Press "Enter" to skip to content

‘என்னுடையவர்’… திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி பட கதாநாயகி

விஜய் சேதுபதி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஒருவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹாரிகா. தற்போது அசோக் செலவன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஒக்க மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்ய காந்த, சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்கள் தயாரித்தும் வருகிறார். 

இவர் முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும் மறுத்தனர். நிஹாரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக நாகபாபு கூறியிருந்தார். 

இந்த நிலையில் நிஹாரிகா திருமணம் முடிவாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் நடக்க போகும் தகவலை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். மாப்பிள்ளை முகம் தெரியாத வகையில் கட்டிப்பிடித்தபடி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தற்போது மணமகன் முகம் தெரியும் இன்னொரு படத்தை வெளியிட்டு, அதில் என்னுடையவர் என குறிப்பிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார். மணமகன் பெயர் வெங்கட சைதன்ய ஜோனாலகாடு. குண்டூரை சேர்ந்தவர். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நிஹாரிகாவுக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »