மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக சின்னத்திரை சீரியல்களுக்கான படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு தொடங்க அரசு அனுமதிக்ககோரி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து நிபந்தனைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை தொடங்க முதலமைச்சர் அனுமதியளித்தார். இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வரும் ஜூன் 19-ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சீரியல்கள் வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
Source: Malai Malar