Press "Enter" to skip to content

இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது: கடந்து செல்வதே சிறந்தது- ஏ.ஆர். ரகுமான்

இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:-

பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.

‘தில் பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று. 

பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன். 

இவ்வாறு ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.

இவ்வாறு கூறிய ரஹ்மானுக்கு சினிமா உலகம் ஆதரவு தெரிவித்து வருகிறது. சேகர் கபூர் ‘‘பாலிவுட் உங்களை கையாண்டதை விட அதிகமான திறமை உள்ளதை நிரூபித்து விட்டீர்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஹ்மான் ‘‘இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம், ஆனால், நாமது வாழ்க்கையில் இழந்த முக்கியமான நேரத்தை ஒருபோதும் திரும்ப பெற முடியாது. அமைதி! இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். செய்வதற்கு இன்னும் சிறந்த விசயங்கள் உள்ளன’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »