தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம்வருகிறார் தனுஷ். இவர் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படத்திலும் நடிக்கிறார். இவர் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் லாக்டவுனுக்கு பின் ரிலீசாக உள்ளது. இதனைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பின்னர் பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து அத்ரங்கி ரே எனும் படத்தில் நடிக்கிறார். இதுதவிர கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தனுஷ் நடிக்கும் 43-வது படமாகும். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் ஏற்கனவே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Malai Malar