காட்மேன் வெப் சீரிஸ் சர்ச்சையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ஜீ 5 என்ற டிஜிட்டல் தளத்தில், காட்மேன் என்ற இணையதள தொடரின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது, பிராமணர்களின் மத ரீதியிலான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காட்மேன் தொடர் தயாரிப்பு நிறுவன பிரதிநிதி இளங்கோ, இயக்குநர் பாபு யோகேஸ்வரன் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதியும், முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியுமான செந்தில் குமார் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் குமார், இந்த வழக்கில் டீஸரின் வீடியோ பதிவு ஏற்கனவே காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் இருந்து டீஸர் நீக்கப்பட்டுள்ளது என்பதால் இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
Source: Malai Malar