Press "Enter" to skip to content

20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார்… எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் தகவல்

மருத்துவர் உதவியுடன் 20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து காணொளி வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 14) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது:

கடைசியாக 10 ஆம் தேதி உங்களிடம் பேசியிருந்தேன். இன்று தேதி 14. இந்த நான்கு நாட்களில் அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நுரையீரல் செயல்பாடு முன்னேறியுள்ளது. குணமாகி வருவது எக்ஸ்ரேவில் நன்றாகத் தெரிகிறது.

பிசியோதெரபியும் நடந்து வருகிறது. அப்பா அதில் சுறுசுறுப்புடன் பங்கேற்று வருகிறார். மருத்துவர்கள் அப்பாவை உட்கார வைத்தார்கள். அப்பாவால் தொடர்ந்து 15-20 நிமிடங்களுக்கு உட்கார முடிகிறது. வாய் வழியாகச் சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

அனைத்து அறிகுறிகளும் நன்றாக உள்ளன. அப்பா சீராக இருக்கிறார். முன்னேற்றம் தொடர்கிறது. இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »