தமிழ்,தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை இலியானா, கவலைகளில் இருந்து மீள யோசனை கூறியுள்ளார்.
தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் கூறியதாவது: “எனக்கு சில நேரங்களில் மனதில் தாங்க முடியாத அளவு வருத்தங்களும் கவலைகளும் ஏற்படும். அந்த நேரத்தில் நான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும் எல்லாமே மாயமாக மறைந்து விடும். எனவே எல்லோரும் இந்த யுக்தியை கையாண்டு கவலைகளில் இருந்து மீளுங்கள்.
உடற்பயிற்சிகள் செய்யும்போது லட்சியத்தை நெருங்கி வருகிறேன் என்ற எண்ணமும் ஏற்படும். நான் குண்டாகி விட்டேன் என்று ஒரு முறை விமர்சனங்கள் வந்தன. அப்போதும் இதுமாதிரி தீவிர உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைத்து பழைய நிலைக்கு மாறினேன். தினமும் புது புது உடற்பயிற்சிகள் செய்கிறேன். ஆன்லைன் பார்த்தும் உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்கிறேன்.
எனது உடற்பயிற்சி நேரம் எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு நாள் 75 நிமிடம், ஒரு நாள் 45 நிமிடம் ஒரு நாள் 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன். ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ரசிகர்கள் அனைவரும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு தடவை செய்து பாருங்கள் அதன் பலன் எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும் என்று உங்களுக்கே தெரியும்.” இவ்வாறு இலியானா கூறினார்.
Source: Malai Malar