சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், லாரன்ஸ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தினார். பின்னர் சிம்ரன் சந்திரமுகியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அவரும் இதனை திட்டவட்டமாக மறுத்தார். சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் பெயர் அடிபட்டது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள லாரன்ஸ், “சந்திரமுகி 2-வில் ஹீரோயினாக ஜோதிகா, சிம்ரன் அல்லது கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வலம் வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் தான். தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பிறகு ஹீரோயின் யார் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Source: Malai Malar