அரசு மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதாரர்கள் போல செயல்படக் கூடாது என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர்.
அப்போது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்தது. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், திரைப்படம் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து பிரபல இயக்குனர் வெற்றிமாறன், தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது: கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும். அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் தான் வழங்கப்படுகிறது.
அரசு மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதாரர்கள் போல செயல்படக் கூடாது. விவசாயிகள் தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். உரிமைக்காக போராடுகிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதே ஜனநாயகம் என பதிவிட்டுள்ளார்.
[embedded content]
Source: Malai Malar