தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களுள் ஒருவரான சிபிராஜ், முதன்முறையாக மேடை நாடகத்தில் நடிக்க உள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தீரன் சின்னமலை. அவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்க உள்ளனர். இயக்குனர் ஸ்ரீராம் இயக்கும் இந்த நாடகத்தில் தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்க நடிகர் சிபிராஜ் ஒப்பந்தமாகியிருக்கிறார். திரைப்படம் நடிகரான சிபிராஜ், மேடை நாடகத்தில் நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இதுகுறித்து சிபிராஜ் கூறியதாவது: “சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதுவும் மேடை நாடகத்தில் நடிப்பது என்பது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும்.
திரைப்படத்தில் நடிக்கும்போது ஏதாவது தவறு செய்தால் மறுபடியும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது டப்பிங்கில் சரிசெய்துவிடலாம். ஆனால் மேடை நாடகத்தில் அப்படி செய்ய முடியாது. எனவே இது எனது வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, எனது தந்தை சத்யராஜ் உள்பட பெரிய நடிகர்கள் பலர் மேடை நாடகத்தில் இருந்துதான் திரைப்படத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் நடிகர்கள் மேடை நாடகங்களில் நடிப்பது முற்றிலும் குறைந்து விட்டது. இதை உணர்ந்துதான் நான் மேடை நாடகத்தில் நடிக்க சம்மதித்தேன்” என சிபிராஜ் தெரிவித்துள்ளார்.
[embedded content]
Source: Malai Malar