான் நன்றாக அறிவேன். உங்களுடனேயே இசை வடிவில் நான் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எனக்கும் நன்றாக தெரியும். 

எந்த நிமிடமானாலும் சரி, எந்த ஒரு நிகழ்வானாலும் சரி, என்னுடைய இசை உங்களுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். வெறும் இசை மட்டும் வந்தால் போதுமா? நான் வர வேண்டாமா உங்கள் இல்லத்துக்கு. 

இசை ஓடிடி மூலமாக உங்கள் இல்லம் தேடி நானே வருகிறேன். இந்த இசை ஓடிடி புதிதாக தொடங்க இருக்கும் செய்தியை உங்களுக்கு இந்த பிறந்தநாளில் சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த இசை ஓடிடியில் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது, என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பது பற்றியும் சொல்ல இருக்கிறேன். 

மேலும் உலக மாபெரும் இசைக்கலைஞர்கள் தங்கள் அனுபவங்களின் மூலமாக அவர்கள் உணர்ந்ததையும், என்னைப் பற்றிய அபிப்ராயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இதெல்லாம் இசை ஓடிடி வழியாக உங்கள் வீடு தேடி வருகிறது. அந்த நாளுக்கு காத்திருங்கள். காத்திருந்தாலும் அது வீண்போகாது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »