கேரளாவில் கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தனுஷ் பட நடிகை கூறியுள்ளார்.
கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தபோது, அதற்கு அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து கொடுத்துள்ளனர். இதை அறியாமல் உண்டபோது அதன் வாயில் வெடி வெடித்தது. வலியால் துடித்த அந்த யானை, பின்னர் சில மணி நேரங்களில் தண்ணீரில் நின்றபடி தனது உயிரை மாய்த்துவிட்டது. யானை நீரில் நின்றபடி இருந்த புகைப்படம் காண்பவர்களை கண்கலங்க வைப்பதாக இருந்தது. நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள ரெஜிஷா விஜயன் இதுகுறித்து கூறியதாவது: “அவ்வளவு வலியால் அந்த யானை துடிதுடித்து சுற்றியபோதும் அருகிலுள்ள மக்களுக்கோ, வீடுகளுக்கோ எந்தவித சேதத்தையும் விளைவிக்கவில்லை. தங்களை நம்பி வந்த மிருகத்துக்கு இப்படி ஒரு தீங்கை செய்திருக்கிறார்கள் என்றால் இது குரூரத்தின் உச்சம். இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் கூட மனிதர்கள் செய்வார்களா என நினைத்தே பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
Source: Malai Malar